Add parallel Print Page Options

யோபு எலிப்பாசுக்குப் பதிலளிக்கிறான்

16 அப்போது யோபு பதிலாக,

“நான் இவற்றையெல்லாம் முன்பே கேட்டிருக்கிறேன்.
    நீங்கள் மூவரும் எனக்குத் தொல்லையை அல்லாமல் ஆறுதலைத் தரவில்லை.
உங்கள் நீண்ட பேச்சுகளுக்கு முடிவேயில்லை!
    ஏன் தொடர்ந்து விவாதிக்கிறீர்கள்?
எனக்கு வந்த தொல்லைகள் உங்களுக்கு ஏற்பட்டால்
    நீங்கள் சொல்வதையே நானும் சொல்லக் கூடும்.
நானும் ஞானமுள்ள காரியங்களை உங்களுக்குச் சொல்லி,
    என் தலையை உங்களுக்கு நேர் அசைக்கக்கூடும்.
நான் கூறும் காரணங்களால் உங்களுக்கு உற்சாகமூட்டி
    உங்களுக்கு நம்பிக்கையளிக்க முடியும்.

“ஆனால் நான் கூறுபவை எதுவும் என் வேதனையை அகற்ற முடியாது!
    ஆயினும் மௌனமாய் இருப்பதிலும் பயன் இல்லை.
தேவனே, உண்மையாகவே என் பலத்தை எடுத்துப்போட்டீர்.
    என் குடும்பம் முழுவதையும் அழித்தீர்.
நீர் என்னை இணைத்து பலவீனமாக்கினீர்.
    அதனால் நான் குற்றவாளியே என ஜனங்கள் நினைக்கிறார்கள்.

“தேவன், என்னைத் தாக்குகிறார்,
    அவர் என் மீது கோபங்கொண்டு, என் உடம்பைக் கிழித்தெறிகிறார்.
தேவன் எனக்கெதிராக அவரது பற்களைக் கடிக்கிறார்.
    என் பகைவனின் கண்கள் என்னை வெறுப்போடு (பகையோடு) பார்க்கின்றன.
10 ஜனங்கள் என்னைச் சூழ்ந்து ஒன்றுக் கூடி, என்னை பார்த்து நகைத்து,
    என் முகத்தில் அறைகிறார்கள்.
11 தேவன் என்னைத் தீய ஜனங்களிடம் ஒப்படைத்தார்.
    அத்தீயர் என்னைக் காயப்படுத்தும்படிவிட்டார்.
12 எனக்கு எல்லாம் நல்லபடியாக இருந்தன, ஆனால், பின்பு தேவன் என்னை நசுக்கினார்!
    ஆம், அவர் என்னைக் கழுத்தில் பிடித்து, என்னைத் துண்டுகளாக நொறுக்கினார்!
தேவன் என்னை இலக்காகப் பயன்படுத்தினார்.
13 தேவனுடைய வில்வீரர்கள் என்னைச் சூழ்ந்து நிற்கிறார்கள்.
    அவர் என் சிறுநீரகங்கள்மேல் அம்புகளை எய்கிறார்.
அவர் இரக்கம் காட்டவில்லை.
    என் ஈரலின் பித்த தண்ணீரைத் தரையில் சிந்தச் செய்கிறார்.
14 மீண்டும், மீண்டும் தேவன் என்னைத் தாக்குகிறார்.
    யுத்தம் செய்யும் வீரனைப் போல் அவர் என் மேல் பாய்கிறார்.

15 “நான் மிகவும் துயரமுற்றிருக்கிறேன், எனவே துயரத்தைக் காட்டும் இந்த ஆடைகளை அணிந்திருக்கிறேன்.
    நான் இங்குத் துகளிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, நான் தோற்கடிக்கப்பட்டதாய் உணருகிறேன்.
16 அழுது என் முகம் சிவந்திருக்கிறது.
    கருவளையங்கள் என் கண்ணைச் சுற்றிலும் காணப்படுகின்றன.
17 நான் யாரிடமும் கொடுமையாக நடந்துக்கொண்டதில்லை, ஆனால் இத்தீய காரியங்கள் எனக்கு நேரிட்டுள்ளன.
    என் ஜெபங்கள் தூய்மையும் நேர்மையுமானவை.

