Bible in 90 Days
பில்தாத் யோபுக்குப் பதில் கூறுகிறான்
25 சூகியனான பில்தாத் பதிலாக:
2 “தேவனே அரசாள்பவர்.
ஒவ்வொரு மனிதனையும் அவருக்கு பயந்து மதிக்கச் செய்கிறார்.
தேவன் தமது உன்னதமான இடத்தில் சமாதானமாக வைக்கிறார்.
3 அவரது நட்சத்திரங்களை எவரும் எண்ண முடியாது.
தேவனுடைய வெளிச்சம் எல்லோர்மேலும் உதிக்கிறது.
4 தேவனுக்கு முன்பாக நீதிமான் யார் இருக்க முடியும்?
மனித இனத்தில் ஒருவனும் உண்மையில் தூயவனாக இருக்க முடியாது.
5 தேவனுடைய கண்களுக்கு சந்திரன் தூய்மையானதோ ஒளியுடையதோ அல்ல.
நட்சத்திரங்களும் அவருடைய பார்வையில் தூயவை அல்ல.
6 ஜனங்கள் இன்னும் தூய்மையில் குறைந்தவர்கள்.
பூச்சியைப் போன்றும், புழுக்களைப் போன்றும் பயனற்றவர்கள்!” என்றான்.
யோபு பில்தாதுக்குப் பதில் தருகிறான்
26 அப்போது யோபு பதிலாக:
2 “பில்தாத், சோப்பார், எலிப்பாஸ் ஆகியோரே, சோர்வுற்று நலிந்த இம்மனிதனுக்கு நீங்கள் எப்படி உதவி செய்தீர்கள்?
ஆம், நீங்கள் உண்மையிலேயே நல்ல ஊக்கமூட்டுபவர்களாக இருந்திருக்கிறீர்கள்!
உண்மையிலேயே நீங்கள் என் தளர்ந்துப்போன கரங்களை மறுபடியும் பெலப்படசெய்தீர்கள்.
3 ஆம், ஞானமற்றவனுக்கு நீங்கள் அற்புதமான அறிவுரையைத் தந்திருக்கிறீர்கள்!
நீங்கள் எத்தனை ஞானவான்கள் என்பதை உண்மையாகவே காட்டியிருக்கிறீர்கள்! [a]
4 இவற்றைச் சொல்ல உங்களுக்கு உதவியவர் யார்?
யாருடைய ஆவி உங்களுக்கு எழுச்சியூட்டியது?
5 “பூமிக்கு அடியிலுள்ள வெள்ளங்களில் மரித்தோரின் ஆவிகள் பயத்தால் நடுங்குகின்றன.
6 ஆனால் தேவனால் மரணத்தின் இடத்தில் தெளிவாகப் பார்க்க முடியும்.
மரணம் தேவனிடமிருந்து மறைந்திருக்கவில்லை.
7 வெறுமையான இடத்தில் தேவன் வடக்கு வானத்தைப் பரப்பினார்.
வெற்றிடத்தின் மேல் தேவன் பூமியைத் தொங்கவிட்டார்.
8 தேவன் அடர்ந்த மேகங்களை தண்ணீரால் நிரப்புகிறார்.
மிகுந்த பாரம் மேகங்களை உடைத்துத் திறக்காதபடி தேவன் பார்க்கிறார்.
9 முழு நிலாவின் முகத்தை தேவன் மூடுகிறார்.
அவர் தமது மேகங்களை அதன் மீது விரித்து அதைப் போர்த்துகிறார்.
10 தேவன் ஒரு எல்லைக் கோடுபோன்ற வளையத்தை கடலில் வரைந்து
ஒளியும், இருளும் சந்திக்கும்படிச் செய்தார்.
11 தேவன் பயமுறுத்தும்போது
வானைத் தாங்கும் அஸ்திபாரங்கள் அச்சத்தால் நடுங்குகின்றன.
12 தேவனுடைய வல்லமை கடலை அமைதிப்படுத்துகிறது.
தேவனுடைய ஞானம் ராகாபின் உதவியாளர்களை அழித்தது.
13 தேவனுடை மூச்சு வானங்களைத் தெளிவாக்கும்.
தப்பிச்செல்ல முயன்ற பாம்பை தேவனுடைய கை அழித்தது.
14 தேவன் செய்கிற வியக்கத்தக்க காரியங்களில் இவை சிலவே.
தேவனிடமிருந்து ஒரு சிறிய இரகசிய ஒலியையே நாம் கேட்கிறோம்.
தேவன் எத்தனை மேன்மையானவரும் வல்லமையுள்ளவரும் என்பதை ஒருவனும் உண்மையாகப் புரிந்துகொள்ள முடியாது” என்றான்.
27 பின்பு யோபு தன் விரிவுரையைத் தொடர்ந்தான். அவன்,
2 “உண்மையாகவே, தேவன் உயிரோடிருக்கிறார்.
தேவன் உண்மையாக வாழ்வதைப்போல, அவர் உண்மையாக என்னோடு அநீதியாய் நடக்கிறார்.
ஆம், சர்வ வல்லமையுள்ள தேவன் என் வாழ்க்கையைக் கசப்பாக்கினார்.
3 ஆனால் என்னில் உயிருள்ளவரையிலும்
தேவனுடைய உயிர்மூச்சு என் மூக்கில் இருக்கும் மட்டும்
4 என் உதடுகள் தீயவற்றைப் பேசாது,
என் நாவு ஒருபோதும் பொய் கூறாது.
5 நீங்கள் சொல்வது சரியென நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.
நான் மரிக்கும் நாள் மட்டும், நான் களங்கமற்றவன் என்று தொடர்ந்து சொல்வேன்.
6 நான் செய்த நல்லவற்றைத் கெட்டியாகப் (இறுகப்) பிடித்துக்கொள்வேன்.
நியாயமாக நடப்பதை விட்டுவிடமாட்டேன்.
நான் வாழும்வரை என் மனச்சாட்சி என்னை உறுத்தாது.
7 ஜனங்கள் எனக்கெதிராக எழுந்து நிற்கிறார்கள்.
தீயோர் தண்டிக்கப்படுவதைப் போல என் பகைவர்கள் தண்டனை பெறுவார்கள் என நம்புகிறேன்.
8 ஒருவன் தேவனைப்பற்றிக் கவலைப்படாவிட்டால், அவன் மரிக்கும்போது, அவனுக்கு ஒரு நம்பிக்கையுமில்லை.
தேவன் அவன் உயிரை எடுக்கும்போது, அம்மனிதனுக்கு நம்பிக்கை எதுவுமில்லை.
9 அத்தீயவனுக்குத் தொல்லைகள் விளையும், அவன் தேவனை நோக்கி உதவி வேண்டுவான்.
ஆனால் தேவன் அவனுக்குச் செவிசாய்க்கமாட்டார்!
10 சர்வ வல்லமையுள்ள தேவனிடம் பேசுவதில் அவன் களிப்படைந்திருக்க வேண்டும்.
எப்போதும் அம்மனிதன் தேவனிடம் ஜெபம் செய்திருக்க வேண்டும்.
11 “தேவனுடைய வல்லமையைக் குறித்து நான் உங்களுக்குப் போதிப்பேன்.
சர்வ வல்லமையுள்ள தேவனுடைய திட்டங்களை நான் உங்களிடம் மறைக்கமாட்டேன்.
12 உங்கள் சொந்தக் கண்களால் தேவனுடைய வல்லமையைக் கண்டிருக்கிறீர்கள்.
எனவே அந்தப் பயனற்ற காரியங்களை நீங்கள் ஏன் சொல்கிறீர்கள்?
13 தீயோருக்காக தேவன் திட்டமிட்டது இதுவே
சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து கொடியோர் இதையே பெறுவார்கள்.
14 தீயவனுக்குப் பல பிள்ளைகள் இருக்கலாம். ஆனால் அவனது பிள்ளைகள் மரிப்பார்கள்.
தீயவனின் பிள்ளைகளுக்கு உண்பதற்கு போதிய உணவு இராது.
15 அவனது எல்லாப் பிள்ளைகளும் மரிப்பார்கள்.
அவனது விதவை அவனுக்காகத் துக்கப்படமாட்டாள்.
16 தீயோனுக்குத் துகளைப்போன்று மிகுதியான வெள்ளி கிடைக்கலாம்.
களிமண் குவியலைப்போன்று அவனிடம் பல ஆடைகள் இருக்கலாம்.
17 ஆனால் அவனது ஆடைகள் நல்லவனுக்குக் கிடைக்கும்.
களங்கமற்ற ஜனங்கள் அவனது வெள்ளியைப் பெறுவார்கள்.
18 தீயவன் ஒரு வீட்டைக் கட்டலாம், ஆனால் அது நீண்டகாலம் நிலைக்காது.
அது ஒரு சிலந்தி வலையைப்போன்றும், காவலாளியின் கூடாரத்தைப்போன்றும் இருக்கும்.
19 தீயவன் ஒருவன் படுக்கைக்குப் போகும்போது, செல்வந்தனாக இருக்கலாம்.
ஆனால் அவனது கண்களை அவன் திறக்கும்போது, எல்லா செல்வங்களும் மறைந்திருக்கும்.
20 அவன் அச்சமடைவான்.
அது வெள்ளப் பெருக்கைப் போன்றும், புயல்வீசி எல்லாவற்றையும் அடித்துச் செல்வதைப்போன்றும் இருக்கும்.
21 கிழக்குக் காற்று அவனை அடித்துச் செல்லும், அவன் அழிந்துபோவான்.
புயல் அவன் வீட்டிலிருந்து அவனை இழுத்துச் செல்லும்.
22 புயலின் வல்லமையிலிருந்து தீயவன் ஓடிப்போக முயல்வான்
ஆனால், இரக்கமின்றி புயல் அவனைத் தாக்கும்.
23 தீயவன் ஓடிப்போகும்போது, மனிதர்கள் கைகொட்டுவார்கள்.
தீயவன் வீட்டைவிட்டு ஓடுகிறபோது, அவர்கள் அவனைப் பார்த்து சீட்டியடிப்பார்கள்.”
The V a lu e of W is d o m
28 “வெள்ளியை ஜனங்கள் பெறும் சுரங்கங்கள் உண்டு,
ஜனங்கள் பொன்னை உருக்கிப் புடமிடும் (தூயதாக்கும்) இடங்கள் உண்டு.
2 மனிதர்கள் நிலத்திலிருந்து இரும்பை வெட்டியெடுக்கிறார்கள்,
செம்பு பாறையிலிருந்து உருக்கி எடுக்கப்படுகிறது.
3 வேலையாட்கள் குகைகளுக்குள் விளக்குகளை எடுத்துச்செல்கிறார்கள்.
அவைகளை குகைகளின் ஆழமான பகுதிகளில் தேடுகிறார்கள்.
ஆழ்ந்த இருளில் அவர்கள் பாறைகளைத் தேடிப்பார்க்கிறார்கள்.
4 தாது இருக்கும் பகுதிகளைத் தேடி, வேலையாட்கள் நிலத்தினுள் ஆழமாகத் தோண்டுகிறார்கள்.
ஜனங்கள் வசிக்காத (வாழாத) தூரமான இடங்களிலும், ஒருவரும் சென்றிராத இடங்களிலும், அவர்கள் நிலத்தினுள் ஆழமாகப் போகிறார்கள்.
மற்ற ஜனங்களைக் காட்டிலும் ஆழமான இடங்களில், அவர்கள் கயிறுகளிலிருந்து தொங்குகிறார்கள்.
5 நிலத்தின் மேல் உணவு விளைகிறது,
ஆனால் நிலத்திற்குக் கீழே, அனைத்தும் நெருப்பினால் உருக்கப்பட்டதுபோல, அது வேறு மாதிரியாகத் தோன்றுகிறது.
6 நிலத்தின் கீழே இந்திர நீலக்கற்கள் காணப்படும்.
அங்குத் தூயப் பொன் பொடிகள் உண்டு.
7 நிலத்தின் கீழுள்ள பாதைகளைப்பற்றிக் காட்டுப் பறவைகள் கூட அறியாது.
அந்த இருண்ட பாதைகளை வல்லூறும் பார்த்ததில்லை.
8 காட்டு மிருகங்கள் அப்பாதையில் நடந்ததில்லை.
சிங்கங்கள் அவ்வழியில் பயணம் செய்ததில்லை.
9 வேலையாட்கள் மிகக் கடினமான பாறைகளைத் தோண்டுகிறார்கள்.
அப்பணியாட்கள் பர்வதங்களை தோண்டி அதனை வெட்டாந்தரையாக்குகிறார்கள்.
10 வேலையாட்கள் பாறைகளினூடே நீர்க் கால்களை வெட்டுகிறார்கள்.
எல்லா பாறைகளின் பொக்கிஷங்களையும் அவர்கள் பார்க்கிறார்கள்.
11 பணியாட்கள் தண்ணீரைத் தடை செய்ய, அணைகளைக் கட்டுகிறார்கள்.
அவர்கள் மறை பொருளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார்கள்.
12 “ஆனால் ஒருவன் ஞானத்தை எங்கே காண்பான்?
நாம் எங்கு புரிந்துகொள்ளுதலைக் காண முடியும்?
