Bible in 90 Days
இராஜ்யத்தை மீண்டும் நிறுவுவதாக தேவன் வாக்குறுதியளிக்கிறார்
11 “தாவீதின் கூடாரம் விழுந்திருக்கிறது.
ஆனால் அந்நேரத்தில், நான் மீண்டும் அவன் கூடாரத்தை அமைப்பேன்.
நான் சுவர்களில் உள்ள துவாரங்களைச் சரிசெய்வேன்.
நான் அழிந்துபோன கட்டிடங்களை மீண்டும் கட்டுவேன். நான் அவற்றை முன்பு இருந்தது போன்று கட்டுவேன்.
12 பிறகு ஏதோமில் உயிருடன் விடப்பட்டவர்களும்,
என் நாமத்தால் அழைக்கப்பட்ட எல்லோரும் கர்த்தரிடம் உதவிக்காக வருவார்கள்.”
கர்த்தர் அவற்றைச் சொன்னார்,
அவர் அவை நடக்கும்படிச் செய்வார்.
13 கர்த்தர் கூறுகிறார்: “நிலத்தை உழுகிறவன்,
அறுவடை செய்பவனை முந்திச் செல்லும் காலம் வரும்.
திராட்சை ஆலையை வைத்திருப்பவன் திராட்சை பயிரிட்டு பழங்களைப் பறிப்பவனைத் தேடிவரும் காலம் வரும்.
இனிய மதுவானது குன்றுகளிலும்
மலைகளிலும் கொட்டும்.
14 இஸ்ரவேலே நான் என் ஜனங்களை
அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வருவேன்.
அவர்கள் அழிந்த நகரங்களை மீண்டும் கட்டுவார்கள்.
அவர்கள் அந்நகரங்களில் வாழ்வார்கள்.
அவர்கள் திராட்சைகளைப் பயிரிடுவார்கள்.
அவர்கள் அவற்றிலிருந்து வரும் மதுவை குடிப்பார்கள்.
அவர்கள் தோட்டங்களைப் பயிரிடுவார்கள்.
அவர்கள் அவற்றிலுள்ள அறுவடையை உண்பார்கள்.
15 நான் என் ஜனங்களை அவர்கள் நிலத்தில் நாட்டுவேன்.
அவர்கள் மீண்டும் பிடுங்கப்படமாட்டார்கள்.
அவர்கள் நான் கொடுத்த நாட்டிலேயே இருப்பார்கள்”
என்று உங்கள் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்.
ஏதோம் தண்டிக்கப்படும்
1 இது ஒபதியாவின் தரிசனம். என் கர்த்தராகிய ஆண்டவர் ஏதோம் நாட்டைப் பற்றி இதனைக் கூறுகிறார்.
நாங்கள் தேவனாகிய கர்த்தரிடமிருந்து ஒரு அறிக்கையைக் கேட்டோம்.
ஒரு தூதுவர் நாடுகளுக்கு அனுப்பப்பட்டார்.
அவர், நாம் போய் ஏதோமுக்கு எதிராகச் சண்டையிடுவோம்" என்று கூறினார்.
கர்த்தர் ஏதோமிடம் பேசுகிறார்
2 “ஏதோமே, நான் உன்னை மிகவும் சிறிய நாடாக்குவேன்.
ஜனங்கள் உன்னை மிகவும் வெறுப்பார்கள்.
3 உன் பெருமை உன்னை ஏமாற்றிவிட்டது.
கன்மலை உச்சியிலுள்ள குகைகளில் நீ வசிக்கிறாய்.
உன் வீடு மலைகளின் உச்சியில் உள்ளது.
எனவே நீ உனக்குள்ளேயே,
‘எவராலும் என்னைத் தரைக்குக் கொண்டு வரமுடியாது’” என்கிறாய்.
ஏதோம் கீழே கொண்டு வரப்படும்
4 தேவனாகிய கர்த்தர்:
“நீ கழுகைப் போன்று உயரப்போனாலும் நட்சத்திரங்களுக்கிடையில் உன் கூட்டைக் கட்டினாலும்,
நான் அங்கிருந்து உன்னைக் கீழே கொண்டு வருவேன்" என்று கூறுகிறார்.
5 நீ உண்மையில் அழிக்கப்படுவாய்.
திருடர்கள் உன்னிடம் வருவார்கள்.
கள்ளர்கள் இரவில் வருவார்கள்.
அத்திருடர்கள் தாம் விரும்புகிற அனைத்தையும் எடுத்துக் கொள்வார்கள்.
வேலைக்காரர்கள் உங்கள் வயல்களில் திராட்சையைப் பறிக்கும்போது
சில திராட்சைப் பழங்களை விட்டுவைப்பார்கள்.
6 ஆனால் பகைவன் ஏசாவினுடைய மறைக்கப்பட்ட கருவூலங்களைத் தீவிரமாகத் தேடுவான்.
அவர்கள் அவையனைத்தையும் கண்டுப்பிடிபார்கள்.
7 உன் நண்பர்களான அனைத்து ஜனங்களும்
நாட்டை விட்டு வெளியேற உன்னை வற்புறுத்துவார்கள்.
உன்னோடு சமாதானமாக உள்ள ஜனங்கள் (நல்ல நண்பர்கள்) தந்திரம் செய்து
உன்னைத் தோற்கடிப்பார்கள்.
உன் நண்பர்கள் உனக்காக ஒரு கண்ணியைத் திட்டமிடுகிறார்கள்.
‘அவன் ஒன்றையும் எதிர்பார்க்கவில்லை’”
என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.
8 கர்த்தர் கூறுகிறார்:
“அந்த நாளில், நான் ஏதோமிலுள்ள ஞானிகளை அழிப்பேன்.
ஏசாவின் மலைகளில் உள்ள புத்திமான்களை அழிப்பேன்.
9 தேமானே, உனது பலவான்கள் பயப்படுவார்கள்.
ஏசாவின் மலையில் உள்ள ஒவ்வொருவரும் அழிக்கப்படுவார்கள்.
அநேக ஜனங்கள் கொல்லப்படுவார்கள்.
10 நீ அவமானத்தால் மூடப்பட்டிருப்பாய்.
நீ என்றென்றைக்கும் அழிக்கப்படுவாய்.
ஏனென்றால், நீ உனது சகோதரனான யாக்கோபுடன் கொடூரமாக இருந்தாய்.
11 நீ இஸ்ரவேலின் பகைவரோடு சேர்ந்தாய்.
அந்நியர்கள் இஸ்ரவேலின் கருவூலங்களை எடுத்துச் சென்றார்கள்.
அயல்நாட்டுகாரர்கள் இஸ்ரவேலின் நகரவாசலில் நுழைந்தனர்.
அந்த அயல் நாட்டுக்காரர்கள் எருசலேமின் எந்தப் பகுதி அவர்களுக்கு வரும் என்று சீட்டுப்போட்டனர்.
அவர்களில் நீயும் ஒருவனாக உன் பங்கைப் பெறக் காத்திருந்தாய்.
12 நீ உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு சிரித்தாய்.
நீ அதனைச் செய்திருக்கக் கூடாது.
ஜனங்கள் யூதாவை அழிக்கும்போது நீ மகிழ்ந்தாய்.
நீ அதனைச் செய்திருக்கக்கூடாது.
நீ அவர்களின் துன்பத்தில் வீண் புகழ்ச்சி கொண்டாய்.
நீ அதனைச் செய்திருக்கக்கூடாது.
13 நீ என் ஜனங்களின் நகரவாசலில் நுழைந்து அவர்களின் துன்பத்தைக் கண்டு சிரித்தாய்.
நீ அதனைச் செய்திருக்கக் கூடாது.
அவர்களின் துன்பநேரத்தில் நீ அவர்களுடைய கருவூலங்களை எடுத்துக்கொண்டாய்.
நீ அதனைச் செய்திருக்கக் கூடாது.
14 சாலைகள் சந்திக்கும் இடத்தில் நீ நின்று
தப்பிச் செல்ல முயல்கிறவர்களை அழித்தாய்.
நீ அதனைச் செய்திருக்கக் கூடாது.
நீ உயிரோடு தப்பியவர்களைக் கைது செய்தாய்.
நீ அதனைச் செய்திருக்கக் கூடாது.
15 கர்த்தருடைய நாள் விரைவில் அனைத்து நாடுகளுக்கும் வருகிறது.
நீ மற்றவர்களுக்குத் தீமை செய்தாய்.
அத்தீமைகள் உனக்கு ஏற்படும்.
அதே தீமைகள் உன் சொந்த தலை மேலேயே விழும்.
16 ஏனென்றால் எனது பரிசுத்தமான மலையில் நீ குடித்ததுபோல,
மற்ற நாட்டு ஜனங்களும்
உன்னில் குடித்துப் புரளுவார்கள்.
நீ என்றுமே இருந்ததில்லை என்பதுபோன்று எனது முடிவு வரும்.
17 ஆனால் சீயோன் மலையின் மேல் தப்பிப் பிழைத்தோர் இருப்பார்கள்.
அவர்கள் எனது சிறப்பான ஜனங்களாக இருப்பார்கள்.
யாக்கோபின் நாடு தனக்குரியவற்றைத்
திரும்ப எடுத்துக்கொள்ளும்.
18 யாக்கோபின் குடும்பம் நெருப்பைப் போன்றிருக்கும்.
யோசேப்பின் நாடானது சுவாலையைப் போன்றிருக்கும்.
ஆனால் ஏசாவின் நாடு சாம்பலைப் போன்றிருக்கும்.
யூதா ஜனங்கள் ஏதோமை எரிப்பார்கள்.
யூதா ஜனங்கள் ஏதோமை அழிப்பார்கள்.
அதன் பிறகு ஏசாவின் நாட்டில் தப்பிப் பிழைத்தோர் ஒருவரும் இருக்கமாட்டார்கள்.”
ஏனென்றால் தேவனாகிய கர்த்தர் இதைக் கூறினார்.
19 பிறகு ஏசா மலைமீது,
நெகேவ் ஜனங்கள் வாழ்வார்கள்.
மலை அடிவாரத்திலுள்ள ஜனங்கள் பெலிஸ்தியர்களின் நிலங்களை எடுத்துக்கொள்வார்கள்.
எப்பிராயீம் மற்றும் சமாரியா நாடுகளில்
அந்த ஜனங்கள் வாழ்வார்கள்.
கீலேயாத் பென்யமீனுக்கு உரியதாகும்.
20 இஸ்ரவேலிலுள்ள ஜனங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி வற்புறுத்தப்பட்டவர்கள்.
ஆனால் அந்த ஜனங்கள் சாரிபாத் வரையுள்ள கானான் நாட்டை எடுத்துக்கொள்வார்கள்.
யூதா ஜனங்கள் எருசலேமை விட்டு வெளியேறி சேப்பாராதத்தில் வாழும்படி வற்புறுத்தப்படுவார்கள்.
ஆனால் அவர்கள் நெகேவ் நகரங்களை எடுத்துக்கொள்வார்கள்.
21 விடுவிக்கிக்கப்பட்டவர்கள் சீயோன் மலைக்குப்போய்
ஏசா மலையில் வாழும் ஜனங்களை நியாயம்தீர்த்து ஆட்சி செய்வார்கள்.
இராஜ்யம் கர்த்தருக்கு உரியதாகும்.
தேவன் அழைக்கிறார், யோனா ஓடுகிறான்
1 கர்த்தர் அமித்தாயின் மகனான யோனாவோடு பேசினார். கர்த்தர், 2 “நினிவே ஒரு பெரிய நகரம். நான் அங்கே மக்கள் செய்து கொண்டிருக்கிற அநேக தீமைகைளப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே அந்நகரத்திற்குப் போய் அம்மக்களிடம் அத்தீமைகளை நிறுத்தும்படிச் சொல்” என்றார்.