18 “பூமியே, எனக்குச் செய்யப்பட்ட அநீதிகளை மறைக்காதே.
    நியாயத்திற்கான என் வேண்டுதல் (நிறுத்த) தடுக்கப்படாமல் இருக்கட்டும்.
19 இப்போதும் பரலோகத்தில் யாரேனும் இருந்தால், அவர்கள் எனக்காக பேசுவார்கள்,
    மேலிருந்து யாராவது எனக்காக சாட்சி கூறுவார்கள்.
20 என் கண்கள் தேவனுக்கு முன்னால் கண்ணீரைச் சொரிகையில்
    என் நண்பர்கள் எனக்கு எதிராகப் பேசுகிறார்கள்.
21 நண்பனுக்காக வாதாடுகின்ற ஒரு மனிதனைப் போன்று
    எனக்காக தேவனை வேண்டுகிற ஒருவன் எனக்கு வேண்டும்!

22 “இன்னும் சில ஆண்டுகளில்
    திரும்பமுடியாத அந்த இடத்திற்கு, (மரணம்) நான் போவேன்.”

17 என் ஆவி நொறுங்கிப்போயிற்று
    நான் விட்டு விலகத் தயாராயிருக்கிறேன்.
என் வாழ்க்கை முடியும் நிலையிலுள்ளது.
    கல்லறை எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.
ஜனங்கள் என்னைச் சூழ்ந்து நின்று, என்னைப் பார்த்து நகைக்கிறார்கள்.
    அவர்கள் என்னைக் கேலிச்செய்து, அவமானப்படுத்துவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

“தேவனே, நீர் என்னை ஆதரிக்கிறீர் என்பதை எனக்குக் காட்டும்.
    வேறெவரும் என்னை ஆதரிக்கமாட்டார்கள்.
நீர் என் நண்பர்களின் மனத்தை மூடி வைத்திருக்கிறீர்,
    அவர்கள் என்னை புரிந்துக்கொள்ளார்கள்.
    தயவுசெய்து அவர்கள் வெற்றியடையாதபடிச் செய்யும்.
ஜனங்கள் கூறுவதை நீர் அறிவீர்:
    ‘ஒருவன் அவனது நண்பர்களுக்கு உதவுவதற்காகத் தன் பிள்ளைகளைக்கூடப் பொருட்படுத்தமாட்டான்’
    ஆனால் என் நண்பர்களோ எனக்கெதிராகத் திரும் பியிருக்கிறார்கள்.
எல்லோருக்கும் ஒரு கெட்ட சொல்லாக, தேவன் என் பெயரை மாற்றியிருக்கிறார்.
    ஜனங்கள் என் முகத்தில் உமிழ்கிறார்கள்.
என் கண்கள் குருடாகும் நிலையில் உள்ளன ஏனெனில், நான் மிகுந்த துக்கமும் வேதனையும் உள்ளவன்.
    என் உடம்பு முழுவதும் ஒரு நிழலைப் போல மெலிந்துவிட்டது.
நல்லோர் இதைப்பற்றிக் கலங்கிப்போயிருக்கிறார்கள்.
    தேவனைப்பற்றிக் கவலையுறாத ஜனங்களுக்கு எதிராக, களங்கமற்றோர் கலக்கமடைந்துள்ளனர்.
ஆனால் நல்லோர் நல்ல வழியில் தொடர்ந்து வாழ்கிறார்கள்.
    களங்கமற்றோர் இன்னும் வலிமை பெறுவார்கள்.