13 ஞானம் எத்தனை விலையுயர்ந்தது என நாம் அறியோம்,
பூமியின் ஜனங்கள் நிலத்தைத் தோண்டி, ஞானத்தைக் கண்டடைய முடியாது.
14 ஆழமான சமுத்திரம், ‘ஞானம் இங்கு என்னிடம் இல்லை’ என்கிறது.
கடல், ‘ஞானம் இங்கு என்னிடம் இல்லை’ என்கிறது.
15 மிகத்தூய பொன்னாலும் கூட, உங்களால் ஞானத்தை வாங்கமுடியாது!
ஞானத்தை வாங்கப் போதுமான அளவு வெள்ளி இவ்வுலகில் இராது!
16 ஓபீரின் தங்கத்தாலோ, கோமேதகத் தாலோ, இந்திர நீலக்கல்லாலோ,
நீங்கள் ஞானத்தை வாங்க முடியாது.
17 ஞானம் பொன் அல்லது படிகத்தைக் காட்டிலும் சிறப்பானது!
பொன்னில் பதிக்கப்பெற்ற விலையுயர்ந்த கற்களால் ஞானத்தை வாங்கமுடியாது.
18 பவளம், சூரியகாந்தம் ஆகியவற்றிலும் ஞானம் உயர்ந்தது.
சிவந்தக் கற்களைக் காட்டிலும் ஞானம் விலையுயர்ந்தது.
19 எத்தியோப்பியா நாட்டின் புஷ்பராகம் ஞானத்தைப்போன்று விலைமதிப்பபுடையதல்ல.
தூயப் பொன்னால் உங்களால் ஞானத்தை வாங்கமுடியாது.
20 “எனவே ஞானம் எங்கிருந்து வருகிறது?
எங்கு நாம் புரிந்துகொள்ளுதலைக் காண முடியும்?
21 பூமியின் உயிரினங்களுக்கு எல்லாம் ஞானம் மறைந்திருக்கிறது.
வானத்துப் பறவைகள் கூட ஞானத்தைக் காண முடியாது.
22 மரணமும் அழிவும், ‘நாங்கள் ஞானத்தைக் கண்டதில்லை.
நாங்கள் அதைக் குறித்த வதந்திகளைக் காதினால் மட்டும் கேட்டோம்’ என்கின்றன.
23 “தேவன் மட்டுமே ஞானத்தின் வழியை அறிகிறார்.
தேவன் மட்டுமே ஞானம் இருக்குமிடத்தை அறிகிறார்.
24 பூமியின் இறுதிப் பகுதிகளையும் தேவனால் பார்க்க முடிகிறது.
வானின் கீழுள்ள எல்லாவற்றையும் தேவன் பார்க்கிறார்.
25 தேவன் காற்றிற்கு அதன் வல்லமையை அளித்தார்.
கடல்களை எத்தனை பெரிதாக படைக்க வேண்டுமென்று தேவன் முடிவெடுத்தார்.
26 எங்கே மழையை அனுப்புவதென்றும்,
இடி முழக்கங்களை எங்கே செலுத்துவதென்றும் தேவன் முடிவெடுக்கிறார்.
27 தேவன் ஞானத்தைக் கண்டு, அதைப் பற்றி யோசித்தார்.
ஞானத்தின் மதிப்பை தேவன் கண்டு, அதனை ஏற்றுக்கொண்டார்.
28 தேவன் மனிதரை நோக்கி, ‘கர்த்தருக்கு பயப்படுங்கள், அவரை மதியுங்கள்.
அதுவே ஞானம் ஆகும், தீமைச் செய்யாதீர்கள் அதுவே புரிந்து கொள்ளும் திறன் ஆகும்!’” என்றார்.
யோபு அவனது பேச்சைத் தொடர்கிறான்
29 யோபு அவனுடைய பேச்சைத் தொடர்ந்தான்.
2 யோபு: “தேவன் என்னைக் கண்காணித்துக் கவனித்து வந்தபோது,
பல மாதங்களுக்கு முன்பு இருந்தாற்போன்று என் வாழ்க்கை அமையாதா என விரும்புகிறேன்.
3 அந்நாட்களில் தேவனுடைய ஒளி என் மீது பிரகாசித்ததால், நான் இருளின் ஊடே நடக்க முடிந்தது.
தேவன் நான் வாழ வேண்டிய சரியான வழியைக் காண்பித்தார்.
4 நான் வெற்றிகரமானவனாகவும், தேவன் எனக்கு நெருங்கிய நண்பராகவும் இருந்த நாட்களை நான் விரும்புகிறேன்.
அந்நாட்களில் தேவன் என் வீட்டை ஆசீர்வதித்தார்.
5 சர்வ வல்லமையுள்ள தேவன் என்னோடிருந்தும், என் பிள்ளைகள் என்னருகே இருந்ததுமான காலத்தை நான் விரும்புகிறேன்.
6 என் வாழ்க்கை மிக நன்றாக இருந்த காலம் அது.
நான் பாலேட்டில் என் கால்களைக் கழுவினேன், சிறந்த எண்ணெய்கள் என்னிடம் ஏராளம் இருந்தன.
7 “நான் நகரவாயிலுக்குச் சென்று,
பொது ஜனங்கள் கூடும் இடத்தில் நகர மூப்பர்களுடன் வீற்றிருந்த நாட்கள் அவை.
8 அங்கு எல்லா ஜனங்களும் எனக்கு மதிப்பளித்தார்கள்!
நான் வருவதைப் பார்க்கும்போது இளைஞர்கள் என் பாதையிலிருந்து (எனக்கு வழிவிட்டு) விலகி நின்றார்கள்.
முதியோர் எழுந்து நின்றனர்.
என்னை அவர்கள் மதித்ததைக் காட்டும் பெருட்டு அவர்கள் எழுந்தனர்.
9 ஜனங்களின் தலைவர்கள் பேசுவதை நிறுத்தினார்கள்.
பிறரும் அமைதியாயிருக்கும்படி அவர்கள் தங்கள் கைகளை வாய்களில் வைத்தார்கள்.
10 மிக முக்கியமான தலைவர்கள் கூட தங்கள் சத்தத்தைக் குறைத்து (தாழ்ந்த தொனியில்) பேசினார்கள்.
ஆம், அவர்கள் நாவு வாயின்மேல் அன்னத்தில் ஒட்டிக்கொண்டாற்போலத் தோன்றிற்று.
11 ஜனங்கள் எனக்குச் செவிகொடுத்தார்கள்,
என்னைப்பற்றி நல்ல காரியங்களைச் சொன்னார்கள்.
12 ஏனெனில், ஏழை உதவிக்காக கூப்பிட்டபோது, நான் உதவினேன்.
நான் பெற்றோரற்ற பிள்ளைகளுக்கும், கவனிப்பாரற்ற பிள்ளைகளுக்கும் உதவினேன்.
13 கெட்டுப்போன மனிதன் என்னை ஆசீர்வதித்தான்.
உதவி தேவைப்பட்ட விதவைகளுக்கு நான் உதவினேன்.
14 நேர்மையான வாழ்க்கையை நான் ஆடையாக உடுத்தியிருந்தேன்.
நியாயம் எனக்கு அங்கியாகவும், தலைப்பாகையாகவும் அமைந்தது.
15 குருடர்களுக்கு நான் கண்களானேன்.
அவர்கள் போகவேண்டிய இடத்திற்கு வழி நடத்தினேன்.
முடவருக்கு நான் காலானேன்.
அவர்கள் போகவேண்டிய இடத்திற்கு அவர்களைச் சுமந்து சென்றேன்.
16 நான் ஏழைகளுக்குத் தந்தையைப் போன்றிருந்தேன்.
நான் அறிந்திராத ஜனங்களுக்கு உதவினேன்.
நியாயசபையில் அவர்களின் வழக்கு வெற்றிப்பெற உதவினேன்.
17 நான் தீயோரின் ஆற்றலை அழித்தேன்.
அவர்களிடமிருந்து களங்கமற்றோரைக் காப்பாற்றினேன்.
18 “என் குடும்பத்தினர் என்னைச் சூழ்ந்திருக்க
வயது முதிர்ந்தவனாக நீண்ட காலம் வாழ்வேன் என எண்ணியிருந்தேன்.
19 பனிப்படர்ந்த கிளைகளும் தண்ணீரை மிகுதியாகப் பெற்ற வேர்களையுமுடைய ஆரோக்கியமான செடியைப்போல
நானும் ஆரேக்கியமாயிருப்பேன் என எண்ணியிருந்தேன்.
20 என் பெலன் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டது.
என் கையிலுள்ள வில் புதுப்பெலன் கொண்டது.
21 “கடந்தக் காலத்தில், ஜனங்கள் எனக்குச் செவி கொடுத்தார்கள்.
அவர்கள் எனது அறிவுரைக்காகக் காத்திருந்தபோது அமைதியாக இருந்தார்கள்.
22 நான் பேசி முடித்தப் பின்பு, எனக்குச் செவி கொடுத்த ஜனங்கள், அதற்குமேல் எதையும் கூறவில்லை.
என் வார்த்தைகளை அவர்கள் மகிழ்சியாக ஏற்றுக்கொண்டனர்.
23 மழைக்காக காத்திருப்பதைப்போல நான் பேசுவதற்காக ஜனங்கள் காத்திருந்தார்கள்.
வசந்த காலத்தில் தரை மழையை உறிஞ்சுவதுபோல, அவர்கள் என் வார்த்தைகளை குடித்தார்கள்.
24 நான் அந்த ஜனங்களோடு சேர்ந்து சிரித்தேன்.
அவர்களால் அதை நம்ப முடியவில்லை.
என் புன்னகை அவர்களுக்கு நல்லுணர்வைக் கொடுத்தது.
25 நான் ஜனங்களுக்குத் தலைவனாக இருந்தும் கூட, நான் அந்த ஜனங்களோடிருப்பதைத் தேர்ந் தெடுத்தேன்.
பாளையத்தில் தனது சேனைகளோடு வீற்றிருக்கும் அரசனைப் போன்று,
நான் துயரமுற்ற ஜனங்களுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தேன்.
30 “ஆனால் இப்போது, என்னைக் காட்டிலும்
இளைஞர்கள் கூட என்னைக் கேலிச்செய்கிறார்கள்.
அவர்களின் தந்தைகளை நான் என் மந்தையைக் காக்கும் நாய்களோடே வைக்கவும் வெட்கப் பட்டிருப்பேன்.
2 அந்த இளைஞர்களின் தந்தைகள் எனக்கு உதவ முடியாதபடிச் சோர்ந்திருக்கிறார்கள்.
அவர்கள் வயது முதிர்ந்தவர்கள், அவர்களின் களைத்துப்போன தசைநார்கள் வலிமையும் ஆற்றலுமற்றுக் காணப்படுகின்றன.
3 அவர்கள் மரித்தவர்களைப் போலிருக்கிறார்கள், அவர்கள் உண்பதற்கு எதுவுமில்லாமல் பட்டினியாயிருக்கிறார்கள்.
எனவே அவர்கள் பாலைவனத்தின் உலர்ந்த அழுக்கை உண்கிறார்கள்.
4 அவர்கள் பாலைவனத்திலுள்ள உப்புத் தாவரங்களைப் பறித்தெடுக்கிறார்கள்.
மரத்தின் வேர்களை அவர்கள் தின்றார்கள்.
5 அவர்கள் பிற ஜனங்களிடமிருந்து துரத்தப்பட்டார்கள்.
அவர்கள் கள்ளர் என ஜனங்கள் அவர்களை உரத்தக் குரலில் சத்தமிட்டார்கள்.
6 அவர்கள் உலர்ந்த ஆற்றுப் படுகைகளிலும்,
மலைப்பக்கத்துக் குகைளிலும் நிலத்தின் துவாரங்களிலும் வாழவேண்டும்.
7 அவர்கள் புதர்களில் ஊளையிடுகிறார்கள்.
முட்புதர்களின் கீழே அவர்கள் ஒதுங்கியிருக்கிறார்கள்.
8 தங்கள் நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட, பெயரற்ற,
தகுதியில்லாத ஒரு கூட்டம் ஜனங்கள் அவர்கள்!
9 “இப்போது அந்த மனிதர்களின் மகன்கள் என்னைக் கேலிச் செய்யும் பாடல்களை பாடுகிறார்கள்.
என் பெயர் அவர்களுக்கு ஒரு கெட்ட வார்த்தை ஆயிற்று.
10 அந்த இளைஞர்கள் என்னை வெறுக்கிறார்கள், அவர்கள் என்னிலிருந்து தூரத்தில் போய் நிற்கிறார்கள்.
அவர்கள் என்னைக் காட்டிலும் சிறந்தவர்கள் என நினைக்கிறார்கள்.
அவர்கள் என் முகத்தில் உமிழவும் செய்கிறார்கள்!
11 தேவன் என் வில்லின் நாணை அறுத்துப் போட்டு என்னைத் தளர்ச்சியடையச் செய்தார்.
அந்த இளைஞர்கள் நிறுத்தாது, எனக்கெதிராகத் தங்கள் கோபத்தையெல்லாம் காட்டினார்கள்.