3 யோனா தேவனுக்குக் கீழ்ப்படிய விரும்பவில்லை. எனவே யோனா கர்த்தரிடமிருந்து விலகி ஓடிவிட முயற்சித்தான். யோப்பா பட்டணத்திற்குப் போனான். யோனா அங்கே தர்ஷீசுக்குப் போகும் படகு ஒன்றைக் கண்டான். யோனா பயணத்துக்காக பணம் கொடுத்து படகில் ஏறினான். யோனா அம்மக்களோடு தர்ஷீசுக்குப் பயணம் செய்து கர்த்தரை விட்டு விலகி ஓடிப்போக விரும்பினான்.
பெரும்புயல்
4 ஆனால் கர்த்தர் கடலில் ஒரு பெரும் புயலை உருவாக்கினார். காற்றானது கடலைக் கொந்தளிக்கச் செய்தது. புயல் மிகவும் பலமாக வீச, படகு இரண்டு பகுதியாக உடைந்துவிடும் போலத் தோன்றியது. 5 பணியாட்கள் படகை மூழ்குவதிலிருந்து காப்பாற்ற அதன் கனத்தைக் குறைக்க விரும்பினார்கள். எனவே அவர்கள் கடலுக்குள் சரக்குகளைத் தூக்கி எறிந்தனர். படகோட்டிகள் மிகவும் பயந்தார்கள். ஒவ்வொருவரும் தனது தேவனிடம் ஜெபம் செய்யத் தொடங்கினார்கள்.
யோனா படகின் கீழ்த்தளத்திற்குச் சென்று படுத்து தூங்கிக்கொண்டிருந்தான். 6 படகின் தலைவன் யோனாவிடம், “எழுந்திரு! ஏன் தூங்கிக்கொண்டிருக்கிறாய்? உனது தேவனிடம் ஜெபம் செய். ஒரு வேளை உனது தேவன் உன் ஜெபத்தைக் கேட்டு நம்மைக் காப்பாற்றலாம்!” என்றான்.
புயல் வரக் காரணம் என்ன?
7 பிறகு அவர்கள் ஒருவரோடு ஒருவர், “நாம் சீட்டுக் குலுக்கிப்போட்டு இத்துன்பம் வரக் காரணம் என்னவென்று பார்ப்போம்” என்று பேசிக்கொண்டார்கள்.
எனவே அவர்கள் சீட்டுப் போட்டார்கள். யோனாவால் இந்தத் துன்பம் வந்தது என்பதை அது காட்டியது. 8 பிறகு அவர்கள் யோனவிடம், “உனது குற்றத்தால்தான் எங்களுக்கு இந்த பயங்கரமான துன்பம் ஏற்பட்டிருக்கிறது. எனவே நீ என்ன செய்திருக்கிறாய் என்று எங்களிடம் சொல். உனது தொழில் என்ன? நீ எங்கிருந்து வருகிறாய்? உனது நாடு எது? உனது மக்கள் யார்?” என்று கேட்டார்கள்.
9 யோனா அவர்களிடம், “நான் ஒரு எபிரேயன் (யூதன்). நான் பரலேகத்தின் தேவனாகிய கர்த்தரை ஆராதிக்கிறேன். அவரே கடலையும் நிலத்தையும் படைத்த தேவன்” என்றான்.
10 யோனா, தான் கர்த்தரிடமிருந்து ஓடி வந்ததாகச் சொன்னான். அவர்கள் அதனை அறிந்ததும் மிகவும் பயந்தார்கள். அவர்கள் யோனாவிடம் “உனது தேவனுக்கு எதிராக எந்த பயங்கரமான செயலைச் செய்தாய்?” என்று கேட்டார்கள்.
11 காற்றும், கடல் அலைகளும் மேலும் மேலும் பலமடைந்தன. எனவே அவர்கள் யோனாவிடம், “நாங்கள் எங்களைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யவேண்டும்? நாங்கள் கடலை அமைதிப்படுத்த உனக்கு என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள்.
12 யோனா அவர்களிடம், “நான் குற்றம் செய்துவிட்டேன் என்று எனக்குத் தெரியும். என்னால்தான் இந்தப் புயல் வந்துள்ளது என்று எனக்குத் தெரியும். எனவே என்னைக் கடலுக்குள் எறியுங்கள். கடல் அமைதி அடையும்” என்றான்.
13 ஆனால் அவர்கள் யோனாவைக் கடலுக்குள் எறிய விரும்பவில்லை. அவர்கள் கப்பலை மறுபடியும் கரைக்குக் கொண்டுப்போக முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. காற்றும், கடல் அலைகளும் மேலும் மேலும் பலமடைந்தன.
யோனாவின் தண்டனை
14 எனவே அவர்கள் கர்த்தரிடம், “கர்த்தாவே, நாங்கள் இவனை அவன் செய்த தவறுக்காக கடலில் தூக்கி எறிகிறோம். எனவே, ஒரு அப்பாவி மனிதனைக் கொன்றோம் என்று எங்களைக் குற்றப்படுத்தாதிரும். நாங்கள் அவனைக் கொன்றதற்காக எங்களை மரிக்கச் செய்யாதிரும். நீர்தான் கர்த்தர், நீர் என்ன செய்ய விரும்புகிறீரோ அதைச் செய்வீர் என்பதை நாங்கள் அறிகிறோம். ஆனால் தயவு செய்து எங்களிடம் இரக்கமாய் இரும்” என்று அழுதார்கள்.
15 அவர்கள் யோனாவைக் கடலுக்குள் வீசினார்கள். புயல் நின்று கடல் அமைதியானது. 16 இதனைப் பார்த்த அவர்கள் பயப்படத் தொடங்கி கர்த்தரிடம் மரியாதை செலுத்தத் தொடங்கினார்கள். அவர்கள் பலி கொடுத்து கர்த்தருக்குச் சிறப்பான வாக்குறுதிகளைச் செய்தார்கள்.
17 யோனா கடலுக்குள் விழுந்தவுடன், கர்த்தர் ஒரு பெரிய மீனைத் தேர்ந்தெடுத்து, யோனாவை விழுங்கும்படிச் செய்தார். யோனா அந்த மீனின் வயிற்றுக்குள் மூன்று பகல்களும், மூன்று இரவுகளும் இருந்தான்.
2 யோனா மீனின் வயிற்றுக்குள் இருந்தபோது, அவன் தனது தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய்தான். யோனா,
2 “நான் மிக மோசமான துன்பத்தில் இருந்தேன்.
நான் உதவிக்காகக் கர்த்தரை வேண்டினேன்.
அவர் எனக்குப் பதில் கொடுத்தார்.
நான் பாதாளத்தின் ஆழத்தில் இருந்தேன்.
கர்த்தாவே, நான் உம்மிடம் கதறினேன்.
நீர் எனது குரலைக் கேட்டீர்.
3 “நீர் என்னைக் கடலுக்குள் எறிந்தீர்.
உமது வல்லமையுடைய அலைகள் என்மேல் வீசின.
நான் கடலுக்குள் மேலும் மேலும் ஆழத்திற்குள் சென்றேன்.
என்னைச் சுற்றிலும் தண்ணீர் இருந்தது.
4 பிறகு நான் நினைத்தேன், ‘இப்போது நான் உம் பார்வையிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளேன்.’
ஆனால், நான் தொடர்ந்து உதவிக்காக உமது பரிசுத்த ஆலயத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
5 “கடல் தண்ணீர் என்னை மூடியது.
தண்ணீரானது எனது வாயை நிறைத்தது.
என்னால் சுவாசிக்க முடியவில்லை.
நான் கடலுக்குள் மேலும் மேலும் ஆழமாகச் சென்றேன்.
கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது.
6 நான் மலைகள் துவங்குகிற கடலின் ஆழத்திற்குச் சென்றேன்.
நான் இந்தச் சிறைக்குள் என்றென்றும் இருப்பேனோ என்று நினைத்தேன்.
ஆனால் எனது கல்லறையிலிருந்து என்னை என் தேவனாகிய கர்த்தர் மீட்டார்.
தேவனே, நீர் எனக்கு மீண்டும் உயிர்கொடுத்தீர்.
7 “எனது ஆத்துமா எல்லா நம்பிக்கையையும் இழந்தது.
ஆனால், பிறகு நான் கர்த்தரை நினைத்தேன்.
கர்த்தாவே, நான் உம்மிடம் ஜெபம் செய்தேன்,
நீர் உமது பரிசுத்தமான ஆலயத்திலிருந்து எனது ஜெபத்தைக் கேட்டீர்.
8 “சிலர் பயனற்ற விக்கிரகங்களை தொழுகின்றார்கள்.
ஆனால், அந்தச் சிலைகள் அவர்களுக்கு உதவுவதில்லை.
9 கர்த்தர் ஒருவரிடமிருந்தே இரட்சிப்பு வருகிறது.
கர்த்தாவே, நான் உமக்குப் பலிகளை கொடுப்பேன்.
நான் உம்மைத் துதித்து, உமக்கு நன்றி சொல்வேன். நான் உம்மிடம் சிறப்பு வாக்குறுதிகளைச் செய்வேன்,
நான் வாக்குறுதிப்படி செய்வேன்” என்றான்.
10 பிறகு கர்த்தர் மீனோடு பேசினார். மீன் யோனாவை தன் வயிற்றிலிருந்து உலர்ந்த நிலத்தில் கக்கிவிட்டது.
தேவன் அழைக்கிறார், யோனா கீழ்ப்படிகிறான்
3 பிறகு கர்த்தர் யோனாவிடம் மறுபடியும் பேசினார். கர்த்தர், 2 “அந்த பெரிய நினிவே நகரத்திற்குப் போ, நான் உனக்குச் சொன்னவற்றைப் பிரசங்கம் செய்” என்றார்.
3 எனவே யோனா கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தான், அவன் நினிவே நகரத்திற்குப் போனான். நினிவே ஒரு மிகப்பெரிய நகரம். ஒருவன் இந்நகரத்தைக் கடந்துபோக மூன்று நாட்கள் நடக்க வேண்டும்.
4 யோனா நினிவே நகரத்தின் நடு இடத்திற்குச் சென்று பிரசங்கம் செய்ய ஆரம்பித்தான். யோனா, “40 நாட்களுக்குப் பிறகு நினிவே நகரம் அழிக்கப்படும்!” என்றார்.
5 நினிவேயின் மக்கள் தேவனிடமிருந்து வந்த செய்தியை நம்பினார்கள். மக்கள் சாப்பிடாமல் உபவாசம் இருந்து அவர்களின் பாவங்களை நினைத்து மனந்திரும்ப முடிவு செய்தார்கள். மக்கள் சிறப்பான ஆடையை அணிந்து தங்கள் மன வருத்தத்தைக் காட்டினார்கள். அந்நகரிலுள்ள மக்கள் அனைவரும் இதனைச் செய்தார்கள். மிக முக்கியமான மக்களும், முக்கியமற்ற மக்களும் இதனைச் செய்தார்கள்.
6 நினிவேயின் அரசன் இவற்றைக் கேள்விப்பட்டான், அரசனும் தான் செய்த தீங்குகளுக்காக வருத்தப்பட்டான், எனவே அரசன் தனது சிம்மாசனத்தை விட்டு இறங்கினான். அரசன் தனது அரசனுக்குரிய ஆடையைக் கழற்றிப் போட்டுவிட்டு துக்கத்தைக் காட்டுவதற்குரிய சிறப்பு ஆடையை அணிந்துகொண்டான். பிறகு அரசன் சாம்பல்மேல் உட்கார்ந்தான், 7 அரசன் ஒரு சிறப்புச்செய்தியை எழுதி நகரம் முழுவதற்கும் அனுப்பினான்.