10 “ஆனால் நீங்கள் எல்லோரும் வாருங்கள், இது எனது தவறால் விளைந்ததே எனக் காட்ட முயலுங்கள்.
    உங்களில் ஒருவரும் ஞானமுடையவன் அல்லன்.
11 என் வாழ்க்கை கடந்து போகிறது, என் திட்டங்கள் அழிக்கப்பட்டன.
    என் நம்பிக்கை போயிற்று.
12 ஆனால் என் நண்பர்கள் குழம்பிப்போயிருக்கிறார்கள்.
    அவர்கள் இரவைப் பகலென்று நினைக்கிறார்கள்.
    அவர்கள் இருள் ஒளியை விரட்டி விடுமென நினைக்கிறார்கள்.

13 “கல்லறையே என் புது வீடாகும் என நான் எதிர்பார்க்கலாம்.
    இருண்ட கல்லறையில் என் படுக்கையை விரிக்கலாம் என நான் எதிர்பார்க்கலாம்.
14 நான் கல்லறையிடம், ‘நீயே என் தந்தை’ என்றும்,
    புழுக்களிடம் ‘என் தாய்’ அல்லது ‘என் சகோதரி’ என்றும் கூறலாம்.
15 ஆனால் அதுவே என் ஒரே நம்பிக்கையாயிருந்தால், அப்போது எனக்கு நம்பிக்கையே இல்லை!
    அதுவே என் ஒரே நம்பிக்கையாக இருந்தால், அந்த நம்பிக்கை நிறைவுப்பெறுவதை காண்பவர் யார்?
16 என் நம்பிக்கை என்னோடு மறையுமோ?
    அது மரணத்தின் இடத்திற்குக் கீழே போகுமா?
    நாம் ஒருமித்துத் துகளில் இறங்குவோமா?” என்றான்.

பில்தாத் யோபுவுக்குப் பதில் கூறுகிறான்

18 சூகியனான பில்தாத் அப்போது பதிலாக:

“யோபுவே, நீ எப்போது பேசுவதை நிறுத்துவாய்?
    அமைதியாயிருந்து கேளும். நாங்கள் சிலவற்றைச் சொல்ல விடும் (அனுமதியும்).
நாங்கள் பசுக்களைப்போல் மூடரென நீ நினைப்பதேன்?
யோபுவே, உனது கோபம் உன்னையே துன்புறுத்துகிறது.
    உனக்காக ஜனங்கள் பூமியைவிட்டுச் செல்லவேண்டுமா?
    உன்னைத் திருப்திப்படுத்துவதற்காக தேவன் பர்வதங்களை அசைப்பார் என்று நினைக்கிறாயா?