12 அவர்கள் என் வலது பக்கத்தில் தாக்குகிறார்கள்.
அவர்கள் என் பாதங்களை அகல தள்ளிவிட்டார்கள்.
நான் தாக்கப்படும் நகரத்தைப்போல் இருக்கிறேன்.
என்னைத் தாக்கி அழிப்பதற்கு அவர்கள் என் சுவர்களுக்கெதிராக அழுக்குகளைக் கட்டுகிறார்கள்.
13 அவர்கள் என் பாதையை கெடுத்தார்கள்.
அவர்கள் என்னை அழிப்பதில் வெற்றியடைகிறார்கள்.
அவர்களுக்கு உதவுவதற்கு யாரும் தேவையில்லை.
14 அவர்கள் சுவரில் துளையிடுகிறார்கள்.
அவர்கள் அதன் வழியாக விரைந்து வருகிறார்கள்.
உடையும் கற்கள் என்மீது விழுகின்றன.
15 நான் பயத்தால் நடுங்குகிறேன்.
காற்று பொருள்களைப் பறக்கடிப்பதைப்போல அந்த இளைஞர்கள் என் மகிமையைத் துரத்திவிடுகிறார்கள்.
என் பாதுகாப்பு ஒரு மேகத்தைப்போன்று மறைகிறது.
16 “இப்போது என் உயிர் நீங்கும் நிலையில் உள்ளது.
நான் விரைவில் மடிவேன்.
துன்பத்தின் நாட்கள் என்னைப் பற்றிக்கொண்டன.
17 என் எலும்புகள் எல்லாம் இரவில் வலிக்கின்றன.
என்னைக் கடித்துக்குதறும் வேதனை நிற்கவேயில்லை.
18 தேவன் என் மேற்சட்டையின் கழுத்துப் பட்டையைப் பற்றியிழுத்து
என் ஆடைகளை உருவின்றி சிதைத்தார்.
19 தேவன் என்னைச் சேற்றினுள் தள்ளினார்.
நான் அழுக்கைப் போன்றும் சாம்பலைப் போன்றும் ஆனேன்.
20 “தேவனே, உம்மிடம் உதவிக்காக வேண்டுகிறேன், ஆனால் நீர் பதிலளிப்பதில்லை.
நான் எழுந்து நின்று ஜெபம் செய்கிறேன், ஆனால் நீர் என்னிடம் பாராமுகமாயிருக்கிறீர்.
21 தேவனே, நீர் என்னிடம் கொடுமையாக நடந்தீர்.
என்னைத் தாக்குவதற்கு நீர் உமது வல்லமையைப் பயன்படுத்தினீர்.
22 தேவனே, பலத்த காற்று என்னைப் பறக்கடிக்குமாறு செய்தீர்.
புயலில் நீர் என்னை வெளியே வீசினீர்.
23 நீர் என்னை மரணத்திற்கு வழி நடத்துவீர் என அறிவேன்.
ஒவ்வொரு மனிதனும் மடிய (மரிக்க) வேண்டும்.
24 “ஆனால், ஏற்கெனவே அழிந்தவனை
மீண்டும் நிச்சயமாய் ஒருவனும் தாக்கமாட்டான்.
25 தேவனே, தொல்லைகளுள்ள ஜனங்களுக்காக நான் அழுதேன் என்பதை நீர் அறிவீர்.
ஏழைகளுக்காக என் இருதயம் துயருற்றது என்பதை நீர் அறிவீர்.
26 நான் நல்லவற்றை எதிர்பார்த்தபோது, தீயவை நேர்ந்தன.
நான் ஒளியைத் தேடியபோது, இருள் வந்தது.
27 நான் உள்ளே கிழிந்துபோனேன், என் துன்பம் நிற்கவில்லை.
இன்னும் வரப்போகும் துன்பங்கள் மிகுதி.
28 நான் எப்போதும் துக்கமாயிருக்கிறேன், அதனால் நான் எந்த ஆறுதலும் பெறவில்லை.
நான் சபையில் எழுந்து நின்று, உதவிக்காகக் கூக்குரலிட்டேன்.
29 நான் காட்டு நாய்களைப்போலவும்
நெருப்புக் கோழிகளைபோலவும் தனித்தவனானேன்.
30 என் தோல் நெருப்பினால் எரிந்து உரிந்து கழன்றுபோகிறது.
என் உடல் காய்ச்சலால் சுடுகிறது.
31 துக்கமான பாடல்களைப் பாட என் தம்புரு மீட்டப்பட்டுள்ளது.
துக்கமான அழுகையைப் போன்று என் புல்லாங்குழலின் குரல் ஒலிக்கிறது.
31 “என்னைக் கவர்கின்ற ஒரு கன்னிப் பெண்ணைப் பாராதிருக்கும்படி
என் கண்களோடு நான் ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டேன்.
2 சர்வ வல்லமையுள்ள தேவன் ஜனங்களுக்கு என்ன செய்கிறார்?
உயரத்திலுள்ள பரலோகத்தின் வீட்டிலிருந்து எவ்வாறு தேவன் ஜனங்களுக்குத் திரும்பக் கொடுக்கிறார்?
3 தேவன் தொல்லையையும் அழிவையும் கெட்ட ஜனங்களுக்கு அனுப்புகிறார்.
தவறு செய்வோர்க்கு அழிவை அனுப்புகிறார்.
4 நான் செய்கிற ஒவ்வொன்றையும் தேவன் அறிகிறார்.
நான் எடுக்கும் ஒவ்வோர் அடியையும் தேவன் காண்கிறார்.
5 “நான் பொய்களாலான வாழ்க்கை வாழ்ந்திருந்தால்
அல்லது நான் பொய் சொல்லவும் ஜனங்களை ஏமாற்றவும் ஓடியிருந்தால்,
6 அப்போது, தேவன் என்னைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்குத் தக்க அளவு கோலைப் பயன்படுத்தட்டும்.
அப்போது நான் களங்கமற்றவன் என்பதை தேவன் அறிவார்!
7 நான் சரியான பாதைக்குப் புறம்பே நடந்தால்,
என் கண்கள் என் இருதயத்தை தீமைக்கு நேரே நடத்தினால்,
என் கைகளில் பாவத்தின் அழுக்குப் படிந்திருந்தால், அப்போது தேவன் அறிவார்,
8 அப்போது நான் நட்ட பயிர்களைப் பிறர் உண்ணட்டும்,
என் பயிர்கள் பிடுங்கப்படட்டும்.
9 “நான் பெண்களிடம் காம இச்சை (மோகம்) கொண்டிருந்தால்.
அயலானின் மனைவியோடு தகாத நெறியில் நடக்கும்படி அவன் கதவருகே காத்திருந்தால்.
10 அப்போது, எனது மனைவி மற்றொருவனின் உணவைச் சமைக்கட்டும்,
பிற மனிதன் அவளோடு படுத்திருக்கட்டும்.
11 ஏனெனில் உடலுறவால் விளையும் பாவம் அவமானத்திற்குரியது.
அது தண்டனை பெறக்கூடியக் பாவமாகும்.
12 பாலின உறவு சம்மந்தமான பாவம் அனைத்தையும் அழிக்கும்வரை எரியும் நெருப்பைப் போன்றது.
நான் இதுவரைச் செய்த அனைத்தையும், எனது உடமைகள் யாவற்றையும் அது அழித்துவிடும்!
13 “என் அடிமைகளுக்கு என்னிடம் ஏதோ குறைபாடு ஏற்பட்டபோது
அவர்களிடம் நியாயமாயிருக்க நான் மறுத்திருந்தால்,
14 நான் தேவனைச் சந்திக்கும்போது என்ன செய்வேன்?
நான் செய்ததைக் குறித்து தேவன் விளக்கம் கேட்டால் நான் என்ன சொல்வேன்?
15 என் தாயின் கர்ப்பத்தில் தேவன் என்னை உண்டாக்கினார், தேவன் என் அடிமைகளையும் உண்டாக்கினார்,
நம்முடைய தாயின் கருவில் தேவன் நமக்கு உருவம் கொடுத்தார்.
16 “நான் ஏழைகளுக்கு உதவ ஒருபோதும் மறுத்ததில்லை.
விதவைகளுக்குத் தேவையானவற்றை நான் எப்போதும் கொடுத்தேன்.
17 நான் உணவைப் பொறுத்தமட்டில் சுய நலம் பாராட்டியதில்லை.
நான் எப்போதும் அநாதைகளுக்கு உணவளித்தேன்.
18 தந்தையற்ற பிள்ளைகளுக்கு என் வாழ்க்கை முழுவதும், நான் ஒரு தந்தையைப் போன்றிருந்தேன்.
என் வாழ்க்கை முழுவதும், நான் விதவைகளை ஆதரித்து வந்திருக்கிறேன்.
19 ஆடையில்லாததால் ஜனங்கள் துன்புறுவதைக் கண்டபோதும்,
மேற்சட்டையில்லாத ஏழையைக் கண்டபோதும்,
20 நான் அவர்களுக்கு எப்போதும் ஆடைகளைக் கொடுத்தேன்.
என் ஆடுகளின் மயிரைப் பயன்படுத்தி, அவர்கள் குளிர் நீங்கச் செய்தேன். அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடு என்னை ஆசீர்வதித்தார்கள்.
21 வாயிலில் ஒரு அநாதை வந்து உதவி வேண்டி நிற்கும்போது
நான் என் கைமுட்டியை ஒருபோதும் ஆட்டியதில்லை. [b]
22 நான் எப்போதேனும் அப்படிச் செய்திருந்தால், அப்போது என் கரம் தோளிலிருந்து விழுந்திருக்கும் என நான் நம்புகிறேன்!
என் கரம் எலும்புக் குழியிலிருந்து அகற்றப்பட்டிருக்கும் என நான் நம்புகிறேன்!
23 ஆனால் நான் அத்தகைய தீயகாரியங்கள் எதையும் செய்யவில்லை.
நான் தேவனுடைய தண்டனைக்கு அஞ்சியிருக்கிறேன்.
அவரது மகத்துவம் என்னை அச்சுறுத்துகிறது.
24 “நான் என் செல்வங்களில் நம்பிக்கை வைத்ததில்லை.
எனக்கு உதவுவதற்காக நான் எப்போதும் தேவனையே நம்பியிருந்தேன்.
தூய பொன்னிடம், ‘நீயே என் நம்பிக்கை’ என்று நான் கூறியதில்லை,
25 நான் செல்வந்தனாக இருந்தேன்.
ஆனால் அது என்னைப் பெருமைக்காரனாக்கவில்லை!
நான் மிகுதியான பொருளைச் சம்பாதித்தேன்.
ஆனால், என்னைச் சந்தோஷப்படுத்தியது அதுவல்ல!
26 நான் ஒளிவிடும் சூரியனையோ, அழகிய சந்திரனையோ
ஒருபோதும் தொழுதுகொண்டதில்லை.
27 சூரியன் அல்லது சந்திரனை தொழுதுகொள்ளுமளவிற்கு
நான் ஒருபோதும் மூடனாக இருந்ததில்லை.
28 அதுவும் தண்டிக்கப்படவேண்டிய பாவம் ஆகும்.
நான் அப்பொருள்களை தொழுதுகொண்டிருந்திருப்பேனாகில் சர்வ வல்லமையுள்ள தேவனிடம் உண்மையற்றவனாவேன்.
29 “என் பகைவர்கள் அழிந்தபோது நான் மகிழ்ச்சியடைந்ததில்லை.
தீயவை என் பகைவர்களுக்கு நேரிட்டபோது, நான் அவர்களைக் கண்டு நகைத்ததில்லை.
30 என் பகைவர்களை சபிப்பதாலோ, அவர்கள் மரிக்க வேண்டும் என விரும்பியோ
என் வாய் பாவம் செய்ய நான் ஒருபோதும் அனுமதித்ததில்லை.
31 நான் அந்நியருக்கு எப்போதும் உணவளித்தேன் என்பதை
என் வீட்டிலுள்ளோர் எல்லோரும் அறிவார்கள்.
32 அந்நியர்கள் இரவில் தெருக்களில் தூங்காதபடி
நான் எப்போதும் அவர்களை வீட்டினுள்ளே வரவேற்றேன்.
33 பிறர் தங்கள் பாவங்களை மறைக்க முயல்கிறார்கள்.
ஆனால் நான் என் குற்றத்தை மறைத்ததில்லை.
34 ஜனங்கள் என்ன சொல்வார்களோ?
என்று நான் அஞ்சியதில்லை.
அந்த அச்சம் என்னை அமைதியாயிருக்கச் செய்ததில்லை.
நான் வெளியே போகாமலிருக்க அது தடையாயிருக்கவில்லை.
என்னை ஜனங்கள் வெறுப்பதற்கு (ஜனங்களின் வெறுப்புக்கு) நான் அஞ்சவில்லை.
35 “ஓ! யாரேனும் எனக்குச் செவிகொடுக்க வேண்டுமென விரும்புகிறேன்!
நான் எனது நியாயத்தை விளக்கட்டும்.
சர்வ வல்லமையுள்ள தேவன் எனக்குப் பதில் தருவார் என விரும்புகிறேன்.
நான் செய்தவற்றில் தவறென அவர் நினைப்பதை அவர் எழுதி வைக்கட்டும் என்று நான் விரும்புகிறேன்.