அரசனிடமிருந்தும் அவனது முக்கிய மந்திரிகளிடமிருந்தும் வரும் கட்டளை:
கொஞ்ச காலத்திற்கு எம்மனிதனும் மிருகமும் உண்ணக் கூடாது. மாடுகளும் ஆடுகளும் கூட வயலுக்குப் போகக்கூடாது. நினிவேயில் வாழ்கிற எதுவும் உணவு உண்ணவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது. 8 ஆனால் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் துக்கத்தைக் காட்டும் சிறப்பு ஆடையால் தன்னை மூடிக்கொள்ள வேண்டும். மக்கள் தேவனிடம் உரக்கக் கதறவேண்டும். ஒவ்வொருவரும் தனது வாழ்வை மாற்றித் தீங்கு செய்வதை நிறுத்த வேண்டும். 9 பிறகு தேவன் மனம் மாறி தாம் திட்டமிட்ட செயல்களைச் செய்யாமல் விடலாம். தேவன் ஒருவேளை தன்னை மாற்றிக்கொண்டு நம் மீது கோபமில்லாமல் இருக்கலாம். அப்போது நாம் தண்டிக்கப்படாமல் இருக்கலாம்.
10 தேவன் மக்கள் செய்தவற்றைப் பார்த்தார். மக்கள் தீமைகள் செய்வதை நிறுத்தியதைப் பார்த்தார். எனவே தேவன் மாறித் தனது திட்டத்தைச் செயல்படுத்தவில்லை. தேவன் மக்களைத் தண்டிக்கவில்லை.
தேவனுடைய இரக்கம் யோனாவைக் கோபமடையச்செய்கிறது
4 தேவன் நகரத்தை காப்பாற்றியதைக் குறித்து யோனா மகிழ்ச்சி அடையவில்லை, யோனா கோபம் அடைந்தான். 2 யோனா கர்த்தரிடம் முறையிட்டு, “நான் இது நடக்குமென்று அறிவேன்! நான் எனது சொந்த நாட்டில் இருந்தேன். நீர் என்னை இங்கு வரச்சொன்னீர். அந்த நேரத்தில், இப்பாவ நகரத்திலுள்ள மக்களை நீர் மன்னிப்பீர் என்பதை நான் அறிவேன். எனவே நான் தர்ஷிசுக்கு ஓடிப்போக முடிவுசெய்தேன். நீர் இரக்கமுள்ள தேவன் என்பது எனக்குத் தெரியும்! நீர் இரக்கங்காட்டி மக்களைத் தண்டிக்கமாட்டீர் என்பதை நான் அறிவேன்! நீர் கருணை நிறைந்தவர் என்பதை அறிவேன். இம்மக்கள் பாவம் செய்வதை நிறுத்தினால், நீர் அவர்களை அழிக்கவேண்டும் என்னும் திட்டத்தை மாற்றிக்கொள்வீர் என்றும் நான் அறிவேன். 3 எனவே நான் இப்பொழுது உம்மை வேண்டுகிறேன், கர்த்தாவே, தயவுசெய்து என்னைக் கொன்றுவிடும், நான் உயிரோடு இருப்பதைவிட மரித்துப் போவது நல்லது!” என்றான்.
4 பிறகு, கர்த்தர், “நான் அம்மக்களை அழிக்கவில்லை என்பதற்காக நீ என்னிடம் கோபம் கொள்வது சரியென்று நினைக்கிறாயா?” என்று கேட்டார்.
5 யோனா இவை எல்லாவற்றுக்காகவும் கோபத்தோடு இருந்தான். எனவே அவன் நகரத்தை விட்டுப்போனான். யோனா, நகரத்திற்குக் கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு இடத்திற்குச் சென்று, தனக்கென்று ஒரு இருப்பிடத்தை அமைத்துக்கொண்டான். பிறகு அவன் அங்கே நிழலில் உட்கார்ந்து, நகரத்திற்கு என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கக் காத்துக்கொண்டிருந்தான்.
ஆமணக்குச் செடியும், ஒரு புழுவும்
6 கர்த்தர் ஒரு ஆமணக்குச் செடியை யோனாவுக்கு மேல் வேகமாக வளரச் செய்தார். இது யோனா உட்காருவதற்குரிய நல்ல குளிர்ந்த நிழலைத் தந்தது. இது யோனவிற்கு மேலும் வசதியாக இருக்க உதவியது. யோனா அந்தச் செடிக்காக மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.
7 மறுநாள் காலையில், தேவன் அச்செடியைத் தின்பதற்கு ஒரு புழுவை அனுப்பினார். அப்புழு செடியைத் தின்னத் தொடங்கியது, செடி செத்துப்போனது.
8 சூரியன் வானத்தில் உயரமாக வந்தபோது, தேவன் சூடான கிழக்குக் காற்று வீசச் செய்தார். சூரியன் யோனாவின் தலையை மிகச் சூடாக்கியது. யோனா மிகமிகப் பலவீனமானான், யோனா தன்னை மரிக்கவிடும்படி தேவனிடம் வேண்டினான். யோனா, “நான் உயிர் வாழ்வதைவிட மரிப்பதே நல்லது” என்றான்.
9 ஆனால் தேவன் யோனாவிடம், “இந்தச் செடி செத்ததற்காக நீ என் மீது கோபப்படுவது சரியென்று நினைக்கிறாயா?” என்று கேட்டார். யோனா, “ஆம், நான் கோபப்படுவது சரிதான், நான் சாகிற அளவிற்குக் கோபமாக இருக்கிறேன்!” என்றார்.
10 கர்த்தர், “நீ அச்செடிக்காக எதுவும் செய்யவில்லை! நீ அதனை வளரச்செய்யவில்லை. அது இரவில் வளர்ந்தது, மறுநாள் அது செத்தது. இப்பொழுது நீ அச்செடியைப்பற்றி துக்கப்படுகிறாய். 11 நீ ஒரு செடிக்காகக் கவலைப்படுவதானால், நிச்சயமாக நான் நினிவே போன்ற பெரிய நகரத்திற்காக வருத்தப்படலாம். நகரத்தில் ஏராளமான மனிதர்களும் மிருகங்களும் இருக்கிறார்கள். அந்த நகரத்தில் தாங்கள் தீமை செய்து கொண்டிருந்ததை அறியாத 1,20,000 க்கும் மேலான மக்கள் இருக்கிறார்கள்!” என்றார்.
சமாரியாவும் இஸ்ரவேலும் தண்டிக்கப்பட வேண்டும்
1 கர்த்தருடைய வார்த்தை மீகாவிடம் வந்தது. இது யோதாம், ஆகாஸ், எசேக்கியா எனும் அரசர்களின் காலங்களில் நிகழ்ந்தது. இவர்கள் யூதாவின் அரசர்கள். மீகா, மொரேசா என்னும் ஊரைச் சேர்ந்தவன். மீகா இந்தத் தரிசனத்தைச் சமாரியாவையும் எருசலேமையும் குறித்துப் பார்த்தான்.
2 அனைத்து ஜனங்களே, கவனியுங்கள்!
பூமியே அதிலுள்ள உயிர்களே, கவனியுங்கள்,
எனது கர்த்தராகிய ஆண்டவர் அவரது பரிசுத்த ஆலயத்திலிருந்து வருவார்.
எனது ஆண்டவர் உங்களுக்கு எதிரான சாட்சியாக வருவார்.
3 பாருங்கள், கர்த்தர் அவரது இடத்திலிருந்து வந்துகொண்டிருக்கிறார்.
அவர் இறங்கி வந்து பூமியிலுள்ள உயர்ந்த மேடைகளை மிதிப்பார்.
4 அவருக்குக் கீழே மலைகள் உருகும்.
அவை நெருப்புக்கு முன்னாலுள்ள
மெழுகைப் போன்று உருகும்.
பள்ளத்தாக்குகள் பிளந்து மலைகளிலிருந்து தண்ணீர் பாயும்.
5 ஏனென்றால், இதற்கு காரணம் யாக்கோபின் பாவம்.
இதற்கு இஸ்ரவேல் நாடு செய்த பாவங்களும் காரணமாகும்.
சமாரியா, பாவத்தின் காரணம்
யாக்கோபு செய்த பாவத்திற்கு காரணம் என்ன?
அது சமாரியா,
யூதாவிலுள்ள, வழிபாட்டிற்குரிய இடம் எங்கே?
அது எருசலேம்.
6 எனவே, நான் சமாரியாவை வயலிலுள்ள குன்றுகளின் குவியலாக்குவேன்.
அது திராட்சைக் கொடி நடுவதற்கான இடம்போல் ஆகும்.
நான் சமாரியவின் கற்களைப் பள்ளத்தாக்கில் புரண்டு விழப் பண்ணுவேன்.
நான் அவளது அஸ்திபாரங்களைத் தவிர எல்லாவற்றையும் அழிப்பேன்.
7 அவளது அனைத்து விக்கிரகங்களும் துண்டுகளாக உடைக்கப்படும்.
அவள் வேசித்தனத்தின் சம்பளம் (விக்கிரகங்கள்) நெருப்பில் எரிக்கப்படும்.
நான் அவளது அந்நிய தெய்வங்களின் விக்கிரகங்கள் அனைத்தையும் அழிப்பேன்.
ஏனென்றால் சமாரியா எனக்கு விசுவாசமற்ற முறையில் அச்செல்வத்தைப் பெற்றாள்.
எனவே அவை எனக்கு விசுவாசம்
அற்றவர்களாலேயே எடுத்துக்கொள்ளப்படும்.
மீகாவின் பெருந்துக்கம்
8 என்ன நிகழும் என்பதைப்பற்றி நான் மிகவும் துக்கப்படுவேன்.
நான் பாதரட்சையும் ஆடையும் இல்லாமல் போவேன்.
நான் ஒரு நாயைப்போன்று அழுவேன்.
நான் ஒரு பறவையைப்போன்று துக்கங்கொள்வேன்.
9 சமாரியாவின் காயங்கள் குணப்படுத்தப்பட இயலாது.
அவளது (பாவம்) நோய் யூதா முழுவதும் பரவியிருக்கிறது.
இது எனது ஜனங்களின் நகரவாசலை அடைந்திருக்கிறது.
எருசலேமின் எல்லா வழிகளிலும் பரவியிருக்கிறது,
10 இதனைக் காத்திடம் சொல்லவேண்டாம்.
அக்கோ என்னுமிடத்தில் கதறவேண்டாம்.
பெத்அப்ராவிலே
புழுதியில் நீ புரளு.
11 சாப்பீரில் குடியிருக்கிறவர்களே வெட்கத்துடன்
நிர்வாணமாய் உங்கள் வழியிலே போங்கள்.
சாயனானில் குடியிருக்கிறவர்கள் வெளியே வரமாட்டார்கள்.
பெத்ஏசேலில் வாழ்கிறவர்கள் கதறுவார்கள்.
உங்களின் உதவியை எடுத்துக்கொள்வார்கள்.
12 மாரோத்தில் குடியிருக்கிறவளே பலவீனமாகி
நல்ல செய்தி வருமென்று எதிர்ப்பார்த்திருந்தார்கள்.
ஏனென்றால், துன்பமானது
கர்த்தரிடமிருந்து எருசலேமின் நகர வாசலுக்கு வந்திருக்கிறது.
13 லாகீசில் குடியிருக்கிறவளே,
உங்கள் இரதத்தில் விரைவாகச் செல்லும் குதிரையைப் பூட்டு.
சீயோனின் பாவம் லாகீசில் தொடங்கியது.
ஏனென்றால் நீ இஸ்ரவேலின் பாவங்களைப் பின்பற்றுகிறாய்.
14 எனவே, நீ மோர்ஷேக் காத்தினிடத்திற்கு கட்டாயமாக பிரிவு உபச்சார
வெகுமதிகளைக் கொடுக்கவேண்டும்.
அக்சீபின் வீடுகள் இஸ்ரவேல் அரசர்களிடம்
வஞ்சனை செய்யும்.
15 மரேஷாவில் குடியிருக்கிறவளே,
நான் உனக்கு எதிராக ஒருவனைக் கொண்டு வருவேன்.
அவன் உனக்கு உரிய பொருட்களை எடுத்துக்கொள்வான்.
அதுல்லாமிற்குள் இஸ்ரவேலின் மகிமை (தேவன்) வரும்.
16 எனவே உனது முடியை வெட்டு, உன்னை மொட்டையாக்கிக்கொள்.
ஏனென்றால், நீ அன்பு செலுத்துகிற உன் குழந்தைகளுக்காக நீ கதறுவாய்.