“ஆம், தீயவனின் தீபம் அணைந்துப்போகும்.
    அவனது நெருப்பு எரிவதை நிறுத்தும்.
வீட்டின் ஒளி இருளாகும்.
    அவனருகே ஒளிவிடும் விளக்கு அணைந்துவிடும்.
அவன் அடிகள் வலியதாகவும் விரைவாகவும் இராது.
    ஆனால் அவன் மெதுவாகவும் சோர்வாகவும் நடப்பான்.
    அவனது சொந்த தீய திட்டங்களே அவனை விழச்செய்யும்.
அவனது பாதங்கள் அவனைக் கண்ணிக்குள் வழிநடத்தும்.
    அவன் கண்ணிக்குள் நடந்து அதிலே அகப்பட்டுக்கொள்வான்.
அவன் குதிகாலை ஒரு கண்ணிப் பிடிக்கும்.
    ஒரு கண்ணி அவனை இறுகப் பிடிக்கும்.
10 தரையிலுள்ள ஒரு கயிறு அவனை அகப்படுத்தும்.
    அவன் வழியில் ஒரு கண்ணி அவனுக்காகக் காத்துத்கொண்டிருக்கும்.
11 சுற்றிலும் பயங்கரம் அவனுக்காக காத்துக்கொண்டிருக்கும்.
    அவன் எடுக்கும் ஒவ்வோர் அடியிலும் பயங்கள் அவனைத் தொடரும்.
12 கெட்ட தொல்லைகள் அவனுக்காகப் பசித்திருக்கும்.
    அழிவும், கேடும் அவன் விழும்போது அவனுக்காகத் தயாராக இருக்கும்.
13 கொடிய நோய் அவனது தோலை அரிக்கும்.
    அது அவனது கரங்களையும் கால்களையும் அழுகச் செய்யும்.
14 தீயவன் அவனது வீட்டின் பாதுகாப்பிலிருந்து அகற்றப்படுவான்.
    பயங்கரங்களின் அரசனைச் சந்திக்க அவன் அழைத்துச் செல்லப்படுவான்.
15 அவன் வீட்டில் ஒன்றும் மிஞ்சியிராது.
    ஏனெனில், அவன் வீடு முழுவதும் எரியும் கந்தகம் நிரம்பியிருக்கும்.
16 கீழேயுள்ள அவன் வேர்கள் உலர்ந்துப் (காய்ந்து) போகும்,
    மேலேயுள்ள அவன் கிளைகள் மடிந்துபோகும்.
17 பூமியின் ஜனங்கள் அவனை நினைவு கூரமாட்டார்கள்.
    ஒருவரும் இனிமேல் அவனை நினைத்துப்பார்க்கமாட்டார்கள்.
18 ஜனங்கள் அவனை ஒளியிலிருந்து இருளுக்குள் தள்ளிவிடுவார்கள்.
    அவர்கள் அவனை இந்த உலகிற்கு வெளியே துரத்திவிடுவார்கள்.
19 அவனுக்குப் பிள்ளைகளோ, பேரப்பிள்ளைகளோ இருக்காது.
    அவன் குடும்பத்தில் எவரும் உயிரோடு விட்டு வைக்கப்படமாட்டார்கள்.
20 மேற்கிலுள்ள ஜனங்கள் அத்தீயவனுக்கு நிகழ்ந்ததைக் கேள்விப்படும்போது, அதிர்ச்சியடைவார்கள்.
    கிழக்கிலுள்ள ஜனங்கள் பயங்கர பீதியடைந்து வாயடைத்துப் போவார்கள்.
21 தீயவனின் வீட்டிற்கு அது உண்மையாகவே நடக்கும்.
    தேவனைப்பற்றிக் கவலைப்படாதவனுக்கு இப்படியே நிகழும்!” என்றான்.

யோபு பதில் கூறுகிறான்

19 அப்போது யோபு பதிலாக:

“எத்தனை காலம் நீங்கள் என்னைத் துன்புறுத்தி,
    உங்கள் வார்த்தைகளால் என்னை உடைப்பீர்கள்?
நீங்கள் இப்போது என்னைப் பத்துமுறை இழிவுப்படுத்தியிருக்கிறீர்கள்.
    நீங்கள் என்னைத் தாக்கும்போது வெட்கமடையவில்லை.
நான் பாவம் செய்திருந்தாலும் அது எனது தொல்லையாகும்.
    அது உங்களைத் துன்புறுத்தாது.
என்னைக் காட்டிலும் உங்களைச் சிறந்தவர்களாகக் காட்ட நீங்கள் விரும்புகிறீர்கள்.
    என் தொல்லைகள் என் சொந்தத் தவறுகளால் நேர்ந்தவை என்று நீங்கள் கூறுகிறீர்கள்.
ஆனால் தேவனே எனக்குத் தவறிழைத்தார்.
    என்னைப் பிடிப்பதற்கு அவர் ஒரு கண்ணியை வைத்தார்.
‘அவர் என்னைத் துன்புறுத்தினார்!’ என நான் கத்துகிறேன். ஆனால் எனக்குப் பதிலேதும் கிடைக்கவில்லை.
    நான் உரக்க உதவிக்காகக் கூப்பிட்டாலும், நியாயத்திற்காக வேண்டும் என் குரலை ஒருவரும் கேட்கவில்லை.
தேவன் என் வழியை அடைத்ததால் நான் தாண்டிச்செல்ல முடியவில்லை.
    அவர் என் பாதையை இருளால் மறைத்திருக்கிறார்.
தேவன் என் பெருமையை எடுத்துப்போட்டார்.
    அவர் என் தலையின் கிரீடத்தை (முடியை) எடுத்தார்.
10 தேவன் நான் அழியும்வரைக்கும் என்னை எல்லா பக்கங்களிலுமிருந்து தாக்குகிறார்.
    வேரோடு வீழ்ந்த மரத்தைப்போன்று அவர் என் நம்பிக்கையை அகற்றினார்.
11 தேவனுடைய கோபம் எனக்கெதிராக எரிகிறது.
    அவர் என்னைத் தமது பகைவன் என்று அழைக்கிறார்.
12 தேவன் தமது படையை என்னைத் தாக்குவதற்கு அனுப்புகிறார்.
    என்னைத் தாக்குவதற்கு என்னைச் சுற்றிலும் கோபுரங்களை எழுப்புகிறார்கள்.
    என் கூடாரத்தைச் சுற்றிலும் அவர்கள் முற்றுகையிட்டிருக்கிறார்கள்.