36 அப்போது என் கழுத்தைச் சுற்றிலும் அந்த அடையாளத்தை அணிந்துகொள்வேன்.
ஒரு கிரீடத்தைப்போன்று அதை என் தலைமேல் வைப்பேன்.
37 தேவன் அதைச் செய்தால்.
நான் செய்த ஒவ்வொன்றையும் விளக்கிக் கூற முடியும்.
தலை நிமிர்ந்தபடியே ஒரு தலைவனைப்போன்று நான் தேவனிடம் வர முடியும்.
38 “மற்றொருவனிடமிருந்து நான் என் நிலத்தைத் (அபகரிக்கவில்லை) திருடவில்லை.
நிலத்தை திருடியதாக ஒருவனும் என் மீது குற்றம் சாட்ட முடியாது.
39 நிலத்திலிருந்து நான் பெற்ற உணவிற்காக எப்போதும் உழவர்களுக்கு ஊதியம் கொடுத்துள்ளேன்.
ஒருவருக்குச் சொந்தமான நிலத்தை கைப்பற்ற நான் ஒருபோதும் முயன்றதில்லை.
40 நான் அத்தீயக்காரியங்களை எப்போதேனும் செய்திருந்தால்
அப்போது என் வயல்களில் கோதுமை, பார்லி ஆகியவற்றிற்குப் பதிலாக முள்ளும் களைகளும் முளைக்கட்டும்!” என்றான்.
யோபின் வார்த்தைகள் (சொற்கள்) முடிவடைந்தன.
எலிகூ விவாதத்தில் பங்குக்கொள்கிறான்
32 அப்போது யோபுவின் நண்பர்கள் மூவரும் யோபுவுக்குப் பதில் கூற முயல்வதை விட்டுவிட்டார்கள். தான் உண்மையாகவே களங்கமற்றவன் என யோபு உறுதியாக இருந்ததால், அவர்கள் தங்கள் முயற்சியைக் கைவிட்டார்கள். 2 ஆனால், அங்கு எலிகூ என்னும் பெயருள்ள ஒரு இளைஞன் இருந்தான். அவன் பரகெயேலின் மகன். அவன் பூசு என்னும் பெயருள்ள ஒரு மனிதனின் சந்ததியில் வந்தவன். எலிகூ ராம் குடும்பத்தினன். எலிகூ யோபுவிடம் மிகுந்தக் கோபமடைந்தான். ஏனெனில், யோபு தானே சரியாக நடந்துக் கொண்டான் எனச் சொல்லிக் கொண்டிருந்தான். தேவனைக் காட்டிலும் தானே நியாயமானவன் என்று யோபு சொல்லிக் கொண்டிருந்தான். 3 யோபுவின் நண்பர்கள் மூவரிடமும் எலிகூ கோபங்கொண்டான். ஏனெனில், யோபுவின் கேள்விகளுக்கு அம்மூவரும் பதில் கூற முடியவில்லை. யோபு தவறு செய்தானென அவர்களால் நிறுவமுடியவில்லை. 4 எலிகூ அங்கிருந்தவர்களில் வயதில் இளையவனாயிருந்தான். அதனால், பிறர் ஒவ்வொருவரும் பேசி முடிக்கும்வரை காத்திருந்தான். அப்போது அவன் பேசத் தொடங்கலாம் என உணர்ந்தான். 5 யோபுவின் மூன்று நண்பர்களும் சொல்வதற்கு இனி ஏதும் இல்லை என அப்போது எலிகூ கண்டான். அதனால் அவன் கோபமடைந்தான். 6 எனவே, அவன் பேசத்தொடங்கினான். அவன்:
“நான் இளைஞன், நீங்கள் முதியவர்கள்.
ஆகவேதான் நான் நினைப்பதை உங்களுக்குச் சொல்ல அஞ்சினேன்.
7 நான் எனக்குள், ‘முதியோர் முதலில் பேச வேண்டும்.
முதியோர் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்கள்.
எனவே அவர்கள் பல காரியங்களைக் கற்றிருக்கிறார்கள்’ என்று சிந்தித்தேன்.
8 ஆனால் தேவனுடைய ஆவி ஒருவனை ஞான முள்ளவனாக்குகிறது.
சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மூச்சு ஜனங்களைப் புரிய வைக்கிறது.
9 முதியோர் மட்டுமே ஞானவான்கள் அல்லர்.
சரியானதைப் புரிந்துகொள்வோர் முதியோர் மட்டுமல்லர்.
10 “எனவே தயவுசெய்து எனக்குச் செவி கொடுங்கள்!
நான் நினைப்பதை உங்களுக்குச் சொல்வேன்.
11 நீங்கள் பேசும்போது நான் பொறுமையாகக் காத்திருந்தேன்.
யோபுவுக்கு நீங்கள் கூறிய பதில்களைக் கேட்டேன்.
12 நீங்கள் கூறியவற்றை நான் கவனமாகக் கேட்டேன்.
உங்களில் ஒருவரும் யோபுவை குற்றம் கூறவில்லை.
அவனுடைய விவாதத்திற்கு உங்களில் ஒருவரும் பதில் கூறவில்லை.
13 நீங்கள் மூவரும் ஞானத்தைத் கண்டடைந்ததாகக் கூறமுடியாது.
மனிதரல்ல, தேவன் யோபுவின் விவாதங்களுக்குப் பதில் கூறவேண்டும்.
14 யோபு அவனது விவாதங்களை என்னிடம் முன் வைக்கவில்லை.
எனவே நீங்கள் மூவரும் பயன்படுத்திய விவாதங்களை நான் பயன்படுத்தமாட்டேன்.
15 “யோபுவே, இம்மனிதர்கள் தங்கள் விவாதத்தில் தோற்றார்கள்.
அவர்கள் மேலும் கூற எதுவுமில்லை.
அவர்களிடம் வேறு பதில்கள் இல்லை.
16 யோபுவே, இம்மனிதர்கள் உமக்குப் பதில் கூறும்படி நான் காத்திருந்தேன்.
ஆனால் இப்போது அவர்கள் அமைதியாயிருக்கிறார்கள்.
அவர்கள் உம்மோடு விவாதிப்பதை நிறுத்தியிருக்கிறார்கள்.
17 எனவே இப்போது என் பதிலை நான் உமக்குச் சொல்வேன்.
ஆம், நான் நினைப்பதை உமக்குக் கூறுவேன்.
18 நான் சொல்வதற்கு நிரம்ப இருக்கிறது.
நான் அவற்றைக் கொட்டிவிடப் போகிறேன்.
19 திறக்கப்படாத புது திராட்சைரசம் நிரம்பிய புட்டியைப் போலிருக்கிறேன்.
உடைத்துத் திறப்பதற்கு தயாராயிருக்கிற புது திராட்சைரசம் உடைய தோல்பையை போலிருக்கிறேன்.
20 எனவே நான் பேசவேண்டும், அப்போது நான் நலமடைவேன்.
நான் பேசவேண்டும், நான் யோபுவின் விவாதத்திற்குப் பதில் கூறவேண்டும்.
21 பிறரை நடத்துவதைப்போல், நான் யோபுவையும் நடத்தவேண்டும்.
அவனிடம் நல்லவற்றைச் சொல்ல நான் முயலமாட்டேன்.
நான் சொல்ல வேண்டியதைச் சொல்வேன்.
22 நான் ஒருவனை மற்றொருவனைக் காட்டிலும் சிறப்பாக நடத்தமுடியாது.
நான் அவ்வாறு செய்தால், அப்போது தேவன் என்னைத் தண்டிப்பார்!
33 “இப்போது, யோபுவே, என்னைக் கவனித்துக் கேளும்:
நான் சொல்கிறவற்றிற்குச் செவிகொடும்.
2 நான் பேச தயாராயிருக்கிறேன்.
3 என் இருதயம் நேர்மையானது, எனவே நேர்மையான வார்த்தைகளைப் பேசுவேன்.
எனக்குத் தெரிந்தவற்றைக் குறித்து நான் உண்மையாக பேசுவேன்.
4 தேவனுடைய ஆவி என்னை உண்டாக்கிற்று.
என் உயிர் சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து வந்தது.
5 யோபுவே, நான் சொல்வதைக் கேளும், முடிந்தால் எனக்குப் பதில் சொல்லும்.
உனது பதிலைத் தயாராக வைத்திரும், அப்போது நீ என்னோடு விவாதிக்க முடியும்.
6 தேவனுக்கு முன்பாக நீயும் நானும் சமமானவர்களே.
தேவன் மண்ணைப் பயன்படுத்தி நம்மிருவரையும் உண்டாக்கினார்.
7 யோபுவே, எனக்கு அஞ்சாமல் இரும்.
நான் உன்னிடம் கடினமாயிருக்கமாட்டேன்.
8 “ஆனால் யோபுவே, நீ சொன்னதை நான் கேட்டேன்.
9 நீ, ‘நான் பரிசுத்தமானவன் நான் களங்கமற்றவன்.
நான் தவறேதும் செய்யவில்லை.
நான் குற்றமற்றவன்.
10 நான் தவறேதும் செய்யவில்லை.
ஆனால் தேவன் எனக்கு எதிராக இருக்கிறார்.
தேவன் என்னை ஒரு பகைவனைப்போல் நடத்தினார்.
11 தேவன் என் கால்களில் விலங்கிட்டார்.
நான் செய்கிற ஒவ்வொன்றையும் தேவன் கண்ணோக்குகிறார்’ என்று சொன்னாய்.
12 “ஆனால் யோபுவே, நீ இவ்விஷயத்தில் தவறியிருக்கிறாய்.
நீ தவறு செய்கிறாய் என்பதை நான் நிரூபிப்பேன்.
ஏனெனில் தேவன் எல்லா மனிதர்களையும்விட அதிகமாக அறிந்திருக்கிறார்.
13 யோபுவே, நீ தேவனோடு விவாதிக்கிறாய்.
தேவன் எல்லாவற்றையும் உனக்கு விளக்கவேண்டுமென நீ நினைக்கிறாய்.
14 தேவன் தாம் செய்கிற எல்லாவற்றையும் விளக்கலாம்.
வெவ்வேறு வகைகளில் தேவன் பேசலாம், ஆனால் ஜனங்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள்.
15-16 தேவன் கனவில் ஜனங்களோடு பேசலாம், அல்லது இரவில் அவர்கள் ஆழ்ந்த நித்திரைக் கொள்ளும்போது தரிசனம் தந்து பேசலாம்,
அவர்கள் தேவனுடைய எச்சரிக்கையைக் கேட்கும்போது மிகவும் அச்சம்கொள்ளலாம்.
17 ஜனங்கள் தவறு செய்வதை நிறுத்தவும்
பெருமைகொள்வதை விடவும் தேவன் எச்சரிக்கை செய்கிறார்.
18 மரணத்தின் இடத்திற்குப் போகாதபடி அவர்களைக் காப்பதற்காக தேவன் ஜனங்களை எச்சரிக்கிறார்.
ஒருவன் அழியாதபடி காப்பதற்கு தேவன் அவ்வாறு செய்கிறார்.
19 “அல்லது ஒருவன் படுக்கையில் கிடந்து தேவனுடைய தண்டனையை அனுபவிக்கும்போது ஒருவன் தேவனுடைய சத்தத்தைக் கேட்கக்கூடும்.
வேதனையால் அம்மனிதனை தேவன் எச்சரிக்கிறார்.
எலும்பெல்லாம் நொறுங்கும்படி அம்மனிதன் நோவை அனுபவிக்கிறான்.
20 அப்போது அம்மனிதன் உண்ணமுடியாது.
மிகச் சிறந்த உணவையும் வெறுக்கும்படி அவன் மிகுந்த நோவை அனுபவிக்கிறான்.
21 அவன் மிகவும் மெலிந்து எலும்புகள் வெளித் தோன்றும்வரை
அவன் உடம்பு மெலிந்து போகும்.
22 அம்மனிதன் மரணத்தின் இடத்திற்கு அருகே இருக்கிறான்.
அவன் வாழ்க்கை மரணத்திற்கு அருகாமையில் உள்ளது.
23 தேவனிடம் ஆயிரக்கணக்காக தூதர்கள் இருப்பார்கள்.
அத்தூதர்களுள் ஒருவன் அம்மனிதனைக் கண்ணோக்கிக் கொண்டிருக்கலாம். அந்த தூதன் அம்மனிதனுக்காகப் பரிந்துபேசி அவன் செய்த நற்செயல்களை எடுத்துரைக்கலாம்.
24 அந்த தூதன் அம்மனிதனிடம் இரக்கம் காட்டலாம்.
அத்தூதன் தேவனிடம், ‘மரணத்தின் இடத்திலிருந்து அம்மனிதனைக் காப்பாற்றும்.
அவன் பாவத்திற்குப் பரிகாரமாக நான் ஒரு வழியைக் கண்டு பிடித்திருக்கிறேன்’ எனலாம்.
25 அப்போது அம்மனிதனின் உடல் மீண்டும் இளமையும், வலிமையும் பெறும்.
அவன் இளமையிலிருந்தாற்போன்று இருப்பான்.