நீ கழுகைப்போன்று முழுமொட்டையாக இருந்து உனது துக்கத்தைக் காட்டு.
ஏனென்றால் உனது பிள்ளைகள் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.
ஜனங்களின் தீயத்திட்டங்கள்
2 பாவம் செய்யத் திட்டமிட்டிருந்த ஜனங்களுக்குத்
துன்பங்கள் வரும்.
அந்த ஜனங்கள் தம் படுக்கையில் கிடந்த வண்ணம் தீய திட்டங்களைத் தீட்டினார்கள்.
பிறகு காலை வெளிச்சம் வந்ததும் தங்களது திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தனர்.
ஏனென்றால், அவர்களுக்குத் தாங்கள் விரும்பியதைச் செய்யும் வல்லமை இருந்தது.
2 அவர்கள் வயல்களை விரும்பினார்கள்,
எடுத்துக்கொண்டனர்.
அவர்கள் வீடுகளை விரும்பினார்கள்,
அதை எடுத்துக்கொண்டனர்.
அவர்கள் ஒரு மனிதனை ஏமாற்றி அவனது வீட்டை எடுத்தனர்.
அவர்கள் ஒரு மனிதனை ஏமாற்றி அவனது நிலத்தை எடுத்தனர்.
அந்த ஜனங்களைத் தண்டிக்கக் கர்த்தருடைய திட்டங்கள்
3 அதனால், கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்:
“பார், நான் இந்தக் குடும்பத்திற்கு எதிராக துன்பத்தைக் கொடுக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன்.
நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது.
நீங்கள் வீண் பெருமைகொள்வதை விடுவீர்கள்.
ஏனென்றால் தீமைகள் வந்துகொண்டிருக்கின்றன.
4 பிறகு ஜனங்கள் உன்னைப்பற்றி பாட்டு இயற்றுவார்கள்.
ஜனங்கள் இந்தச் சோகப் பாடலைப் பாடுவார்கள்:
நாங்கள் அழிக்கப்படுகிறோம்.
கர்த்தர் எங்களது நிலத்தை எடுத்துக் அதனை மற்றவர்களுக்குக் கொடுத்தார்.
ஆமாம், அவர் எனது நிலங்களை என்னிடமிருந்து எடுத்தார்.
கர்த்தர் நமது வயல்களைப் பகைவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்திருக்கிறார்.
5 எனவே நாம் நிலத்தை அளந்து, கர்த்தருடைய
ஜனங்களுக்குள் பகிர்ந்துக்கொள்ள இயலாது.”
பிரசங்கம் செய்ய வேண்டாம் என மீகா கேட்டுக்கொள்ளப்படுகிறான்
6 ஜனங்கள் கூறுகிறார்கள்: “எங்களுக்குப் பிரசங்கிக்க வேண்டாம்.
எங்களைப் பற்றிய அந்தத் தீயவற்றைச் சொல்லவேண்டாம்.
எங்களுக்குத் தீயவை எதுவும் ஏற்படாது”
7 ஆனால் யாக்கோபின் ஜனங்களே,
நான் இவற்றை கட்டாயம் சொல்ல வேண்டும்.
கர்த்தர் அவரது பொறுமையை இழந்துக்கொண்டிருக்கிறார்.
ஏனென்றால் நீங்கள் தீமை செய்திருக்கிறீர்கள்.
நீங்கள் சரியானபடி வாழ்ந்தால்
பிறகு நான் உங்களிடம் இனிமையாகப் பேசமுடியும்.
8 ஆனால் என் ஜனங்களுக்கு, அவர்கள் விரோதியைப்போல் ஆகிறார்கள்.
நீங்கள் கடந்து செல்லுகிறவர்களின் ஆடைகளைக் களவாடுகிறீர்கள்.
அந்த ஜனங்கள் தாங்கள் பாதுகாப்பாய் இருப்பதாக நினைக்கிறீர்கள்.
ஆனால் நீங்கள் அவர்களிடமிருந்து யுத்தத்தின் கைதிகளிடமிருந்து எடுப்பது போல பொருள்களைப் பறித்துக்கொள்கிறீர்கள்.
9 நீங்கள் எனது ஜனங்களிலுள்ள பெண்களிடமிருந்து
அழகான வீடுகளை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் எனது செல்வத்தை
அவர்களின் சிறிய பிள்ளைகளிடமிருந்து எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்.
10 எழுங்கள், புறப்பட்டுப்போங்கள்.
இது நீங்கள் ஓய்வெடுக்கும் இடமாக இராது. ஏனென்றால், இந்த இடத்தை நீங்கள் அழித்தீர்கள்.
இதனை நீங்கள் அசுத்தம் செய்தீர்கள். எனவே, இது அழிக்கப்படும்.
இது பயங்கரமான அழிவாக இருக்கும்.
11 இந்த ஜனங்கள், நான் சொல்வதைக் கேட்க விரும்புவதில்லை.
ஆனால் ஒருவன் பொய்களைச் சொல்லிக்கொண்டு வந்தால் பிறகு, அவனை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
அவர்கள் ஒரு பொய் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொண்டு, அவன் வந்து,
“அப்பொழுது வருங்காலம் நல்லகாலமாக தோன்றும், திராட்சைரசமும் மதுபானமும் ஏராளமாக கிடைக்கும்” என்று சொன்னதும் அவனையும் ஏற்றுக்கொள்வார்கள்.
கர்த்தர் தனது ஜனங்களை ஒன்று சேர்ப்பார்
12 ஆமாம், யாக்கோபின் ஜனங்களே,
நான் உங்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பேன்.
இஸ்ரவேலின் தப்பிப் பிழைத்தவர்கள் அனைவரையும் நான் ஒன்று சேர்ப்பேன்.
நான் அவர்களை ஆட்டு மந்தையில் உள்ள ஆடுகளைப்போன்றும்
தொழுவத்தில் உள்ள மந்தைகளைப்போன்றும்
ஒன்று சேர்ப்பேன்.
பிறகு அந்த இடமானது அநேக ஜனங்களின் ஓசைகளால் நிறைந்திருக்கும்.
13 “தடைகளை உடைப்பவர்” அவர்களை நடத்தி அவர்கள் முன்னே நடந்து செல்கிறார்.
அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் நுழைந்து கடந்து போவார்கள்.
அவர்களின் அரசன் அவர்களின் முன்பு நடந்து போவான்.
கர்த்தர் அவரது ஜனங்களுக்கு முன்னால் இருப்பார்.
இஸ்ரவேலின் தலைவர்கள் தீயச் செய்லகளை செய்தக் குற்றவாளிகள்
3 பிறகு நான் சொன்னேன்: “இஸ்ரவேல் நாட்டின் தலைவர்களே! மற்றும் இஸ்ரவேல் நாட்டின் அதிகாரிகளே,
இப்போது கவனியுங்கள் நீதி என்றால் என்ன என்று உங்களுக்கு தெரிய வேண்டும்.
2 ஆனால் நீங்கள் நல்லவற்றை வெறுத்து தீமையை நேசிக்கிறீர்கள்.
நீங்கள் ஜனங்களின் தோலை உரிப்பீர்கள்.
அவர்களின் எலும்புகளில் உள்ள தசையைப் பிடுங்குவீர்கள்.
3 நீங்கள் எனது ஜனங்களை அழித்தீர்கள்.
அவர்களின் தோலை நீக்குவீர்கள்.
அவர்களின் எலும்பை உடைத்தீர்கள்.
நீங்கள் அவர்களது சதையை பானையில் போடப்படும் மாமிசத்தைப்போன்று துண்டு பண்ணினீர்கள்.
4 எனவே, நீங்கள் கர்த்தரிடம் பிரார்த்தனை செய்யலாம்.
ஆனால் அவர் பதில் சொல்லமாட்டார்.
இல்லை, கர்த்தர் உங்களிடமிருந்து தன் முகத்தை மறைத்துக்கொள்வார்.
ஏனென்றால் நீங்கள் தீயவற்றைச் செய்கிறீர்கள்!”
பொய்த் தீர்க்கதரிசிகள்
5 சில பொய்த் தீர்க்கதரிகள் கர்த்தருடைய ஜனங்களிடம் பொய் சொல்கிறார்கள். கர்த்தர் அந்தத் தீர்க்கதரிசிகளைப் பற்றி இதனைச் சொல்கிறார்.
“இந்தத் தீர்க்கதரிசிகள் வயிற்றுக்காக உழைக்கிறவர்கள்.
உணவு கொடுக்கும் ஜனங்களுக்குச் சமாதானம் வரும் என்று உறுதி கூறுவார்கள்.
ஆனால் உணவு கொடுக்காதவர்களிடத்தில் அவர்களுக்கு எதிராக போர் வரும் என்று உறுதி கூறுவார்கள்.
6 “அதனால்தான் இது உங்களுக்கு இரவைப் போன்றது.
அதனால்தான் உங்களுக்குத் தரிசனம் கிடைப்பதில்லை.
எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதைப் பற்றிய தரிசனத்தை நீங்கள் பார்க்க முடியாது.
எனவே இது உனக்கு அந்தகாரம் போன்றது.
இந்தச் சூரியன் தீர்க்கதரிசிகள் மேல் அஸ்தமித்திருக்கிறது.
அவர்களால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று பார்க்க முடியாது.
எனவே, இது அவர்களுக்கு அந்தகாரம் போன்றிருக்கும்.
7 தீர்க்கதரிசிகள் வெட்கப்படுகிறார்கள்.
திர் காலத்தை குறித்து சொல்கிறவர்கள் அவமானப்படுகிறார்கள்.
அவர்கள் எதுவும் சொல்லமாட்டார்கள்.
ஏனென்றால் தேவன் அவர்களோடு பேசமாட்டார்.”
மீகா ஆண்டவரின் ஒரு நேர்மையான தீர்க்கதரிசி
8 ஆனால் கர்த்தருடைய ஆவி என்னை
நன்மையினாலும், பலத்தினாலும், வல்லமையினாலும் நிரப்பியிருக்கிறது.
ஏன்? அதனால் நான் யாக்கோபிடம் அவனது பாவங்களைச் சொல்லுவேன்.
ஆமாம், நான் இஸ்ரவேலிடம் அவனது பாவங்களைச் சொல்லுவேன்!
இஸ்ரவேலின் தலைவர்கள் பழி சொல்லல்
9 யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேலின் ஆள்வோர்களே, என்னைக் கவனியுங்கள்.
நீங்கள் முறையான வாழ்வை வெறுக்கீறீர்கள்.
ஏதாவது ஒன்று நேராக இருந்தால்
நீங்கள் அதை கோணலாக மாற்றுகிறீர்கள்.
10 நீங்கள் ஜனங்களைக் கொன்று, சீயோனைக் கட்டுகிறீர்கள்.
ஜனங்களை ஏமாற்றி எருசலேமைக் கட்டுகிறீர்கள்.
11 எருசலேமில் உள்ள நீதிபதிகள் வழக்கு மன்றத்தில் யார் வெல்வார்கள்
என்று சொல்ல உதவிட லஞ்சம் பெறுகிறார்கள்.
எருசலேமில் உள்ள ஆசாரியர்கள் ஜனங்களுக்குக் கற்பிப்பதற்கு முன்னால் பணம் பெறுகிறார்கள்.
ஜனங்களின் தீர்க்கதரிசிகளுக்கு எதிர்காலம் பற்றி தெரிந்துக்கொள்வதற்கு முன்னால் பணம் கொடுக்கவேண்டும்.
பிறகு அந்தத் தலைவர்கள் கர்த்தருடைய உதவியை எதிர்ப்பார்க்கிறார்கள்.
அவர்கள், “எங்களுக்கு தீயவை எதுவும் நடக்காது. கர்த்தர் எங்களோடு வாழ்கிறார்” என்றனர்.
12 தலைவர்களே, உங்களால், சீயோன் அழிக்கப்படும்.
இது உழப்பட்ட வயல் போன்றிருக்கும்.
எருசலேம் கற்களின் குவியலாய் மாறும்.