13 “என் சகோதரர்கள் என்னை வெறுக்கும்படி தேவன் செய்தார்.
    என் நண்பர்களுக்கு நான் ஒரு அந்நியனானேன்.
14 என் உறவினர்கள் என்னை விட்டு சென்றார்கள்.
    என் நண்பர்கள் என்னை மறந்துப்போனார்கள்.
15 என்னை ஒரு அந்நியனைப்போலவும் வெளிநாட்டினனைப்போலவும்
    என் வீட்டிற்கு வரும் விருந்தினர்களும் பணிவிடைப் பெண்களும் பார்க்கிறார்கள்.
16 நான் என் பணியாளைக் கூப்பிடும்போது, அவன் பதில் தருவதில்லை.
    நான் உதவிக்காகக் கெஞ்சும்போதும் என் பணியாள் பதில் தரமாட்டான்.
17 என் மனைவி என் மூச்சின் வாசனையை வெறுக்கிறாள்.
    என் சொந்த சகோதரர்கள் என்னை வெறுக்கிறார்கள்.
18 சிறு குழந்தைகளும் என்னைக் கேலிச்செய்கிறார்கள்.
    நான் அவர்கள் அருகே வரும்போது அவர்கள் கெட்டவற்றைச் சொல்கிறார்கள்.
19 என் நெருங்கிய நண்பர்கள் என்னை வெறுக்கிறார்கள்.
    நான் நேசிக்கும் ஜனங்கள் கூட எனக்கெதிராகத் திரும்பியிருக்கிறார்கள்.

20 “நான் மிகவும் மெலிந்துபோனேன்.
    என் தோல் எலும்போடு ஒட்டித் தொங்குகிறது.
    எனக்குச் சற்றே உயிர் மீந்திருக்கிறது.

21 “என் நண்பர்களே, எனக்கு இரங்குங்கள்!
    எனக்கு இரங்குங்கள்!
    ஏனெனில் தேவன் எனக்கு எதிராக இருக்கிறார்.
22 தேவன் செய்வதைப் போன்று நீங்கள் ஏன் என்னைத் தண்டிக்கிறீர்கள்?
    என்னைத் துன்புறுத்துவதால் நீங்கள் தளர்ந்துப் போகவில்லையா?

23 “நான் சொல்வதை யாரேனும் நினைவில் வைத்து ஒரு புத்தகத்தில் எழுதமாட்டீர்களா?
    என விரும்புகிறேன்.
என் வார்த்தைகள் ஒரு சுருளில் எழுதப்படாதா?
    என விரும்புகிறேன்.
24 நான் சொல்பவை என்றென்றும் நிலைக்கும்படி
    ஈயத்தின்மேல் ஒரு இரும்புக் கருவியால் பொறிக்கப்படவோ அல்லது பாறையில் செதுக்கப்படவோ வேண்டுமென விரும்புகிறேன்.
25 என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் என்று எனக்குத் தெரியும்!
    முடிவில் அவர் பூமியின்மேல் எழுந்து நின்று என்னைக் காப்பாற்றுவார்!
26 நான் என் உடலைவிட்டுச் சென்றாலும் (நான் உயிர் நீத்தாலும்), என் தோல் அழிந்துப்போனாலும்,
    பின்பு நான் என் தேவனைக் காண்பேன் என அறிவேன்!
27 என் சொந்த கண்களால் நான் தேவனைக் காண்பேன்!
    நானே, வேறெவருமல்ல, தேவனைக் காண்பேன்!
    நான் எத்தனை உணர்ச்சிவசப்பட்டவனாக உணருகிறேன் என்பதை என்னால் உங்களுக்குச் சொல்ல முடியாது.