26 தேவனிடம் ஜெபிப்பான், தேவன் அவனுடைய ஜெபத்திற்குப் பதில் தருவார்.
அம்மனிதன் களிப்பால் ஆரவாரித்து, தேவனைத் தொழுதுகொள்வான்.
அப்போது அம்மனிதன் மீண்டும் நல்வாழ்க்கை வாழ்வான்.
27 அப்போது அம்மனிதன் ஜனங்களிடம் அறிக்கையிடுவான்.
அவன், ‘நான் பாவம் செய்தேன்.
நான் நல்லதைக் கெட்டதாக்கினேன்.
ஆனால் தேவன் என்னைத் தண்டிக்க வேண்டிய அளவு தண்டிக்கவில்லை.
28 மரணத்தின் இடத்திற்குப் போகாதபடி, தேவன் என் ஆத்துமாவைக் காப்பாற்றினார்.
இப்போது மீண்டும் என் வாழ்க்கையை நான் அனுபவிக்க முடியும்’ என்பான்.
29 “அம்மனிதனுக்காக மீண்டும், மீண்டும் தேவன் எல்லாவற்றையும் செய்கிறார்.
30 ஏனென்றால், அம்மனிதனை எச்சரித்து, அவனது ஆத்துமாவை மரணத்தின் இடத்திலிருந்து காப்பதால்
அம்மனிதன் வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்பதற்காக இதைச் செய்கிறார்.
31 “யோபுவே, என்னை கவனியும்.
நான் கூறுவதைக் கேளும்.
அமைதியாக இரும், என்னை பேசவிடும்.
32 ஆனால் யோபுவே, நீர் என்னோடு கருத்து வேறுபாடு கொள்ளவிரும்பினால், அப்போது நீர் பேசத் தொடங்கும்.
உமது விவாதத்தைக் கூறும், ஏனெனில், நான் உம்மைத் திருத்த விரும்புகிறேன்.
33 ஆனால் யோபுவே, நீர் கூற எதுவுமில்லையெனில், நான் சொல்வதைக் கேளும்.
அமைதியாக இரும், உமக்கு ஞானத்தைப் போதிப்பேன்” என்றான்.
34 பின்பு எலிகூ தொடர்ந்து பேசினான். அவன்:
2 “நான் கூறுபவற்றை கேளுங்கள், ஞானிகளே,
நான் சொல்வதைக் கவனியுங்கள், அறிஞர்களே.
3 உங்கள் நாவு, அது தொடுகிற உணவை ருசிக்கிறது.
உங்களது காது, அது கேட்கிறவார்த்தைகளைச் சோதிக்கிறது.
4 எனவே நாம் அந்த விவாதங்களைச் சோதிப்போம், எது சரியென நாமே முடிவு செய்வோம்.
எது நல்லதென நாம் ஒருமித்திருந்து கற்போம்.
5 யோபு, ‘யோபாகிய நான் களங்கமற்றவன்,
தேவன் என்னிடம் நியாயமுடையவராயிருக்கவில்லை.
6 நான் களங்கமற்றவன், ஆனால் நீதி எனக்கெதிராக வழங்கப்பட்டது, அது நான் பொய்யனெனக் கூறுகிறது.
நான் களங்கமற்றவன், ஆனால் மிக மோசமாகக் காயமுற்றேன்’ என்கிறான்.
7 “யோபைப்போல வேறெவனாகிலும் இருக்கிறானா?
நீங்கள் அவமானப்படுத்தினால் யோபு அதைப் பொருட்படுத்துவதில்லை.
8 யோபு தீயோரோடு நட்புடையவனாயிருந்தான்.
யோபு கெட்ட ஜனங்களோடிருக்க விரும்புகிறான்.
9 ஏன் நான் அவ்வாறு சொல்கிறேன்?
ஏனெனில் யோபு, ‘ஒருவன் தேவனைத் தவறான வழிகளில் சந்தோஷப்படுத்த முயற்சி செய்தால் அதனால் அவனுக்கு நன்மையேதும் வாய்க்காது’ என்கிறான்.
10 “உங்களால் புரிந்துகொள்ள முடியும், எனவே நான் சொல்வதைக் கேளுங்கள்.
தேவன் தீயவற்றை ஒருபோதும் செய்யமாட்டார்!
சர்வ வல்லமையுள்ள தேவன் தவறிழைக்கமாட்டார்!
11 ஒருவன் செய்யும் காரியங்களுக் கேற்றபடியே தேவன் பலனளிப்பார்.
ஒருவனுக்கு உரியதை தேவன் அவனுக்குக் கொடுக்கிறார்.
12 இதுவே உண்மை, தேவன் தவறிழைக்கமாட்டார்,
சர்வ வல்லமையுள்ள தேவன் எப்போதும் நியாயந்தீர்ப்பார்.
13 பூமிக்குப் பொறுப்பாக இருக்கும்படி தேவனை எந்த மனிதனும் தேர்ந்தெடுக்கவில்லை,
உலகம் முழுவதற்கும் பொறுப்பை தேவனுக்கு ஒருவனும் கொடுக்கவில்லை.
தேவன் எல்லாவற்றையும் படைத்தார்.
எல்லாம் அவரது ஆதிக்கத்தின் கீழ் இருக்கின்றன.
14 தேவன் மனிதனது ஆவியை எடுக்க முடிவெடுத்தால்,
அவனது மூச்சை நீக்கிவிட முடிவெடுத்தால்,
15 அப்போது பூமியின் ஜனங்கள் எல்லோரும் மரிப்பார்கள்.
எல்லா ஜனங்களும் மீண்டும் மண்ணாவார்கள்.
16 “நீங்கள் ஞானிகளாயிருந்தால்,
நான் சொல்வதற்குச் செவிகொடுப்பீர்கள்.
17 ஒருவன் நியாயஞ்செய்வதை வெறுத்தால், அவன் அரசனாக இருக்கமுடியாது.
யோபுவே, தேவன் வல்லவரும் நல்லவருமானவர்.
அவரைக் குற்றவாளியாக நியாயந்தீர்க்க முடியும் என்று நினைக்கிறீர்களா?
18 தேவனே அரசர்களிடம், ‘நீங்கள் தகுதியற்றவர்கள்’ என்கிறார்.
தேவனே தலைவர்களிடம் ‘நீங்கள் தீயவர்கள்’ என்கிறார்!
19 தேவன் ஜனங்களைக் காட்டிலும் தலைவர்களை நேசிப்பதில்லை.
தேவன் ஏழைகளைக் காட்டிலும் செல்வந்தரை நேசிப்பதில்லை.
ஏனெனில், தேவனே ஒவ்வொருவரையும் உண்டாக்கினார்.
20 ஜனங்கள் நள்ளிரவில் திடீரென மரிக்க முடியும்.
ஜனங்கள் நோயுற்று மடிவார்கள்.
தெளிவான காரணமின்றி வலிமையான ஜனங்களும்கூட மரிப்பார்கள்.
21 “ஜனங்கள் செய்வதை தேவன் கண்ணோக்குகிறார்.
ஒருவன் வைக்கிற ஒவ்வோர் அடியையும் தேவன் அறிகிறார்.
22 தேவனிடமிருந்து ஒளிப்பதற்கேற்ற இருள் நிரம்பிய இடம்
எதுவும் தீயோருக்குக் கிடைப்பதில்லை.
23 ஜனங்களைச் சோதித்துப் பார்க்கும் நேரத்தை தேவன் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை.
தேவன், நியாயந்தீர்ப்பதற்குத் தனக்கு முன்னிலையில் ஜனங்களைக் கொண்டுவர தேவையில்லை.
24 வல்லமையுள்ள ஜனங்கள் தீய காரியங்களைச் செய்யும்போது, தேவன் கேள்விகளைக் கேட்கத் தேவையில்லை.
தேவன் அந்த ஜனங்களை அழித்துவிடுவார், வேறு ஜனங்களைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுப்பார்.
25 எனவே ஜனங்கள் செய்வது என்ன என்பதை தேவன் அறிகிறார்.
அதனால் விரைவில் தேவன் தீயோரைத் தோற்கடித்து அவர்களை ஒரே இரவில் அழித்துவிடுவார்.
26 கெட்ட ஜனங்கள் செய்த தீய காரியங்களுக்காக, தேவன் அவர்களைத் தண்டிப்பார்.
பிற ஜனங்கள் காணும்படியாக அந்த ஜனங்களை தேவன் தண்டிப்பார்.
27 ஏனெனில், கெட்ட ஜனங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்திவிட்டார்கள்.
தேவன் விரும்புகிறபடியே செய்வதற்கும் அந்த ஜனங்கள் கவலைப்படுவதில்லை.
28 அந்தக் கெட்ட ஜனங்கள் ஏழைகளைத் துன்புறுத்துகிறார்கள்.
தேவனை நோக்கி அவர்கள் உதவி வேண்டி அழும்படிச் செய்கிறார்கள். ஏழைகள் உதவி கேட்டு அழுவதை தேவன் கேட்கிறார்.
29 ஆனால் ஏழைகளுக்கு உதவ வேண்டாமென்று தேவன் முடிவுச் செய்தால், ஒருவரும் தேவனைக் குற்றவாளியாக நியாயந்தீர்க்க முடியாது.
தேவன் ஜனங்களிடமிருந்து தன்னை மறைத்து கொண்டாரானால் அப்போது அவரை ஒருவரும் பார்க்க முடியாது.
தேவனே ஜனங்களுக்கும் தேசங்களுக்கும் அரசர்.
30 ஒரு அரசன் தீயவனாக இருந்து பிறர் பாவம் செய்யும்படி பண்ணினால், அப்போது, தேவன் அவனை அரசாளும்படி அனுமதிக்கமாட்டார்.
31 “ஒரு மனிதன் தேவனிடம்,
‘நான் குற்றவாளி, இனிமேல் பாவம் செய்யமாட்டேன்.
32 தேவனே, நான் உம்மைப் பார்க்க முடியாவிட்டாலும் தக்க நெறியில் வாழும் வகையைத் தயவு செய்து எனக்குப் போதியும்.
நான் தவறு செய்திருந்தால், மீண்டும் அதைச் செய்யமாட்டேன்’ என்று கூறலாம்.
33 யோபுவே, தேவன் உனக்குப் பரிசளிக்க (பலன்தர) வேண்டுமென நீ விரும்புகிறாய்.
ஆனால் நீயோ உன்னை மாற்றிக்கொள்ள மறுக்கிறாய்.
யோபுவே, இது உம் முடிவு, என்னுடையதல்ல,
நீ நினைப்பதை எனக்குச் சொல்லு.
34 ஒரு ஞானி நான் சொல்வதைக் கேட்பான்.
ஒரு ஞானி,
35 ‘யோபு அறியாமையுடையவனைப் போலப் பேசுகிறான்.
யோபு சொல்கின்றவை பொருள்தருவன அல்ல,’ என்பான்.
36 யோபு இன்னும் அதிகமாகத் தண்டிக்கப்பட வேண்டுமென்று நான் நினைக்கிறேன்.
ஏனெனில் ஒரு தீயவன் பதில் சொல்கிறாற்போல, யோபுவும் எங்களுக்குப் பதில் சொல்கிறான்.
37 யோபு தனது பிற பாவங்களோடு இன்னும் பாவங்களை அதிகமாக்கினான்.
எங்களுக்கு முன்பாக யோபு அமர்ந்திருக்கிறான், அவன் எங்களை அவமானப்படுத்துகிறான், தேவனைக் கேலிச்செய்கிறான்!” என்றான்.
35 எலிகூ பேசுவதைத் தொடர்ந்தான் அவன்,
2 “‘யோபுவே, நான் தேவனைக் காட்டிலும் நியாயமானவன்’ எனக் கூறுவது சரியல்ல.
3 யோபுவே, நீ தேவனை, ‘ஒருவன் தேவனைச் சந்தோஷப்படுத்த விரும்பினால் அவனுக்கு லாபம் என்ன?
நான் பாவம் செய்யாதிருந்தால், அது எனக்கு என்ன நம்மையைத் தரும்?’ என்று கேளும்.
4 “யோபுவே, நான் (எலிகூ) உனக்கும், உன்னோடு இங்கிருக்கும் உமது நண்பர்களுக்கும் பதில் கூற விரும்புகிறேன்.
5 யோபுவே, வானத்தை நோக்கிப்பாரும்,
உனக்கும் மேல் உயர்ந்திருக்கிற மேகங்களை அண்ணாந்து பாரும்.
6 யோபுவே, நீ பாவஞ்செய்தால், அது தேவனைத் துன்புறுத்தாது.
யோபுவே உன்னிடம் பாவங்கள் மிகுதியாயிருந்தால், அது தேவனை ஒன்றும் செய்யாது.
7 யோபுவே, நீ நல்லவனாக இருந்தால், அது தேவனுக்கு உதவாது.
தேவன் உன்னிடமிருந்து எதையும் பெறமாட்டார்.
8 யோபுவே, நீ செய்யும் நல்ல காரியங்களோ, தீயகாரியங்களோ உன்னைப் போன்ற பிறரை மட்டுமே பாதிக்கும்.
அவை தேவனுக்கு உதவவோ, அவரைத் துன்புறுத்தவோ செய்யாது.