ஆலயம் உள்ள மலைகள் காட்டு முட்புதர்கள் அதிகம் வளர்ந்து வெறுமையான மலையாகும்.
சட்டம் எருசலேமிலிருந்து வரும்
4 இறுதி நாட்களில்,
கர்த்தருடைய ஆலயம் அனைத்து மலைகளையும் விட மிக உயரத்தில் இருக்கும்.
அந்தக் குன்று மலைகளையும் விட உயரமாக உயர்த்தப்பட்டு இருக்கும்.
அங்கு எப்போதும் ஜனங்கள் கூட்டம் சென்றுகொண்டிருக்கும்.
2 பல நாடுகளிலிருந்து ஜனங்கள் அங்கே போவார்கள்.
அவர்கள், “வாருங்கள் கர்த்தருடைய பர்வதத்திற்குப் போகலாம்.
யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்குப் போவோம்,
பிறகு தேவன் நமக்கு வாழும் வழியைக் கற்பிப்பார்.
நாம் அவரைப் பின்பற்றுவோம்” என்பார்கள்.
தேவனிடமிருந்து வரும் பாடங்கள் கர்த்தருடைய செய்தி,
சீயோன் குன்றுமேல் உள்ள எருசலேமில் தொடங்கி உலகம் முழுவதும் செல்லும்.
3 பிறகு தேவன் அனைத்து நாடுகளிலும் உள்ள ஜனங்களுக்கு நீதிபதியாக இருப்பார்.
தேவன் தூர தேசங்களைச் சேர்ந்த பல ஜனங்களின் விவாதங்களை முடிப்பார்.
அந்த ஜனங்கள் போருக்கு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவார்கள்.
அவர்கள் தமது வாள்களிலிருந்து கொழுக்களைச் செய்வார்கள்.
அவர்கள் தம் ஈட்டிகளைச் செடிகளை வெட்டும் கருவிகளாகப் பயன்படுத்துவார்கள்.
ஜனங்கள் மற்றவர்களோடு சண்டையிடுவதை நிறுத்துவார்கள்.
ஜனங்கள் போரிடுவதற்கு மீண்டும் பயிற்சிபெறமாட்டார்கள்.
4 ஒவ்வொருவரும் தமது திராட்சைச் செடி
மற்றும் அத்தி மரங்களின் கீழும் அமர்ந்திருப்பார்கள்.
எவரும் அவர்களைப் பயப்படும்படிச் செய்யமாட்டார்கள்.
ஏனென்றால், சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சென்னது போல நடக்கும்.
5 மற்ற நாடுகளில் உள்ள ஜனங்கள் அனைவரும் தமது சொந்தத் தெய்வங்களைப் பின்பற்றுகின்றார்கள்.
ஆனால் நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய வழியில் என்றென்றைக்கும் நடப்போம்.
இராஜ்யம் திரும்பிக் தரப்படும்
6 கர்த்தர் கூறுகிறார்:
“எருசலேம் புண்பட்டு நொண்டியானது.
எருசலேம் தூர எறியப்பட்டது.
எருசலேம் காயப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டது.
ஆனால் நான் அவனை என்னிடம் திரும்ப கொண்டு வருவேன்.
7 “‘அந்நொண்டி’ நகரின் ஜனங்கள், மீதியான ஜனங்களாவார்கள்.
சென்றுவிடும்படி நகரஜனங்கள் பலவந்தப்படுத்தப்பட்டனர்.
ஆனால் நான் அவர்களை ஒரு வலிமையான நாடாக்குவேன்.”
கர்த்தர் அவர்களுடைய ராஜாவாய் இருப்பார்.
அவர் என்றென்றும் சீயோன் பர்வதத்திலிருந்து ஆளுவார்.
8 மந்தையின் துருகமே, [a] உங்கள் காலம் வரும். சீயோன், மலையான ஆப்பேலே நீ மீண்டும் ஆட்சி பீடத்தில் அமருவாய்.
ஆமாம், முற்காலத்தைப் போன்று எருசலேமின் ராஜாங்கம் இருக்கும்.
இஸ்ரவேலர்கள் எதற்காக பாபிலோனுக்கு போகவேண்டும்
9 இப்பொழுது எதற்காக நீ உரக்க கதறுகிறாய்.
உங்கள் அரசன் போய்விட்டானா?
உங்கள் தலைவரை இழந்து விட்டீர்களா?
நீங்கள் பிரசவ வேதனைப்படும் பெண்ணைப் போன்று துக்கப்படுகிறீர்கள்.
10 சீயோன் மகளே, வலியை உணர்ந்துக் கொண்டு உங்கள் “குழந்தையை” பெற்றெடுங்கள்.
நீங்கள் நகரை விட்டு (எருசலேம்) வெளியே போகவேண்டும்.
நீங்கள் வயல் வெளியில் போவீர்கள்.
நீங்கள் பாபிலோனுக்குப் போகவேண்டும் எனக் கருதுகிறேன்.
ஆனால் நீங்கள் அந்த இடத்திலிருந்து காப்பாற்றப்படுவீர்கள்.
கர்த்தர் அங்கே போய் உங்களைக் காப்பார்.
அவர் உங்களை உங்கள் எதிரிகளிடமிருந்து எடுப்பார்.
கர்த்தர் மற்ற நாடுகளை அழிப்பார்
11 பல நாட்டினர் உங்களுக்கு எதிராகப் போரிட வந்திருக்கின்றனர்.
அவர்கள், “பாருங்கள், அங்கே சீயோன் இருக்கிறது. அவளைத் தாக்குவோம்!” என்கிறார்கள்.
12 அந்த ஜனங்கள் அவர்களின் திட்டங்களை வைத்துள்ளனர்.
ஆனால் கர்த்தர் என்ன திட்டமிட்டுக்கொண்டிருகிறார் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள்.
கர்த்தர் அந்த ஜனங்களை ஒரு சிறப்பான நோக்கத்திற்காக இங்கே கொண்டுவந்தார்.
அந்த ஜனங்கள் அரவை எந்திரத்தில் போடப்பட்ட தானியத்தைப் போன்று நசுக்கப்படுவார்கள்.
இஸ்ரவேல் அதன் எதிரிகளைத் தோற்கடித்து வெல்லுவார்கள்
13 “சீயோன் குமாரத்தியே, எழுந்து அந்த ஜனங்களை நசுக்கு.
நான் உன்னைப் பலமுள்ளதாக்குவேன்.
உனக்கு இரும்பினாலான கொம்புகளும், வெண்கலத்தாலான குளம்புகள் உள்ளது போன்றும் இருக்கும்.
நீ பல மக்களை அடித்துச் சிறிய துண்டுகளாக்குவாய்.
அவர்களின் செல்வத்தை கர்த்தருக்குக் கொடுப்பாய்.
பூமிக்கெல்லாம் கர்த்தராய் இருப்பவர்க்கு அவர்களுடைய பொக்கிஷத்தை நீ கொடுப்பாய்.”
5 இப்பொழுது வலிமையான நகரமே, உனது வீரர்களை கூட்டு.
அவர்கள் நம்மைத் தாக்குவதற்கு நம்மை சுற்றி இருக்கிறார்கள்.
அவர்கள் இஸ்ரவேலின் நீதிபதியைத்
தன் தடியால் கன்னத்தில் அடிப்பார்கள்.
பெத்லேகேமில் மேசியா பிறப்பார்
2 எப்பிராத்தா என்று அழைக்கப்படும் பெத்லேகேமே,
நீதான் யூதாவிலேயே சிறிய நகரம்.
உனது குடும்பம் எண்ண முடியாத அளவிற்குச் சிறியது,
ஆனால் “இஸ்ரவேலை ஆள்பவர்” எனக்காக உங்களிடமிருந்து வருவார்.
அவரது துவக்கங்கள்
நீண்ட காலத்திற்கு முன்பாகவும் பழங்காலத்திலிருந்தும் இருக்கின்றன.
3 வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அரசனான குழந்தையை,
அந்தப் பெண் பெற்றெடுக்கும்வரை கர்த்தர் தமது ஜனங்களை கைவிட்டுவிடுவார்.
பிறகு மீதியுள்ள அவனது மற்ற சகோதரர்கள்
இஸ்ரவேலுக்கு திரும்பி வருவார்கள்.
4 பின்னர் இஸ்ரவேலை ஆள்பவர் நின்று மந்தைகளை மேய்ப்பார்.
அவர் அவர்களை கர்த்தருடைய ஆற்றலால், தேவனாகிய கர்த்தருடைய அற்புதமான நாமத்தால் அவர்களை வழிநடத்துவார்.
ஆம், அவர்கள் சமாதானமாக வாழ்வார்கள்.
ஏனென்றால் அந்த நேரத்தில், அவரது மகிமை பூமியின் எல்லைவரை செல்லும்.
5 ஆமாம், நமது நாட்டிற்குள் அசீரியன் படை வரும்.
அப்படை நமது பெரிய வீடுகளை அழிக்கும்.
ஆனால், இஸ்ரவேலரின்
ஆள்பவர் ஏழு மேய்ப்பர்களையும்
அவர் எட்டுத் தலைவர்களையும் தேர்ந்தெடுப்பார்.
6 அவர்கள் தமது வாள்களைப் பயன்படுத்தி அசீரியர்களை ஆள்வார்கள்.
அவர்கள் கையில் வாள்களுடன் நிம்ரோதின் தேசத்தை ஆள்வார்கள்.
அவர்கள் அந்த ஜனங்களை ஆள தமது வாள்களைப் பயன்படுத்துவார்கள்.
பின்னர் இஸ்ரவேலை ஆள்பவர், நமது நாட்டிற்குள் வந்து எல்லைகளையும் நிலங்களையும் வீடுகளை மிதிக்கும் அசீரியர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றுவார்.
7 பிறகு யாக்கோபிலே மீதியானவர்கள் கர்த்தரிடமிருந்து வருகிற பனியைப்போன்று ஜனங்களிடையே சிதறிப்போவர்கள்.
அவர்கள், புல்லின் மேல் விழுகிற பனியைப் போன்று ஜனங்களிடையே இருப்பார்கள்.
அவர்கள் எவருக்காகவும் காத்திருக்கமாட்டார்கள்.
அவர்கள் எவருக்காகவும் எந்த மனிதன் மேலும் சார்ந்திருக்கமாட்டார்கள்.
8 யாக்கோபிலே மீதமானவர்கள்,
காட்டு மிருகங்களிடையே உள்ள சிங்கத்தைப் போன்று பல தேசங்களிடையே இருப்பார்கள்.
அவர்கள் ஆட்டு மந்தைகளிடையே உள்ள இளஞ்சிங்கத்தைப் போன்று இருப்பார்கள்.
சிங்கம் கடந்து போனாலும் அது தான் விரும்பிய இடத்துக்குப் போகும்.
அது ஒரு மிருகத்தைத் தாக்கினால்,
எவராலும் அந்த மிருகத்தைக் காப்பாற்ற முடியாது. மீதமானவர்களும் அவ்வாறே இருப்பார்கள்.
9 நீங்கள் உங்களது பகைவருக்கு எதிராகக் கைகளைத் தூக்கி
அவர்களை அழிப்பீர்கள்.
ஜனங்கள் தேவனைச் சார்ந்திருப்பார்கள்
10 “நான் அந்த வேளையில் உங்கள் குதிரைகளை உங்களிடமிருந்து அபகரிப்பேன்.
நான் உங்கள் இரதங்களை அழிப்பேன்.
11 நான் உங்கள் நாட்டிலுள்ள நகரங்களை அழிப்பேன்.
நான் உங்கள் கோட்டைகளையெல்லாம் நொறுக்குவேன்.
12 நீங்கள் இனிமேல் சூன்ய வித்தைகளை செய்யமாட்டீர்கள்.
நீங்கள் இனிமேல் எதிர்காலத்தைப் பற்றி குறி சொல்லும் ஆட்களைப் பெற்றிருக்கமாட்டீர்கள்.
13 நான் உங்களது அந்நிய தெய்வங்களின் உருவச் சிலைகளை உடைத்தெறிவேன். சிலைகளை அழிப்பேன்.