28 “நீங்கள், ‘நாம் யோபுவைத் துன்புறுத்துவோம்.
    அவனைக் குற்றம்சாட்ட ஒரு காரணத்தைக் காண்போம்’ என்று கூறலாம்.
29 ஆனால் நீங்களே அஞ்சுவீர்கள்.
    ஏனெனில், தேவன் குற்றவாளிகளைத் தண்டிக்கிறார்.
தேவன் வாளைப் பயன்படுத்தி உங்களைத் தண்டிப்பார்.
    அப்போது நியாந்தீர்க்கும் காலம் ஒன்று உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள்” என்றான்.

சோப்பார் பதிலளிக்கிறான்

20 அப்போது நாகமாவின் சோப்பார் பதிலாக:

“யோபுவே, உன்னிடம் குழப்பமான எண்ணங்கள் மிகுந்துள்ளன.
    எனவே நான் உனக்குப் பதில் கூறவேண்டும்.
    நான் நினைத்துக்கொண்டிருப்பதை விரைந்து உனக்குக் கூறவேண்டும்.
நீ உனது பதில்களால் எங்களை அவமானப்படுத்தினாய்!
    ஆனால் நான் ஞானமுள்ளவன் உனக்கு எவ்வாறு பதில் தரவேண்டும் என்பதை நான் அறிவேன்.

4-5 “தீயவனின் மகிழ்ச்சி நீண்டகாலம் நிலைக்காது என்பதை நீ அறிவாய்.
    ஆதாம், பூமியில் வந்த காலம் முதல் அதுவே உண்மையாக உள்ளது.
    தேவனைப்பற்றிக் கவலைப்படாதவனின் மகிழ்ச்சி குறுகிய காலமே நிலைக்கும்.
தீயவனின் பெருமை வானத்தை எட்டலாம்.
    அவன் தலை மேகங்களைத் தொடலாம்.
அவன் தன் மலத்தைப்போலவே, என்றென்றும் அழிக்கப்படுவான்.
    அவனை அறிந்த ஜனங்கள் ‘அவன் எங்கே?’ என்பார்கள்.
கனவைப்போன்று, அவன் பறந்துப் போவான்.
    ஒருவனும் அவனைக் கண்டடைய முடியாது.
    அவன் துரத்தப்பட்டு, ஒரு கெட்ட கனவாய் மறக்கப்படுவான்.
அவனைப் பார்த்த ஜனங்கள் மீண்டும் அவனைக் காணமாட்டார்கள்.
    அவன் குடும்பத்தினர் அவனை மீண்டும் பார்ப்பதில்லை.
10 அவன் ஏழைகளிடமிருந்து எடுத்ததை அத்தீயவனின் பிள்ளைகள் திரும்பக் கொடுப்பார்கள்.
    தீயவனின் சொந்தக் கைகளே அவனது செல்வத்தைத் திருப்பிக் கொடுக்கும்.
11 அவன் இளைஞனாயிருந்தபோது, அவன் எலும்புகள் பெலனுள்ளவையாக இருந்தன.
    ஆனால், உடம்பின் பிற பகுதிகளைப்போன்று, அவை விரைவில் துகளில் கிடக்கும்.