9 “தீயோர் துன்புறுத்தப்பட்டால், அவர்கள் உதவிக்காக கூக்குரலிடுவார்கள்.
அவர்கள் வல்லமையுள்ள ஜனங்களிடம் சென்று உதவிக்காக கெஞ்சி கேட்பார்கள்.
10 ஆனால் அத்தீயோர் தேவனிடம் உதவிக் கேட்கமாட்டார்கள்.
அவர்கள், ‘என்னை உண்டாக்கின தேவன் எங்கே? ஜனங்கள் மனக்கவலையோடிருக்கையில் தேவன் அவர்களுக்கு உதவுவார்.
எனவே அவர் எங்கிருக்கிறார்?
11 தேவன் நம்மை பறவைகள், மிருகங்களைக் காட்டிலும் ஞானமுள்ளவராக்குகிறார்.
எனவே அவர் எங்கிருக்கிறார்?’ என்று கேட்பார்கள்.
12 “அல்லது, அத்தீயோர் தேவனிடம் உதவிவேண்டினால் தேவன் அவர்களுக்குப் பதிலளிக்கமாட்டார்.
ஏனெனில் அவர்கள் மிகவும் பெருமை (அகந்தை) உடையவர்கள்.
அவர்கள் மிகவும் முக்கியமானவர்களென்று இன்னமும் நினைக்கிறார்கள்.
13 தேவன் அவர்களின் தகுதியற்ற கெஞ்சுதலுக்குச் செவிசாய்க்கமாட்டார் என்பது உண்மை.
சர்வ வல்லமையுள்ள தேவன் அவர்களைக் கவனிக்கமாட்டார்.
14 எனவே யோபுவே, நீ தேவனைப் பார்க்கவில்லை என்று கூறும்போது தேவன் உனக்குச் செவிசாய்க்கமாட்டார்.
தேவனைச் சந்திக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து நீ களங்கமற்றவனென்று நிரூபிக்கக் காத்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறாய்.
15 “யோபுவே, தேவன் தீயோரைத் தண்டிப்பதில்லை எனவும்,
தேவன் பாவங்களைக் கவனிப்பதில்லை எனவும் நீ நினைக்கிறாய்.
16 எனவே யோபு அவனது தகுதியற்ற பேச்சைத் தொடருகிறான்.
யோபு தான் முக்கியமானவனாக பாவித்துக்கெண்டிருக்கிறான்.
யோபு தான் பேசிக் கொண்டிருப்பதைப்பற்றி அறியான் என்பதை எளிதாகக் காணமுடியும்” என்றான்.
36 எலிகூ தன் பேச்சைத் தொடர்ந்தான். அவன்,
2 “என்னோடு இன்னும் கொஞ்சம் பொறுமையாயிரும்.
இன்னும் சில வார்த்தைகளைக் கூட நான் பேச தேவன் விரும்புகிறார்.
3 நான் எனது அறிவை எல்லோரோடும் பகிர்ந்துக்கொள்வேன், தேவன் என்னை உண்டாக்கினார்,
தேவன் நியாயமானவரென நான் நிரூபிப்பேன்.
4 யோபுவே, நான் உண்மையைக் கூறிக் கொண்டிருக்கிறேன்.
நான் எதைக் குறித்துப் பேசுகிறேன் என்று நான் அறிவேன்.
5 “தேவன் மிகுந்த வல்லமையுள்ளவர், ஆனால் அவர் ஜனங்களை வெறுப்பதில்லை.
தேவன் மிகுந்த வல்லமையுள்ளவர், ஆனால் அவர் மிகுந்த ஞானமுள்ளவர்.
6 தேவன் தீய ஜனங்களை வாழவிடமாட்டார்,
தேவன் ஏழைகளை எப்போதும் நியாயமாக நடத்துகிறார்.
7 தக்க வழியில் நடப்போரைத் தேவன் கண்ணோக்குகிறார்.
அவர் நல்லோரை அரசர்களாயிருக்க அனுமதிக்கிறார்.
தேவன் நல்லோருக்கு என்றென்றும் மகிமையைக் கொடுக்கிறார்.
8 எனவே ஜனங்கள் தண்டிக்கப்பட்டால், அவர்கள் விலங்குகளினாலும் கயிறுகளினாலும் கட்டப்பட்டால்,
அப்போது அவர்கள் தவறு செய்தவர்களாயிருப்பார்கள்.
9 அவர்கள் செய்தது என்னவென்பதை தேவன் சொல்வார்.
அவர்கள் பாவம் செய்தார்கள் என்பதை தேவன் சொல்வார்.
அவர்கள் பெருமையாயிருந்தார்கள் என்பதை தேவன் சொல்வார்.
10 தேவன் தனது எச்சரிக்கைக்குச் செவிசாய்க்குமாறு அந்த ஜனங்களைக் கட்டாயப்படுத்துவார்.
அவர்கள் பாவம் செய்வதை நிறுத்துமாறு தேவன் கட்டளையிடுவார்.
11 அந்த ஜனங்கள் தேவனுக்குச் செவி கொடுத்து அவருக்குக் கீழ்ப்படிந்தால், தேவன் அவர்கள் வெற்றிக் காணச் செய்வார்.
அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள்.
12 ஆனால் அந்த ஜனங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்தால், அப்போது அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
அவர்கள், அறியாமையுடையவர்களாக மரித்துப்போவார்கள்.
13 “தேவனைப்பற்றிக் கவலைப்படாத ஜனங்கள் எப்போதும் கசப்பானவர்கள்,
தேவன் அவர்களைத் தண்டிக்கிறபோதும் கூட, அவர்கள் தேவனிடம் உதவிக்காக ஜெபம் செய்ய மறுக்கிறார்கள்.
14 அவர்கள் ஆண் விபசாரிகளைப்போல
இளமையிலேயே மரித்துப்போவார்கள்.
15 ஆனால் தேவன் ஜனங்கள் பெறும் தொல்லைகளால் அவர்களைத் தாழ்மையானவர்களாக்குவார்.
ஜனங்கள் எழுந்து அவருக்குச் செவிகொடுப்பதற்காக தேவன் அத்தொல்லைகளைப் பயன்படுத்துகிறார்.
16 “யோபுவே, தேவன் உனக்கு உதவ விரும்புகிறார்.
தொல்லைகளிலிருந்து உன்னை விடுவிக்க தேவன் விரும்புகிறார்.
உனக்கு வாழ்க்கையை எளிதாக்க தேவன் விரும்புகிறார்.
உன் மேசையில் மிகுதியான உணவு இருக்கும்படியாகச் செய்ய தேவன் விரும்புகிறார்.
17 ஆனால் இப்போது யோபுவே, நீ குற்றவாளியாக நியாயந்தீர்க்கப்பட்டாய்.
எனவே ஒரு தீயவனைப்போன்று நீ தண்டிக்கப்பட்டாய்.
18 யோபுவே, செல்வங்கள் உன்னை மூடனாக்கவிடாதேயும்.
பணம் உனது மனதை மாற்றவிடாதேயும்.
19 உனது பணம் இப்போது உனக்கு உதவாது.
வல்லமையுள்ளோர் உமக்கு உதவவும் முடியாது.
20 இரவின் வருகையை விரும்பாதேயும்.
ஜனங்கள் இரவில் மறைந்துபோக முயல்கிறார்கள்.
அவர்கள் தேவனிடமிருந்து ஒளிந்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள்.
21 யோபுவே, நீ மிகவும் துன்புற்றிருக்கிறாய்.
ஆனால் தீமையைத் தேர்ந்துகொள்ளாதேயும்.
தவறு செய்யாதபடி எச்சரிக்கையாயிரும்.
22 “தேவன் தமது வல்லமையினால் மேன்மையுற்றிருக்கிறார்.
தேவன் எல்லோரினும் மிகவும் சிறந்த போதகர்!
23 தேவன் செய்ய வேண்டுவதென்ன என்று ஒருவனும் தேவனுக்குக் கூற முடியாது.
‘தேவனே, நீர் தவறு செய்கிறீர்’ என்று ஒருவனும் தேவனிடம் கூற முடியாது!
24 தேவன் செய்த காரியங்களுக்காக அவரைத் துதிக்க வேண்டுமென நினைவுகூருங்கள்.
தேவனைத் துதிக்கும் பல பாடல்களை ஜனங்கள் எழுதியிருக்கிறார்கள்.
25 தேவன் செய்தவற்றை ஒவ்வொருவனும் காண முடியும்.
தூரத்து நாடுகளின் ஜனங்களும் அவற்றைப் பார்க்க இயலும்.
26 ஆம், தேவன் மேன்னைமயானவர்.
ஆனால் அவரது மேன்மையை நாம் புரிந்து கொள்ள முடியாது, எத்தனை காலமாக தேவன் வாழ்ந்திருக்கிறார் என்பதையும் நாம் அறியமுடியாது.
27 “தேவன் பூமியிலிருந்து தண்ணீரை, மேலே எடுத்து,
அதைப் பனியாகவும் மழையாகவும் மாற்றுகிறார்.
28 ஆகையால் மேகங்கள் தண்ணீரைப் பொழிகின்றன.
மழை பலர் மீது பெய்கிறது.
29 தேவன் மேகங்களை எவ்வாறு பரப்புகிறார் என்பதையும்
வானத்தில் இடி முழக்கம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதையும் ஒருவனும் புரிந்து கொள்ள முடியாது.
30 பாரும்! தேவன் பூமியின் மீது மின்னலைப் பரப்பி,
சமுத்திரங்களின் ஆழமான பகுதிகளை மூடினார்.
31 தேசங்களை அடக்கியாள்வதற்கும்
அங்கு மிகுதியான உணவுப் பொருட்களைக் கொடுப்பதற்கும், தேவன் அவற்றைப் பயன்படுத்துகிறார்.
32 தேவன் அவரது கைகளால் மின்னலைப் பிடிக்கிறார்,
அவருக்கு விருப்பமான இடங்களில் தாக்குமாறு அதற்குக் கட்டளையிடுகிறார்.
33 புயல் வந்துகொண்டிருப்பதை இடி எச்சரிக்கிறது.
அது வந்துகொண்டிருப்பதை ஆடு, மாடுகள் கூட அறிகின்றன” என்றான்.
37 “இடியும், மின்னலும் என்னை அச்சுறுத்துகின்றன.
இதயம் என் நெஞ்சத்தில் துடிக்கிறது.
2 ஒவ்வொருவரும் செவிகொடுங்கள்!
தேவனுடைய சத்தம் இடியைப்போல முழங்குகிறது.
தேவனுடைய வாயிலிருந்து வரும் இடியைப்போன்ற சத்தத்திற்குச் செவிகொடுங்கள்.
3 முழுவானத்திற்கும் குறுக்காக மின்னும்படி, தேவன் அவரது மின்னலை அனுப்புகிறார்.
அது பூமி ழுழுவதும் ஒளிர்ந்தது.
4 மின்னல் ஒளிவீசி மறைந்த பிறகு, தேவனுடைய முழங்கும் சத்தத்தைக் கேட்கமுடியும்.
தேவன் அவரது அற்புதமான சத்தத்தால் முழங்குகிறார்!
மின்னல் மின்னும்போது, தேவனுடைய சத்தம் முழங்குகிறது.
5 தேவனுடைய முழங்கும் சத்தம் அற்புதமானது!
நாம் புரிந்துகொள்ள முடியாத, மேன்மையான காரியங்களை அவர் செய்கிறார்.
6 தேவன் பனியிடம், ‘பூமியின் மேல் பெய்’ என்கிறார்.
மேலும் தேவன் மழையிடம், ‘பூமியின் மேல் பொழி’ என்கிறார்.
7 தேவன் உண்டாக்கின எல்லா மனிதர்களும்
அவர் என்ன செய்யமுடியும் என்பதை அறியுமாறு தேவன் அதைச் செய்கிறார்.
அது அவரது சான்று.
8 மிருகங்கள் அவற்றின் குகைகளுக்குள் புகுந்து அங்கேயே தங்கும்.
9 தெற்கேயிருந்து சூறாவளி வரும்.
வடக்கேயிருந்து குளிர் காற்று வரும்.
10 தேவனுடைய மூச்சு பனிக்கட்டியை உண்டாக்கும்,
அது சமுத்திரங்களை உறையச் செய்யும்.
11 தேவன் மேகங்களை தண்ணீரினால் நிரப்புகிறார்,
அவர் இடிமேகங்களைச் சிதறடிக்கிறார்.
12 பூமியில் எங்கும் சிதறிப்போகும்படி தேவன் மேகங்களுக்குக் கட்டளையிடுகிறார்.
தேவன் கட்டளையிடுகின்றவற்றை மேகங்கள் செய்யும்.
13 பெருவெள்ளத்தை வரச்செய்து ஜனங்களைத் தண்டிக்கவோ,
அல்லது வெள்ளத்தை வருவித்து அவரது அன்பை வெளிப்படுத்தவோ, தேவன் மேகங்களை உருவாக்குகிறார்.
14 “யோபுவே, ஒரு நிமிடம் நின்று கவனித்துக்கேள்.
தேவன் செய்கிற அற்புதமான காரியங்களைக் குறித்துச் சற்று நின்று எண்ணிப்பார்.