அந்நிய தெய்வங்களை நினைவுப்படுத்தும் கற்களை நான் உடைத்தெறிவேன்.
உங்கள் கைளால் செய்யப்பட்டவற்றை நீங்கள் வழிபடமாட்டீர்கள்.
14 நான் உன் அஷ்ரா சிலைக் கம்பங்கள் வழிபடாதவாறு அழிப்பேன்.
நான் உனது அந்நிய தெய்வங்களை அழிப்பேன்.
15 சில ஜனங்கள் நான் சொல்வதைக் கேட்கமாட்டார்கள்.
நான் எனது கோபத்தைக் காட்டுவேன். நான் அந்த தேசங்களைப் பழிவாங்குவேன்.”
கர்த்தருடைய முறையீடு
6 இப்பொழுது கர்த்தர் என்ன சொல்கிறார் எனக் கேளுங்கள்.
உனது வழக்கை மலைகளுக்கு முன் சொல்.
அம்மலைகள் உங்களது வழக்கைக் கேட்க்கட்டும்.
2 கர்த்தர் தமது ஜனங்களுக்கு எதிராக முறையிடுகிறார்.
மலைகளே, கர்த்தருடைய முறையீட்டைக் கேளுங்கள்
பூமியின் அஸ்திபாரங்களே, கர்த்தர் சொல்கிறதைக் கேளுங்கள்.
இஸ்ரவேல் தவறானது என்று அவர் நிரூபிப்பார்.
3 கர்த்தர் கூறுகிறார், “என் ஜனங்களே, நான் செய்தவற்றைச் சொல்லுங்கள்.
நான் உங்களுக்கு எதிராக ஏதாவது செய்தேனா?
நான் உங்களது வாழ்வைக் கடினமானதாக்கினேனா?
4 நான் செய்தவற்றை உங்களிடம் சொல்லுவேன்.
நான் உங்களிடம் மோசே, ஆரோன், மீரியாம் ஆகியோரை அனுப்பினேன்.
நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து கொண்டு வந்தேன்,
நான் உங்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை செய்தேன்.
5 என் ஜனங்களே, மோவாபின் அரசனான பாலாக்கினுடைய தீயத் திட்டங்களை நினைத்துப் பாருங்கள்.
பேயோரின் மகனான பிலேயம் பாலாக்கிடம் சொன்னவற்றை நினைத்துப்பாருங்கள்.
அகாசியாவிலிருந்து கில்கால்வரை நடந்தவற்றை நினைத்துப் பாருங்கள்.
அவற்றை நினைத்துப் பாருங்கள். கர்த்தர் சரியானவர் என்று அறிவீர்கள்.”
நம்மிடமிருந்து தேவன் என்ன விரும்புகிறார்
6 நான் கர்த்தரை சந்திக்க வரும்போது என்ன கொண்டு வரவேண்டும்.
நான் தேவனைப் பணியும்போது என்ன செய்ய வேண்டும்.
நான் கர்த்தருக்கு,
தகன பலியும் ஓராண்டு நிறைந்தக் கன்றுக்குட்டியையும் கொண்டு வரவேண்டுமா?
7 கர்த்தர் 1,000 ஆட்டுக்குட்டிகளாலும்
10,000 ஆறுகளில் ஓடும் எண்ணெயாலும் திருப்தி அடைவாரா?
நான் எனது முதல் குழந்தையை என் பாவங்களுக்குப் பரிகாரமாகத் தரட்டுமா?
என் சரீரத்திலிருந்து வந்த குழந்தையை நான் பாவத்துக்குப் பரிகாரமாகத் தரட்டுமா?
8 மனிதனே, நன்மை எதுவென்று கர்த்தர் உன்னிடம் சொல்லியிருக்கிறார்.
கர்த்தர் உன்னிடமிருந்து இதைத்தான் விரும்புகிறார்.
மற்றவர்களிடம் நியாயமாய் இரு.
கருணையோடும் நம்பிக்கையோடும் நேசி. உனது தேவனோடு தாழ்மையாய் இரு.
நீ அவரை பொக்கிஷத்தினால் கவர முயலாதே.
இஸ்ரவேலர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்
9 கர்த்தருடைய சத்தம் நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறது.
“ஞானவான் கர்த்தருடைய நாமத்தை உயர்த்துகிறான்.
எனவே தண்டனையின் தடியைக் கவனியுங்கள். தண்டனையின் தடியைப் பிடிப்பவரையும் கவனியுங்கள்.
10 தீயவர்கள் தாம் திருடிய சொத்துக்களை
இன்னும் மறைத்துவைப்பார்களா?
தீயவர்கள் வியாபாரத்தில் மிகச் சிறியக் கூடைகளை வைத்து
இன்னும் ஜனங்களை ஏமாற்றுவார்களா? ஆம் இந்த செயல்கலெல்லாம் இன்னும் நடக்கிறது.
11 இன்னும் தமது எடைக்கற்களாலும் அளவு கோல்களாலும்
ஜனங்களை ஏமாற்றுகிறவர்களை, நான் மன்னிப்பேனா?
கள்ளத் தராசும், கள்ளப் படிக்கற்களுள்ள பையும் வைத்து தவறாக அளக்கிறவர்களை நான் மன்னிப்பேனா? இல்லை.
12 செல்வந்தர்கள் நகரத்தில் இன்னும் கொடுமை செய்கிறார்கள்.
அந்நகர ஜனங்கள் இன்னும் பொய்ச் சொல்கிறார்கள்.
ஆமாம், அந்த ஜனங்கள் தம் பொய்களைச் சொல்கின்றனர்.
13 எனவே நான் உன்னைத் தண்டிக்கத் தொடங்கினேன்.
நான் உன்னுடைய பாவங்களினிமித்தம் உன்னை அழிப்பேன்.
14 நீ உண்பாய், ஆனால் உன் வயிறு நிறையாது.
நீ இன்னும் பசியாகவும் வெறுமையாகவும் இருப்பாய்.
நீ பாதுகாப்புக்காக ஜனங்களை அழைத்துவர முயற்சி செய்வாய்.
யாரைப் பாதுகாத்தாயோ, அவர்களையும் நான் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பேன்.
15 விதைகளை விதைப்பாய்,
ஆனால் உணவை அறுவடை செய்யமாட்டாய்.
நீ உனது ஒலிவ மரங்களிலிருந்து எண்ணெய் எடுக்க அவற்றை பிழிவாய்.
ஆனால் எண்ணெய் பெறமாட்டாய்.
நீ திராட்சைப் பழங்களை பிழிவாய்.
ஆனால் போதுமான திராட்சைரசம் குடிக்கக் கிடைக்காது.
16 ஏனென்றால் நீ ஓம்ரியின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவாய்.
நீ ஆகாப் குடும்பம் செய்தத் தீயவற்றைச் செய்வாய்.
நீ அவர்களின் உபதேசங்களைப் பின்பற்றுவாய்.
எனவே நான் உன்னை அழியும்படி விடுவேன்.
ஜனங்கள் உனது அழிந்த நகரங்களைக் காணும்போது பரிகசித்து ஆச்சரியப்படுவார்கள்.
அந்நிய நாட்டு ஜனங்களின் நிந்தையை நீங்கள் சுமப்பீர்கள்.”
மீகா ஜனங்கள் செய்த பாவங்களால் கலக்கமடைந்தான்
7 நான் கலக்கமடைந்தேன்.
ஏனென்றால், நான் சேகரிக்கப்பட்டிருக்கிற பழங்களைப் போன்றவன்.
பறிக்கப்பட்ட திராட்சைப் பழங்களைப் போன்றவன்.
உண்பதற்குத் திராட்சைகள் இல்லாமல் போகும்.
நான் விரும்பும் அத்திப் பழங்கள் இல்லாமல் போகும்.
2 நான் கூறுவது என்னவெனில் நம்பிக்கைக்குரிய ஜனங்கள் எல்லாம் போய்விட்டார்கள்.
நாட்டில் நல்ல ஜனங்கள் எவரும் மீதியாகவில்லை.
ஒவ்வொருவரும் மற்றவர்களைக் கொல்ல காத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஒவ்வொருவரும் தம் சகோதரர்களை வலையில் பிடிக்க விரும்புகின்றனர்.
3 ஜனங்கள் தங்களின் இரண்டு கைகளினால் தீமை செய்ய நல்லவர்களாக இருக்கிறார்கள்.
அதிகாரிகள் லஞ்சத்தைக் கேட்கிறார்கள்.
வழக்கு மன்றத்தில் தீர்ப்பை மாற்ற நீதிபதிகள் பணம் பெறுகிறார்கள்.
“முக்கியமான தலைவர்கள்” நல்லதும் நேர்மையானதுமான முடிவுகளைச் செய்கிறதில்லை. அவர்கள் எதை விரும்புகிறார்களோ அதைச் செய்வார்கள்.
4 அவர்களில் நல்லவர் கூட முட்புதர் போன்றுள்ளனர்.
அவர்களில் மிகச் சிறந்தவர்கள் கூட பின்னிப் பிணைந்து கிடக்கும் முட்புதரைவிட வஞ்சகர்களாக இருக்கிறார்கள்.
தண்டனை நாள் வருகிறது
இந்த நாள் வரும் என்று உங்களுடைய தீர்க்கதரிசிகள் சொன்னார்கள்.
உங்களது காவற்காரரின் நாள் வந்திருக்கிறது.
இப்பொழுது நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.
இப்பொழுது நீங்கள் குழம்பிப்போய் இருக்கிறீர்கள்.
5 உங்களது அயலாரை நம்பாதீர்கள். நண்பர்களை நம்பாதீர்கள்.
உங்கள் மனைவியிடமும் உண்மையைப் பேசாதீர்கள்.
6 ஒருவரின் எதிரிகள் அவனது சொந்த வீட்டுக்குள்ளேயே இருப்பார்கள்.
ஒரு மகன் அவனது தந்தையை மதிக்கமாட்டான்.
ஒரு மகள் தன் தாய்க்கு எதிராகத் திரும்புவாள்.
ஒரு மருமகள் தன் மாமியார்க்கு எதிராகத் திரும்புவாள்.
கர்த்தரே இரட்சகர்
7 எனவே, நான் கர்த்தரிடம் உதவிக்காக வேண்டுவேன்.
நான், தேவன் என்னைக் காப்பாற்றுவார் எனக் காத்திருந்தேன்.
என் தேவன் நான் சொல்வதைக் கேட்பார்.
8 நான் விழுந்திருக்கிறேன்.
ஆனால் பகைவனே, என்னைப் பார்த்துச் சிரிக்காதே, நான் மீண்டும் எழுந்திருப்பேன்.
நான் இப்பொழுது இருளில் அமர்ந்திருக்கிறேன்.
ஆனால் கர்த்தர் எனக்கு ஒளியாக இருப்பார்.
கர்த்தர் மன்னிக்கிறார்
9 நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தேன்.
எனவே அவர் என்னோடு கோபமாக இருந்தார்.
ஆனால் அவர் வழக்கு மன்றத்தில் எனக்காக வாதாடுவார்.
அவர் எனக்குச் சரியானவற்றை செய்வார்.
பின்னர் அவர் என்னை வெளிச்சத்திற்குள் கொண்டு வருவார்.
அவர் சரியானவர் என்று நான் பார்ப்பேன்.
10 என் எதிரி என்னிடம்,
“உன் தேவனாகிய கர்த்தர் எங்கே?” என்றாள்.
ஆனால் என் எதிரி இதனைப் பார்ப்பாள்.
அவள் அவமானம் அடைவாள்.
அந்த நேரத்தில் நான் அவளைப் பார்த்து சிரிப்பேன்.
ஜனங்கள் அவளுக்கு மேலே தெருவிலுள்ள புழுதியைப் போன்று நடப்பார்கள்.
திரும்புகிற யூதர்கள்
11 காலம் வரும், உங்களது சுவர்கள் மீண்டும் கட்டப்படும்.