12 “கெட்ட மனிதனின் வாய் தீமையை இனிமையாக ருசிக்கும்.
    அவன் அதை முழுவதும் சுவைப்பதற்காக அவனது நாவின் அடியில் வைப்பான்.
13 கெட்ட மனிதன் தீமையில் களிப்பான்.
    அவன் அதை விட்டுவிட விரும்பமாட்டான்.
    அது அவனது வாய்க்குள்ளிருக்கும் இனிப்பைப் போலிருக்கும்.
14 ஆனால் அத்தீமை அவன் வயிற்றில் நஞ்சாகும்.
    பாம்பின் விஷத்தைப்போன்று அது அவனுள் கசப்பான விஷமாக மாறும்.
15 தீயவன் செல்வங்களை விழுங்கியிருக்கிறான்.
    ஆனால் அவன் அவற்றை வாந்தியெடுப்பான்.
    தீயவன் அவற்றை வாந்தியெடுக்கும்படி தேவன் செய்வார்.
16 பாம்புகளின் விஷத்தைப்போன்று, தீயவன் பருகும் பானமும் இருக்கும்.
    பாம்பின் நாக்கு அவனைக் கொல்லும்.
17 அப்போது, அத்தீயவன் தேனாலும் பாலாலும் ஓடுகிற நதிகளைக் கண்டு களிக்கமாட்டான்.
18 தீயவன், அவன் சம்பாதித்த செல்வங்களையெல்லாம் திருப்பித் தரும்படி கட்டாயப்படுத்தப்படுவான்.
    தன்னுடைய உழைப்பின் பலனை அவன் அனுபவிக்க அனுமதிக்கப்படமாட்டான்.
19 அவன் மற்றவர்கள் கட்டியிருந்த வீடுகளை அபகரித்துக்கொண்டான்.

20 “தீயவன் ஒருபோதும் திருப்தியடைவதில்லை.
    அவனது செல்வம் அவனைக் காப்பாற்றாது.
21 அவன் சாப்பிடுகிறபோது, எதுவும் மீதியாயிருப்பதில்லை.
    அவன் வெற்றி தொடராது.
22 தீயவனுக்கு மிகுதியாக இருக்கும்போது அவன் துன்பங்களால் அழுத்தப்படுவான்.
    அவனது சிக்கல்கள் அவன்மேல் வந்து அழுத்தும்!
23 தீயவன் அவனுக்குத் தேவையானவற்றையெல்லாம் உண்ட பின்பு,
    அவனுக்கெதிராக தேவன் அவரது எரியும் கோபத்தை வீசுவார்.
    தீயவன் மேல் தேவன் தண்டனையைப் பொழிவார்.
24 தீயவன் இரும்பு வாளுக்குத் தப்பி ஓடிவிடலாம்,
    ஆனால் ஒரு வெண்கல அம்பு அவனை எய்து வீழ்த்தும்.
25 அவன் உடம்பின் வழியாக அந்த வெண்கல அம்புச் சென்று முதுகின் வழியாக வெளிவரும்.
    அதன் பிரகாசிக்கும் (ஒளிவிடும்) முனை அவனது ஈரலைப் பிளக்கும்.
    அவன் பயங்கர பீதி அடைவான்.
26 அவன் பொக்கிஷங்கள் அழிந்துபோகும்.
    எந்த மனிதனும் பற்றவைக்காத ஒரு நெருப்பு அவனை அழிக்கும்.
    அவன் வீட்டில் மீந்திருக்கும் ஒவ்வொரு பொருளையும் அந்த நெருப்பு அழிக்கும்.
27 தீயவன் குற்றவாளி என்று பரலோகம் நிரூபிக்கும் (நிறுவும்)
    பூமி அவனுக்கெதிராக சாட்சிச் சொல்லும்.
28 தேவனுடைய கோப வெள்ளத்தில்
    அவன் வீட்டிலுள்ளவை எல்லாம் இழுத்துச் செல்லப்படும்.
29 தீயோருக்கு தேவன் இவற்றைச் செய்யத் திட்டமிடுகிறார்.
    அவர்களுக்கு அதையே கொடுக்க தேவன் திட்டமிடுகிறார்” என்றான்.