15 யோபுவே, தேவன் எவ்வாறு மேகங்களை அடக்கியாள்கிறார் என்பது உனக்குத் தெரியுமா?
அவரது மின்னலை எவ்வாறு தேவன் ஒளிவிட வைக்கிறார் என்பது உனக்குத் தெரியுமா?
16 மேகங்கள் வானில் எவ்வாறு தொங்குகின்றன என்பது உனக்குத் தெரியுமா?
தேவன் செய்த அற்புதமான காரியங்களுக்கு மேகங்கள் ஒரு எடுத்து காட்டு மட்டுமேயாகும்!
அவற்றைப்பற்றிய யாவும் தேவனுக்குத் தெரியும்.
17 ஆனால் யோபுவே, உனக்கு இக்காரியங்கள் தெரியாது.
நீ வியர்க்கிறாய் என்பதும், உன் ஆடைகள் உடம்பில் ஒட்டிக்கொள்கின்றன என்பதும், தெற்கிலிருந்து வெப்பமான காற்று வீசும்போது, எல்லாம் அசையாமல் இருக்கின்றன என்பது மட்டுமே உனக்குத் தெரியும்.
18 யோபுவே, வானைப் பரப்புவதற்கு நீ தேவனுக்கு உதவமுடியுமா?
தேய்த்த பளபளப்பான கண்ணாடியைப்போல அது ஒளிரும்படி செய்யக் கூடுமா?
19 “யோபுவே, நாங்கள் தேவனுக்கு என்ன சொல்லவேண்டும் என்று கூறு!
எங்களுக்குச் சரிவரத் தெரியாததால் சொல்வது குறித்து எண்ண இயலாமலிருக்கிறோம்.
20 நான் அவரிடம் பேசவேண்டும் என்று தேவனிடம் கூறமாட்டேன்.
அழிவு வேண்டும் என்று கேட்கமாட்டேன்.
21 ஒரு மனிதன் சூரியனை ஏறெடுத்துப் பார்க்க முடியாது.
காற்று மேகங்களை அடித்துச் சென்றபின் அது வானில் மிகப் பிரகாசமாக ஒளி தருகிறது.
22 தேவனும் அவ்வாறே இருக்கிறார்!
பரிசுத்த மலையிலிருந்து தேவனுடைய பொன்னான மகிமை பிரகாசிக்கிறது. தேவனைச் சுற்றிலும் பிரகாசமான ஒளி இருக்கிறது.
23 சர்வ வல்லமையுள்ள தேவன் மேன்மையானவர்!
நாம் தேவனைப் புரிந்துகொள்ள முடியாது!
தேவன் மிகுந்த வல்லமை உள்ளவர்.
ஆனால் அவர் நமக்கு நல்லவரும் நியாயமானவரும் ஆவார்.
தேவன் நம்மைத் துன்புறுத்த விரும்பமாட்டார்.
24 ஆகவேதான் ஜனங்கள் தேவனை மதிக்கிறார்கள்.
ஆனால் தங்களை ஞானிகளாக நினைக்கிற அகங்காரம் உள்ளவர்களை தேவன் மதிக்கமாட்டார்” என்றான்.
தேவன் யோபுவிடம் பேசுகிறார்
38 அப்போது கர்த்தர் சூறாவளியிலிருந்து
யோபுவிடம் பேசினார். தேவன்:
2 “மூடத்தனமானவற்றைக் கூறிக்கொண்டிருக்கும்,
இந்த அறியாமையுள்ள மனிதன் (அஞ்ஞானி) யார்?
3 யோபுவே, நீ இடையைக் கட்டிக்கொள்
நான் கேட்கப்போகும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு ஆயத்தமாகு.
4 “யோபுவே, நான் பூமியை உண்டாகினபோது, நீ எங்கே இருந்தாய்?
நீ அத்தனை கெட்டிக்காரனானால், எனக்குப் பதில் கூறு.
5 நீ அத்தனை கெட்டிக்காரனானால், உலகம் எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டுமென யார் முடிவெடுத்தவர்?
அளவு நூலால் யார் உலகை அளந்தார்?
6 பூமியின் அஸ்திபாரம் எங்கு நிலைத்திருக்கிறது?
அதன் முதற்கல்லை (கோடிக் கல்லை) வைத்தவர் யார்?
7 காலை நட்சத்திரங்கள் சேர்ந்து பாடின,
அது நிகழ்ந்தபோது தேவதூதர்கள் மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்தனர்!
8 “யோபுவே, கடல் பூமியின் ஆழத்திலிருந்து பாய்ந்தபோது,
கடலைத் தடை செய்யும்பொருட்டு வாயில்களை அடைத்தது யார்?
9 அப்போது நான் அதனை மேகங்களால் மூடி,
அதனை இருளால் பொதிந்து வைத்தேன்.
10 நான் கடலுக்கு எல்லையை வகுத்து,
அதை அடைத்த வாயிலுக்கு பின்னே நிறுத்தினேன்.
11 நான் கடலிடம், ‘நீ இதுவரை வரலாம், இதற்கு அப்பால் அல்ல,
உனது பெருமையான அலைகள் இங்கே நின்றுவிடும்’ என்றேன்.
12 “யோபுவே, உன் வாழ்க்கையில் என்றைக்காவது நீ காலையை ஆரம்பிக்கவோ,
ஒரு நாளைத் தொடங்கவோ கூறமுடியுமா?
13 யோபுவே, பூமியைப் பிடித்து, தீயோரை அவர்கள் மறைவிடங்களிலிருந்து வெளிவருமாறு உதறிவிட
காலையொளிக்கு நீ கூற முடியுமா?
14 மலைகளையும் பள்ளத்தாக்கையும் எளிதில் காலையொளியில் காணலாம்.
பகலொளி பூமிக்கு வரும்போது அங்கியின் மடிப்புக்களைப்போல இந்த இடங்களின் அமைப்புக்கள் (வடிவங்கள்) வெளித்தோன்றும்.
முத்திரையிடப்பட்ட களிமண்ணைப் போல அவ்விடங்கள் வடிவங்கொள்ளும்.
15 தீயோர் பகலொளியை விரும்பார்கள்.
பிரகாசமாக அது ஒளிவிடும்போது, அவர்கள் தீயக் காரியங்களைச் செய்யாதபடி தடுக்கும்.
16 “யோபுவே, கடல் புறப்படும் கடலின் ஆழமான பகுதிகளுக்கு நீ எப்போதாவது சென்றிருக்கிறாயா?
சமுத்திரத்தின் அடிப்பகுதியில் நீ எப்போதாவது நடந்திருக்கிறாயா?
17 மரித்தோரின் உலகத்திற்கு வழிகாட்டும் வாயிற் கதவுகளை நீ எப்போதாவது பார்த்திருக்கிறாயா?
மரணத்தின் இருண்ட இடத்திற்கு வழிகாட்டும் வாயிற்கதவுகளை நீ எப்போதாவது பார்த்திருக்கிறாயா?
18 யோபுவே, பூமி எவ்வளவு பெரிய தென்று நீ உண்மையில் அறிந்திருக்கிறாயா?
நீ இவற்றை அறிந்திருந்தால், எனக்குக் கூறு.
19 “யோபுவே, ஒளி எங்கிருந்து வருகிறது?
எங்கிருந்து இருள் வருகிறது?
20 யோபுவே, ஒளியையும், இருளையும் அவை புறப்படும் இடத்திற்கு நீ திரும்ப கொண்டு செல்ல முடியுமா?
அந்த இடத்திற்குப் போகும் வகையை நீ அறிவாயா?
21 யோபுவே, நீ நிச்சயமாக இக்காரியங்களை அறிவாய்.
நீ வயது முதிர்ந்தவனும் ஞானியுமானவன்.
நான் அவற்றை உண்டாக்கியபோது நீ உயிரோடிருந்தாய் அல்லவா?
22 “யோபுவே, பனியையும் கல்மழையையும் வைத்திருக்கும் பண்டகசாலைக்குள்
நீ எப்போதாவது சென்றிருக்கிறாயா?
23 தொல்லைகள் மிக்க காலங்களுக்காகவும், போரும் யுத்தமும் நிரம்பிய காலங்களுக்காகவும்,
நான் பனியையும், கல்மழையையும் சேமித்து வைக்கிறேன்.
24 யோபுவே, சூரியன் மேலெழுந்து வருமிடத்திற்கு, அது கிழக்குக் காற்றைப் பூமியெங்கும் வீசச் செய்யுமிடத்திற்கு
நீ எப்போதாவது சென்றிருக்கிறாயா?
25 யோபுவே, மிகுந்த மழைக்காக வானத்தில் பள்ளங்களைத் தோண்டியவர் யார்?
இடிமுழக்கத்திற்குப் பாதையை உண்டாகியவர் யார்?
26 யோபுவே, ஜனங்கள் வாழாத இடங்களிலும்,
மழையைப் பெய்யப்பண்ணுகிறவர் யார்?
27 பாழான அந்நிலத்திற்கு மழை மிகுந்த தண்ணீரைக் கொடுக்கிறது,
புல் முளைக்க ஆரம்பிக்கிறது.
28 யோபுவே, மழைக்குத் தகப்பன் (தந்தை) உண்டா?
பனித்துளிகள் எங்கிருந்து தோன்றுகின்றன?
29 யோபுவே, பனிக்கட்டிக்கு தாய் உண்டா?
வானிலிருந்து விழும் உறை பனியைப் பிறப்பிக்கிறவர் யார்?
30 பாறையைப் போல் கடினமாக நீர் உறைகிறது.
சமுத்திரத்தின் மேற்பரப்பும் உறைந்து போகிறது!
31 “நட்சத்திர கூட்டங்களை நீ இணைக்கக் கூடுமா?
மிருக சீரிஷத்தின் கட்டை நீ அவிழ்க்க முடியுமா?
32 யோபுவே, நீ சரியான நேரங்களில் வின்மீன் கூட்டங்களை வெளிக்கொணர முடியுமா?
(துருவச்சக்கர நட்சத்திரமும் அதைச் சார்ந்த நட்சத்திரங்களும்) கரடியை அதன் குட்டிகளோடு நீ வெளி நடத்த இயலுமா?
33 யோபுவே, வானை ஆளுகிற விதிகளை நீ அறிவாயா?
பூமியை அவை ஆளும்படிச் செய்ய உன்னால் முடியுமா?
34 “யோபுவே, நீ மேகங்களை உரக்கக் கூப்பிட்டு
உன்னை மழையில் மூடும்படி கட்டளையிட முடியுமா?
35 மின்னல்களுக்கு நீ கட்டளை பிறப்பிக்கக் கூடுமா?
அவை உன்னிடம் வந்து, ‘நாங்கள் இங்கு இருக்கிறோம், ஐயா, உனக்கு என்ன வேண்டும்’ எனக் கூறுமா?
அவை எங்கெங்குப் போகவேண்டுமென்று நீ விரும்புகிறாயோ, அங்கெல்லாம் அவை செல்லுமா?
36 “யோபுவே, யார் ஜனங்களை ஞானிகளாக்குகிறார்?
அவர்களுக்குள்ளே ஆழமாக ஞானத்தை வைப்பவன் யார்?
37 யோபுவே, மேகங்களை எண்ணுமளவிற்கும்
அவற்றின் மழையைப் பொழியத் தூண்டும்படியும் ஞானம் படைத்தவன் யார்?
38 அதனால் துகள்கள் சேறாக மாறி,
அழுக்குகள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்கின்றன.
39 “யோபுவே, நீ சிங்கங்களுக்கு இரை தேட முடியுமா?
அவற்றின் பசித்த குட்டிகளுக்கு நீ உணவுக் கொடுக்கிறாயா?
40 அச்சிங்கங்கள் அவற்றின் குகைகளில் படுத்திருக்கின்றன.
அவற்றின் இரையைத் தாக்குவதற்கு அவை புல்லினுள்ளே பதுங்கிக்கொள்கின்றன.
41 காக்கைக் குஞ்சுகள் தேவனை நோக்கிக் கத்தும்போதும், உணவின்றி அங்குமிங்கும் அலையும்போதும்
யோபுவே, அவற்றிற்கு உணவு ஊட்டுபவன் யார்? என்றார்.
39 “யோபுவே, மலையாடுகள் எப்போது
பிறக்கின்றன என்பது உனக்குத் தெரியுமா?
பெண்மான் குட்டியை ஈனுவதைக் கவனித்திருக்கிறாயா?
2 யோபுவே, மலையாடுகளும், பெண்மான்களும் எத்தனை மாதங்கள் அவற்றின் குட்டிகளைச் சுமக்க வேண்டுமென்பதை நீ அறிவாயா?
அவை பிறப்பதற்கேற்ற நேரமெப்போதென அறிவாயா?
3 அம்மிருகங்கள் கீழே படுத்துக்கொள்ளும், அவற்றின் பிரசவ வலியை உணரும்போது, குட்டிகள் பிறந்துவிடும்.
4 அக்குட்டி மிருகங்கள் வயல்களில் வலிமையாக வளரும்.
அவை தங்கள் தாய் விலங்குகளை விட்டுச் செல்லும், பின்பு அவை திரும்பிவராது.