அந்த நேரத்தில் நாடு வளரும்.
12 உனது ஜனங்கள் உன் நாட்டிற்க்குத் திரும்புவார்கள்.
அவர்கள் அசீரியாவிலிருந்தும் எகிப்தின் நகரங்களிலிருந்தும் திரும்பி வருவார்கள்.
உனது ஜனங்கள் எகிப்திலிருந்தும்
ஐபிராத்து ஆற்றின் அடுத்தப் பக்கத்திலிருந்தும் வருவார்கள்.
அவர்கள் மேற்கிலுள்ள கடல் பகுதியிலிருந்தும்
கிழக்கிலுள்ள மலைகளிலிருந்தும் வருவார்கள்.
13 அந்த நிலமானது அங்கு வாழ்ந்த ஜனங்களின்
தீய செயல்களால் அழிக்கப்பட்டது.
14 எனவே உனது ஜனங்களை நீ கோலினால் ஆட்சி செய்.
உனக்குச் சொந்தமான உன் ஜனங்கள் கூட்டத்தை நீ ஆட்சிசெய்.
அக்கூட்டம் காடுகளிலும்,
கர்மேல் மலைகளிலும் தனியாக வாழ்கின்றது.
பாசானிலும் கீலேயாத்திலும் வாழ்கிற ஜனங்கள்
முன்பு மேய்ந்தது போலவே மேய்வார்களாக.
இஸ்ரவேல் பகைவர்களை வெல்லும்
15 நான் உங்களை எகிப்திலிருந்து மீட்டு வரும்போது பல அற்புதங்களைச் செய்தேன்.
நான் அவற்றைப் போன்று நீங்கள் பல அற்புதங்களைப் பார்க்கும்படிச் செய்வேன்.
16 அந்நாடுகள் அந்த அற்புதங்களைப் பார்க்கும்.
அவர்கள் அவமானம் அடைவார்கள்.
அவர்களின் “வல்லமை” என்னோடு ஒப்பிட இயலாது
என்பதை அவர்கள் காண்பார்கள்.
அவர்கள் ஆச்சரியத்தோடு
தமது கைகளை வாயில் வைத்துக்கொள்வார்கள்.
அவர்கள் கவனிக்க மறுத்து
தங்கள் காதுகளை மூடிக்கொள்வார்கள்.
17 அவர்கள் பாம்புகளைப்போன்று மண்ணை நக்குவார்கள்.
அவர்கள் பயத்தால் நடுங்குவார்கள்.
அவர்கள் தரையின் துவாரங்களில் உள்ள ஊர்வனவற்றைப் போன்று
வெளியேவந்து தேவனாகிய கர்த்தரை அடைவார்கள்.
தேவனே, அவர்கள் அஞ்சி உம்மை மதிப்பார்கள்.
கர்த்தருக்குத் துதி
18 உம்மைப்போன்று வேறு தேவன் இல்லை.
ஜனங்களின் குற்றங்களை நீர் அகற்றிவிடுகிறீர்.
தேவன் தமது சுதந்தரத்தில் மீதியானவர்களை மன்னிக்கிறார்.
தேவன் என்றென்றும் கோபத்தோடு இரார். ஏனென்றால் அவர் கருணையோடு இருப்பதில் மகிழ்கிறார்.
19 தேவன், மீண்டும் திரும்பி வருவார், நமக்கு ஆறுதல் தருவார்.
நமது பாவங்களை, குற்றங்களை நீக்கி (நசுக்கி) எல்லாவற்றையும் ஆழமான கடலுக்குள் எறிந்துவிடுவார்.
20 தேவனே, யாக்கோபுக்கு உண்மையாய் இருப்பீர்.
ஆபிரகாமிடம் உமது உண்மையையும், அன்பையும் காட்டுவீர். நீண்ட காலத்துக்கு முன்னால் நீர் எங்கள் முற்பிதாக்களுக்கு வாக்களித்தபடி செய்யும்.
1 இந்தப் புத்தகம் எல்கோசனாகிய நாகூமின்
தரிசனம். இது நினிவே நகரத்தைப் பற்றிய துயரமான இறைவாக்கு.
கர்த்தர் நினிவே மேல் கோபமாயிருக்கிறார்
2 கர்த்தர் ஒரு எரிச்சலுள்ள தேவன், கர்த்தர் குற்றமுடையவர்களைத் தண்டிக்கிறார்.
கர்த்தர் குற்றம் செய்தவர்களைத் தண்டிக்கிறவரும்,
மிகவும் கோபமானவருமாயிருக்கிறார்!
கர்த்தர் தனது பகைவர்களைத் தண்டிக்கிறார்.
அவர் தனது பகைவர்கள் மீது கோபத்தை வைத்திருக்கிறார்.
3 கர்த்தர் பொறுமையானவர்.
ஆனால் அவர் வல்லமையுடையவராகவும் இருக்கிறார்.
கர்த்தர் குற்றம் செய்கிறவர்களைத் தண்டிப்பார்.
அவர் அவர்களை விடுதலை பெற விடமாட்டார்.
கர்த்தர் தீயவர்களைத் தண்டிக்க வந்துக்கொண்டிருக்கிறார்.
அவர் தமது ஆற்றலைக் காட்டுவதற்காகப் புயலையும் சுழற்காற்றையும் பயன்படுத்துவார்.
ஒரு மனிதன் தரையின் மேலும் புழுதியின் மேலும் நடக்கிறான்.
ஆனால் கர்த்தரோ மேகங்களின்மேல் நடக்கிறார்.
4 கர்த்தர் கடலிடம் அதட்டி பேசுவார் அது வறண்டுப்போகும்.
அவர் அனைத்து ஆறுகளையும் வற்றச்செய்வார்.
வளமான நிலமுடைய பாசானும் கர்மேலும் வறண்டுப்போகும்.
லீபனோனின் மலர்கள் வாடிப்போகும்.
5 கர்த்தர் வருவார்,
குன்றுகள் அச்சத்தால் நடுங்கும்,
மலைகள் உருகிப்போகும்.
கர்த்தர் வருவார், பூமி அச்சத்தால் நடுங்கும்.
உலகமும் அதிலுள்ள ஒவ்வொருவரும் அச்சத்தால் நடுங்குவார்கள்.
6 கர்த்தருடைய பெருங்கோபத்திற்கு எதிராக எவரும் நிற்கமுடியாது.
எவராலும் அவரது பயங்கரக் கோபத்தைத் தாங்க முடியாது.
அவரது கோபம் நெருப்பைப்போன்று எரியும்.
அவர் வரும்போது கல்மலைகள் பேர்க்கப்படும்.
7 கர்த்தர் நல்லவர்.
அவர் இக்கட்டான காலங்களில் நாம் செல்லக்கூடிய பாதுகாப்பான இடம்.
அவர் தன்னை நம்புகிறவரைக் கவனிக்கிறார்.
8 ஆனால் அவர் அவரது எதிரிகளை முழுவதுமாக அழிப்பார்.
அவர் ஒரு வெள்ளத்தைப்போன்று அவர்களை அழிப்பார்.
அவர் தமது எதிரிகளை இருளுக்குள் துரத்துவார்.
9 நீங்கள் ஏன் கர்த்தருக்கு எதிராகத் திட்டமிடுகிறீர்கள்.
அவர் முழுமையான அழிவைக் கொண்டுவருவார்,
எனவே நீங்கள் மீண்டும் துன்பங்களுக்கு காரணராகமாட்டீர்கள்.
10 முட்செடிகள் பானையின் கீழ் எரிந்து அழிவது போல
நீங்கள் முற்றிலும் அழிக்கப்படுவீர்கள்.
காய்ந்துப்போன பதர் வேகமாக எரிவதுப்போன்று
நீங்கள் வெகு விரைவாக அழிக்கப்படுவீர்கள்.
11 அசீரியாவே, உன்னிடமிருந்து ஒரு மனிதன் வந்தான்.
அவன் கர்த்தருக்கு எதிராகத் தீயவற்றை திட்டமிட்டான்.
அவன் தீய ஆலோசனைகளைத் தந்தான்.
12 கர்த்தர் யூதாவுக்கு இதனைச் சொன்னார்:
“அசீரியாவின் ஜனங்கள் முழுபலத்தோடு இருக்கிறார்கள். அவர்களிடம் ஏராளமான வீரர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் அனைவரும் வெட்டி எறியப்படுவார்கள். அவர்கள் அனைவரும் முறியடிக்கப்படுவார்கள்.
என் ஜனங்களே, நான் உங்களைத் துன்புறுத்தினேன்.
ஆனால் நான் இனிமேல் உங்களைத் துன்புறுத்தமாட்டேன்.
13 இப்பொழுது நான் உங்களை அசீரியாவின் அதிகாரத்தில் இருந்து விடுதலை செய்வேன்.
நான் உங்கள் கழுத்தில் உள்ள அந்த நுகத்தை எடுப்பேன்.
நான் உங்களைக் கட்டியிருக்கிற சங்கிலிகளை அறுப்பேன்.”
14 அசீரியாவின் அரசனே, கர்த்தர் உன்னைக் குறித்து இந்தக் கட்டளையை கொடுத்தார்:
“உன் பெயரை வைத்துக்கொள்ள சந்ததியார் யாரும் உனக்கு இருக்கமாட்டார்கள்.
நான் உன் தெய்வங்களின் ஆலயங்களில் உள்ள செதுக்கப்பட்ட
விக்கிரகங்களையும் உலோகச் சிலைகளையும் அழிப்பேன்.
நான் உனக்காக உனது கல்லறையைத் தயாரித்துக்கொண்டிருக்கிறேன்.
உனது முடிவு விரைவில் வர இருக்கிறது.”
15 யூதாவே, பார்!
அங்கே பார், குன்றுகளுக்கு மேல் வருவதைப் பார்.
இங்கே நல்ல செய்தியைத் தாங்கிக்கொண்டு தூதுவன் வருகிறான்.
அங்கே சமாதானம் இருக்கிறது என்று அவன் சொல்கிறான்.
யூதாவே, உனது விடுமுறை நாட்களைக் கொண்டாடு.
யூதாவே, நீ வாக்களித்தவற்றைச் செய்.
தீய ஜனங்கள் உன்னை மீண்டும் தாக்கித் தோற்கடிக்கமாட்டார்கள்.
ஏனெனில் அந்தத் தீய ஜனங்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள்.
நினிவே அழிக்கப்படும்
2 ஒரு பகைவன் உன்னைத் தாக்க வந்துகொண்டிருக்கிறான்.
எனவே உன் நகரத்தின் வலிமையான பகுதிகளைக் காவல் செய்.
சாலைகளைக் காவல் காத்திடு.
போருக்குத் தயாராக இரு.
யுத்தத்திற்கான ஏற்பாடுகளைச் செய்.
2 ஆம், கர்த்தர் யாக்கோபின் மகிமையை மாற்றினார்.
இது இஸ்ரவேலரின் மகிமை போன்றிருக்கும்.
பகைவன் அவற்றை அழித்தான்.
அவர்களின் திராட்சைக் கொடிகளை அழித்தான்.
3 அவ்வீரர்களின் கேடயங்கள் சிவந்திருக்கிறது.
அவர்களின் சீருடைகள் பிரகாசமான சிவப்பாக உள்ளது.
அவர்களின் இரதங்கள் போருக்கு வரிசையாக உள்ளன,
நெருப்பின் ஜூவாலையைப் போன்று மின்னுகின்றன.
அவர்களின் குதிரைகள் போவதற்கு தயாராக உள்ளன.
4 அவர்களின் இரதங்கள் தெருக்களில் போட்டியிட்டு ஓடுகின்றன.
தெருக்களின் இடது சாரியாகவும் வலதுசாரியாகவும் ஓடுகின்றன.
அவை எரியும் பந்தங்களைப் போன்றும்,
அங்குமிங்கும் மின்னும் மின்னலைப் போலவும் காணப்படுகின்றன.
5 விரோதி தனது சிறந்த வீரர்களை அழைக்கிறான்.
ஆனால் அவர்கள் மதிற்சுவரை நோக்கி ஓடி,
அங்குள்ள சுவர்களைத் தகர்க்கும் கருவியின்மேல்
அவர்களின் கேடயத்தை நிறுவுகிறார்கள்.
6 ஆனால் ஆற்றின் மதகுகள் திறக்கப்படுகின்றன.
எதிரிகள் அவ்வழியாக வந்து அரசனின் வீட்டை அழிக்கிறார்கள்.
7 பகைவர்கள் ராணியைப் பிடித்துச் செல்வார்கள்.
அவளது அடிமைப்பெண்கள் புறாக்களைப் போன்று துக்கத்துடன் அழுவார்கள்.
அவர்கள் தம் மார்பில் அடித்துக்கொண்டு தமது துக்கத்தைக் காட்டுவார்கள்.
8 நினிவே, தண்ணீர் வற்றிப்போன
குளத்தைப்போன்று இருக்கிறது.
ஜனங்கள், “நிறுத்துங்கள்! ஓடுவதை நிறுத்துங்கள்!” என்று சொன்னார்கள்.
ஆனால் அது பயன் தரவில்லை.
9 நினிவேயை அழிக்கப்போகும் வீரர்களாகிய நீங்கள், வெள்ளியை எடுங்கள்!
தங்கத்தை எடுங்கள்!
அங்கே எடுப்பதற்கு ஏராளமாக உள்ளன.
அங்கே ஏராளமான கருவூலங்கள் உள்ளன.
10 இப்பொழுது, நினிவே காலியாக இருக்கிறது.
எல்லாம் திருடப்பட்டன.
நகரம் அழிக்கப்பட்டது.
ஜனங்கள் தங்கள் தைரியத்தை இழந்தனர்.
அவர்களது இதயங்கள் அச்சத்தால் உருகின.
அவர்களது முழங்கால்கள் ஒன்றோடொன்று இடித்துக்கொண்டன,
அவர்களது உடல்கள் நடுங்குகின்றன, முகங்கள் அச்சத்தால் வெளுத்தன.
11 இப்பொழுது சிங்கத்தின் குகை (நினிவே) எங்கே?
ஆண்சிங்கமும் பெண்சிங்கமும் அங்கே வாழ்ந்தன.
அவற்றின் குட்டிகள் அஞ்சவில்லை.
12 சிங்கமானது (நினிவேயின் அரசன்) தனது குட்டிகளுக்கும் பெண்சிங்கத்திற்கும்
உணவு கொடுப்பதற்காக ஏராளமான ஜனங்களைக் கொன்று அழித்தது.
அது தனது குகையை (நினிவே) ஆண்களின் உடல்களால் நிறைத்தது.
அது தான் கொன்ற பெண்களின் உடல்களால் குகையை நிறைத்தது.
13 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:
“நினிவே, நான் உனக்கு எதிராக இருக்கிறேன்.
நான் உனது இரதங்களை எரிப்பேன், உனது ‘இளஞ்சிங்கங்களைப்’ போரில் கொல்வேன்.
நீ இந்த பூமியில் மீண்டும் எவரையும் வேட்டையாடமாட்டாய்.
ஜனங்கள் உனது தூதுவர்களிடமிருந்து மீண்டும் கெட்ட செய்திகளைக் கேட்கமாட்டார்கள்.”
நினிவேவுக்குச் கெட்டச் செய்தி
3 அந்த கொலைக்காரர்களின் நகரத்திற்கு இது மிகவும் கெட்டதாக இருக்கும்.
நினிவே, பொய்கள் நிறைந்த நகரமாக இருக்கிறது.
இது மற்ற நாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களால் நிறைந்திருக்கிறது.
இந்நகரம், கொன்றும், கொள்ளையடித்தும் கொண்டுவந்த ஜனங்களாலும் அதிகமாக நிறைந்துள்ளது.
2 நீங்கள், சவுக்குகளின் ஓசையையும்,
சக்கரங்களின் அதிர்ச்சியையும்,
குதிரைகளின் பாய்ச்சலையும்,
இரதங்களின் ஓடுகிற சத்தத்தையும் கேட்கமுடியும்.
3 குதிரைமேல் வந்த வீரர்கள் தாக்குகின்றனர்.
அவர்களின் வாள்கள் மின்னுகின்றன.
அவர்களின் ஈட்டிகள் மின்னுகின்றன.
அங்கே, ஏராளமான மரித்த ஜனங்கள், மரித்த உடல்கள் குவிந்துள்ளன.
எண்ணுவதற்கு முடியாத ஏராளமான உடல்கள் உள்ளன.
ஜனங்கள் மரித்த உடல்களில் தடுக்கி விழுகின்றனர்.
4 இவை அனைத்தும் நினிவேயால் ஏற்பட்டன.
நினிவே, ஒரு வேசியைப் போன்றவள்.
அவளுக்குத் திருப்தி இல்லை. அவள் மேலும் மேலும் விரும்பினாள்.
அவள் தன்னைத்தானே பல நாடுகளுக்கு விற்றாள்.
அவள் அவர்களைத் தன் அடிமையாக்க மந்திரத்தைப் பயன்படுத்தினாள்.
5 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:
“நினிவே, நான் உனக்கு எதிராக இருக்கிறேன்.
நான் உனது ஆடைகளை உன் முகம் மட்டும் தூக்குவேன்.
நான் உனது நிர்வாண உடலை தேசங்கள் பார்க்கும்படிச் செய்வேன்.
அந்த இராஜ்யங்கள் உனது அவமானத்தைக் காணும்.
6 நான் உன்மேல் அசுத்தமானவற்றை எறிவேன்.
நான் உன்னை வெறுக்கத்தக்க முறையில் நடத்துவேன்.
ஜனங்கள் உன்னைப் பார்த்து சிரிப்பார்கள்.
7 உன்னைப் பார்க்கிற ஒவ்வொருவரும் அதிர்ச்சி அடைவார்கள்.
அவர்கள், ‘நினிவே அழிக்கப்படுகிறது.
அவளுக்காக யார் அழுவார்கள்?’ என்பார்கள்.
நினிவே, என்னால் உன்னை ஆறுதல்படுத்தும் எவரையும்
கண்டுபிடிக்க முடியாது என்று எனக்குத் தெரியும்.”
8 நினிவே, நீ நல்ல ஆற்றங்கரையிலுள்ள தீப்ஸ்ஸைவிடச் சிறந்ததா? இல்லை! தீப்ஸும் தன்னைச் சுற்றி தண்ணீர் நிறைந்துள்ளது. தீப்ஸ் தன்னைப் பகைவர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள தண்ணீரை பயன்படுத்துகிறது. அவள் தண்ணீரைச் சுவரைப்போன்று பயன்படுத்துகிறாள். 9 எத்தியோப்பியாவும் எகிப்தும் தீப்ஸ்ஸுக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தன. சூடான், லிபியா தேசங்கள் அவளுக்கு உதவின. 10 ஆனால், தீப்ஸ் தோற்கடிக்கப்பட்டது. அவளது ஜனங்கள் அந்நிய நாடுகளுக்குக் கைதிகளாகக் கொண்டுச்செல்லப்பட்டனர். வீரர்கள் ஒவ்வொரு தெரு முனையிலும் அவளது சிறு குழந்தைகளைக் கொல்வதற்காக அடித்தனர். அவர்கள் சீட்டுப்போட்டு முக்கியமான ஜனங்களை யார் அடிமைகளாக வைத்துக்கொள்வது என்பது பற்றி முடிவெடுத்தனர். தீப்ஸ்ஸில் உள்ள முக்கியமானவர்கள் மீது சங்கிலிகளைப் பூட்டினார்கள்.
11 எனவே நினிவே, நீயும் ஒரு குடிக்காரனைப் போன்று விழுவாய். நீ ஒளிந்துக்கொள்ள முயல்வாய். நீ பகைவரிடமிருந்து மறைய ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடுவாய். 12 ஆனால் நினிவே, உனது பலமுள்ள அனைத்து இடங்களும் அத்தி மரங்களைப் போன்றவை புதியப்பழங்கள் பழுக்கும். ஒருவன் வந்து மரத்தை உலுக்குவான். அந்த அத்திப்பழங்கள் அவனது வாயில் விழும். அவன் அவற்றை உண்பான். அவைகள் தீர்ந்துவிட்டன.
13 நினிவே, உன் ஜனங்கள் அனைவரும் பெண்களைப் போன்றிருக்கின்றனர். பகை வீரர்கள் அவர்களை எடுத்துச்செல்லத் தயாராக இருப்பார்கள். உங்கள் நாட்டின் வாசல்கள் எதிரிகள் நுழைவதற்காகத் திறந்தே கிடக்கும், வாசலின் குறுக்காக கிடக்கும் மரச்சட்டங்களை நெருப்பு அழித்திருக்கிறது.
14 நீங்கள் தண்ணீரை உங்களது நகருக்குள் சேமியுங்கள். ஏனென்றால், பகைவீரர்கள் உங்கள் நகரை முற்றுகையிடுவார்கள். அவர்கள் எவரையும் தண்ணீரும் உணவும் நகருக்குள் கொண்டுசெல்ல விடமாட்டார்கள். நீங்கள் உங்களது அரண்களைப் பலப்படுத்துங்கள். அதிகமான செங்கல்களைச் செய்ய களி மண்ணைக் கொண்டு வாருங்கள். சாந்தைக் கலந்து செங்கல்களுக்கு உருவம் அளிக்கும் பொருளை பெற்றுக்கொள்ளுங்கள். 15 நீங்கள் எல்லாவற்றையும் செய்யலாம். ஆனால் நெருப்பு அவற்றை முழுமையாக அழித்துவிடும். வாள் உங்களைக் கொல்லும். உங்கள் நிலம் பச்சைக்கிளிகள் வந்து எல்லாவற்றையும் சாப்பிட்டதுபோல் ஆகும்.
நினவே, நீ மேலும் மேலும் வளர்வாய். நீ பச்சைக்கிளிகளைப்போல மாறுவாய். முன்பு நீ வெட்டுக்கிளியைப் போன்றிருந்தாய். 16 உன்னிடம் ஒவ்வொரு இடங்களுக்கும் போய் பொருட்களை வாங்குகிற வியாபாரிகள் அதிகமாக உள்ளனர். அவர்கள் வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப்போன்று என்ணிக்கை உடையவர்கள். அவர்கள் வெட்டுக்கிளிகளைப்போன்று வந்து எல்லாம் அழியும்வரை உண்டு, பின் சென்றுவிடுவார்கள். 17 உங்களது அரசு அதிகாரிகளும் வெட்டுக்கிளிகளைப் போன்றவர்கள். அவர்கள் குளிர் நாளில் சுவர்களுக்குமேல் இருக்கும் வெட்டுக் கிளிகளைப் போன்றுள்ளனர். ஆனால் சூரியன் மேலே வந்தபோது, பாறைகள் சூடாகும். வெட்டுக்கிளிகள் வெளியே பறந்துப்போகும். ஒருவரும் எங்கே என்று அறியமாட்டார்கள். உங்களது அதிகாரிகளும் அத்தகையவர்களே.
18 அசீரியாவின் அரசனே, உங்களது மேய்ப்பர்கள் (தலைவர்கள்) தூங்கிவிழுந்தனர். அப்பலமிக்க மனிதர்கள் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது உங்கள் ஆடுகள் (ஜனங்கள்) குன்றுகளின் மேல் அலைந்திருக்கின்றன. அவற்றைத் திருப்பிக் கொண்டுவர எவருமில்லை. 19 நினிவே நீ மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறாய். உன் காயத்தை எவராலும் குணப்படுத்த முடியாது. உனது அழிவைப்பற்றி கேள்விப்படுகிற ஒவ்வொருவரும் கைத்தட்டுவார்கள். அவர்கள் அனைவரும் மகிழ்கின்றனர். ஏனென்றால் அவர்கள் அனைவரும் உன்னால் எப்பொழுதும் ஏற்பட்ட வலியை உணர்ந்தவர்கள்.
2008 by World Bible Translation Center