5 “யோபுவே, காட்டுக் கழுதைகளைச் சுதந்திரமாக அலையவிட்டவர் யார்?
அவற்றின் கயிறுகளை அறுத்துவிட்டவர் யார்?
6 பாலைவனம் காட்டுக் கழுதையின் இருப்பிடமாகும்படி நான் (தேவன்) செய்தேன்.
உவர்நிலத்தை அவை வாழுமிடமாகக் கொடுத்தேன்.
7 காட்டுக் கழுதைகள் இரைச்சலான ஊர்களை நோக்கி சிரிக்கும்.
ஒருவனும் அவற்றை அடக்கியாள முடியாது.
8 காட்டுக் கழுதைகள் மலைகளில் வாழும்.
அவை அவற்றின் மேய்ச்சலிடம். அங்கு அவை உண்பதற்கு இரைத் தேடும்.
9 “யோபுவே, காட்டுக் காளை உனக்குச் சேவை புரியச் சம்மதிக்குமா?
அது உன் தொழுவத்தில் இரவில் தங்குமா?
10 யோபுவே, நீ உன் வயல்களை உழுவதற்குக்
காட்டுக் கழுதையின் மீது கயிறுகளைக் கட்ட அவை அனுமதிக்குமா?
11 காட்டுக் காளை மிகவும் பலம் வாய்ந்தது!
உன் வேலைகளைச் செய்ய நீ அதனை நம்பக்கூடுமா?
12 உன் தானியத்தைச் சேகரித்து
உன் களஞ்சியத்திற்குக் கொண்டுவரும் என அதை நம்புவாயா?
13 “தீக்கோழி வியப்புற்று அதன் சிறகுகளை அடிக்கும்.
ஆனால் தீக்கோழியால் பறக்க முடியாது, தீக்கோழியின் சிறகுகள் கொக்கின் சிறகுகளைப் போன்றவை அல்ல.
14 தீக்கோழி நிலத்தில் அதன் முட்டைகளை இடும்,
அவை மணலினுள் வெப்பமுறும்.
15 யாரேனும் அதன் முட்டைகளின்மேல் நடக்கக் கூடும் என்பதையோ,
சில காட்டு விலங்குகள் அவற்றை உடைக்கக்கூடும் என்பதையோ தீக்கோழி மறந்துவிடுகிறது.
16 தீக்கோழி அதன் குஞ்சுகளை விட்டுச் செல்கிறது.
அவை தனக்குரியனவல்ல என்பதைப்போல் அவற்றைக் கருதுகிறது (நடத்துகிறது).
அதன் குஞ்சுகள் மரித்துப்போனால், அது வருந்துவதில்லை.
அதன் உழைப்பு வீணானதுதான்.
17 ஏனெனில், நான் (தேவன்) தீக்கோழிக்கு ஞானத்தைக் கொடுக்கவில்லை.
தீக்கோழி முட்டாள்தனமானது, நான் அதனை அவ்வாறு படைத்திருக்கிறேன்.
18 ஆனால் தீக்கோழி ஓடுவதற்கென எழுந்திருக்கும்போது, அது குதிரையையும் அதில் சவாரி செய்பவனையும் பார்த்துச் சிரிக்கும்.
ஏனெனில் எந்தக் குதிரையையும் விட அதனால் வேகமாக ஓட இயலும்.
19 “யோபுவே, நீ குதிரைக்கு அதன் வலிமையைக் கொடுத்தாயா?
அதன் பிடரியில் பிடரி மயிரை வளரச் செய்தாயா?
20 யோபுவே, நீ குதிரையை ஒரு வெட்டுக் கிளியைப்போல, வெகுதூரம் தாண்ட வைப்பாயா?
குதிரை உரக்க கனைக்கிறது, அது ஜனங்களைப் பயப்படுத்துகிறது.
21 குதிரை அதன் மிகுந்த வலிமையால் சந்தோஷப்படும்.
அது பூமியைத் தன் பாதங்களால் கீறி, விரைந்து போருக்கென ஓடி நுழையும்.
22 அச்சத்தைப் பார்த்துக் குதிரை நகைக்கும் அது அஞ்சுவதில்லை!
அது யுத்தத்திற்கஞ்சி (யுத்தத்திலிருந்து) ஓடுவதில்லை.
23 குதிரையின் புறத்தே வீரனின் அம்பறாத்தூணி அசையும்.
அதனை சவாரிச் செய்பவன் ஏந்தும் ஈட்டியும் போர்க்கருவிகளும் சூரியனின் ஒளியில் பிரகாசிக்கும்.
24 குதிரை மிகவும் உணர்ச்சிவசப்படுகிறது!
அது பூமியில் மிக விரைந்தோடுகிறது. எக்காள சத்தத்தைக் குதிரை கேட்கும்போது அதனால் அமைதியாக இருக்க இயலாது.
25 எக்காளம் ஒலிக்கும்போது, குதிரை ஆர்ப்பரிக்கும்.
அது யுத்தத்தைத் தூரத்திலேயே நுகரும்!
அது அதிகாரிகளின் கட்டளைகளையும் யுத்தத்தின் பிற ஒலிகளையும் கேட்கும்.
26 “யோபுவே, ராஜாளி அதன் செட்டைகளை விரித்துத் தெற்கு நோக்கிப் பறக்க நீ கற்பித்தாயா?
27 யோபுவே, நீ தான் கழுகிடம் உயரே வானத்தில் பறக்கச் சொன்னாயா?
மலைகளின் உயரமான இடங்களில் அதன் கூட்டைக் கட்டச் சொன்னாயா?
28 கழுகு மலை முகப்பில் வாழ்கிறது.
மலைச்சிகரமே கழுகின் கோட்டை.
29 அதன் உயரமான கோட்டையிலிருந்து கழுகு அதன் இரையை நோக்கும்.
மிகுந்த தூரத்திலிலுள்ள இரையையும் கழுகால் பார்க்க முடியும்.
30 பிணங்கள் இருக்குமிடத்தில் கழுகுகள் கூடும்.
அதன் குஞ்சுகள் இரத்தத்தைக் குடிக்கும்” என்றான்.
கர்த்தர் யோபுவை நோக்கி:
40 “யோபுவே,
“நீ சர்வ வல்லமையுள்ள தேவனோடு விவாதித்தாய்.
தவறிழைத்த குற்ற முடையவனாக என்னை நீ நியாயந்தீர்த்தாய்!
நீ தவறு செய்தாயென இப்போது நீ ஒப்புக்கொள்வாயா?
நீ எனக்குப் பதில் கூறுவாயா?” என்றார்.
3 அப்போது யோபு, தேவனுக்குப் பதிலுரைத்தான். அவன்:
4 “நான் பேசுவதற்கும் தகுதியற்றவன்!
நான் உம்மிடம் என்ன கூறமுடியும்?
நான் உமக்கு பதில் கூற முடியாது!
நான் என் கைகளை வாயின் மீது வைப்பேன்.
5 நான் ஒரு முறை பேசினேன், ஆனால் நான் மீண்டும் பேசமாட்டேன்.
நான் இருமுறை பேசினேன், ஆனால், இனிமேல் எதுவும் கூறமாட்டேன்” என்றான்.
6 அப்போது புயலிலிருந்து கர்த்தர் மீண்டும் யோபுவிடம் பேசினார். கர்த்தர்,
7 “யோபுவே, உன் இடையைக் கட்டிக்கொண்டு
நான் உன்னிடம் கேட்கப்போகும் கேள்விகளுக்குப் பதில் கூறு,
8 “யோபுவே, நான் நியாயமற்றவனென்று நீ நினைக்கிறாயா?
என்னை தவறிழைக்கும் குற்றவாளியாகக் கூறுவதால், நீ களங்கமற்றவனெனக் காட்ட நினைக்கிறாய்!
9 யோபுவே, உன் கரங்கள் தேவனுடைய கரங்களைப்போன்று வலிமையுடையனவா?
இடிபோல முழங்க வல்ல தேவனுடைய குரலைப்போன்ற குரல் உனக்கு உள்ளதா?
10 நீ தேவனைப் போலிருந்தால், பெருமையடைந்து உன்னை நீயே மகிமைப்படுத்திக் கொள்ள முடியும்.
நீ தேவனைப் போலிருந்தால், ஆடையைப்போன்று மகிமையையும், மேன்மையையும் நீ உடுத்திக்கொள்ள முடியும்.
11 நீ தேவனைப் போலிருந்தால், உன் கோபத்தை வெளிப்படுத்தி அகங்காரமுள்ள ஜனங்களைத் தண்டிக்க முடியும்.
அந்த அகங்காரமுள்ள ஜனங்களைத் தாழ்மையுள்ளோராக்க முடியும்.
12 ஆம், யோபுவே, அந்த அகங்காரம் நிரம்பிய ஜனங்களைப் பார், அவர்களைத் தாழ்மையுள்ளோராக்கு.
தீயோர் நிற்குமிடத்திலேயே அவர்களை நசுக்கிவிடு.
13 அகங்காரமுள்ள ஜனங்கள் எல்லோரையும் மண்ணுக்குள் புதைத்துவிடு.
அவர்கள் உடலை துணியால் சுற்றி அவர்களின் கல்லறைக்குள் வைத்துவிடு.
14 யோபுவே, உன்னால் இக்காரியங்களையெல்லாம் செய்ய முடிந்தால், அப்போது நான்கூட உன்னை வாழ்த்துவேன்.
உன் சொந்த ஆற்றலால் உன்னை நீ காப்பாற்றிக்கொள்ளக்கூடும் என்பதை நான் ஒப்புக்கொள்வேன்.
15 “யோபுவே, பிகெமோத்தை நீ கவனித்துப்பார்.
நான் (தேவன்) பிகெமோத்தை [c] உண்டாக்கினேன், உன்னையும் உண்டாக்கினேன்.
பிகெமோத் பசுவைப்போல, புல்லைத் தின்கிறது.
16 பிகெமோத்தின் உடம்பு மிகுந்த வல்லமை பொருந்தியது.
அதன் வயிற்றின் தசைகள் வல்லமை மிக்கவை.
17 பிகெமோத்தின் வால் கேதுரு மரத்தைப் போல் ஆற்றலோடு காணப்படுகிறது.
அதன் கால் தசைகள் மிகுந்த பலமுள்ளவை.
18 பிகெமோத்தின் எலும்புகள் வெண்கலம் போன்று பலமுள்ளவை.
அதன் கால்கள் இரும்புக் கம்பிகளைப் போன்றவை.
19 நான் (தேவன்) உண்டாக்கிய மிருகங்களுள் பிகெமோத் மிகவும் வியக்கத்தக்கது.
ஆனால் நான் அதை வெல்ல (தோற்கடிக்க) முடியும்.
20 காட்டு மிருகங்கள் விளையாடும் மலைகளில் வளரும் புல்லைப்
பிகெமோத் தின்கிறது.
21 தாமரைக் கொடிகளின் கீழே பிகெமோத் படுத்திருக்கிறது.
அது உளையிலுள்ள (சேற்றிலுள்ள) நாணல்களின் கீழ் மறைந்துக்கொள்ளும்.
22 தாமரைக் கொடிகள் அவற்றின் நிழலில் பிகெமோத்தை மறைக்கும்.
நதியருகே வளரும் அலரி மரங்களின் கீழே அது வாழும்.
23 நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தால், பிகெமோத் ஓடிப்போய்விடாது.
யோர்தான் நதியின் தண்ணீர் அதன் முகத்தில் அடித்தாலும் அது அஞ்சாது.
24 பிகெமோத்தின் கண்களை ஒருவனும் குருடாக்கி அதனை வலையில் அகப்படுத்தவும் முடியாது.
41 “யோபுவே, உன்னால் லிவியாதானை ஒரு தூண்டிலினால் பிடிக்க முடியுமா?
அதன் நாவை உன்னால் ஒரு கயிற்றினால் கட்ட முடியுமா?
2 யோபுவே, லிவியாதானின் மூக்கில் ஒரு கயிற்றை நுழைக்கமுடியுமா?
அல்லது, அதன் தாடையில் ஒரு ஆணியைச் செருகமுடியுமா?
3 யோபுவே, அதனை விடுதலைச் செய்யுமாறு லிவியாதான் உன்னை இரந்து வேண்டுமா?
மென்மையான சொற்களால் அது உன்னோடு பேசுமா?
4 யோபுவே, லிவியாதான் உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு
என்றென்றும் உனக்குச் சேவை புரிய வாக்குறுதி தருமா?
5 யோபுவே, நீ லிவியாதானோடு ஒரு பறவையிடம் விளையாடுவதைப்போன்று விளையாடுவாயா?
உன் பணிப்பெண்கள் அதனோடு விளையாடுமாறு அதனை ஒரு கயிற்றால் கட்டுவாயா?
6 யோபுவே, மீன் பிடிப்போர் உன்னிடமிருந்து லிவியாதானை வாங்க முயல்வார்களா?
அவர்கள் அதைத் துண்டுகளாக்கி, வியாபாரிகளுக்கு அதை விற்பார்களா?
7 யோபுவே, நீ லிவியாதானின் தோலோ அல்லது தலையிலோ ஈட்டியை எறிய (வீச) முடியுமா?
8 “யோபுவே, நீ லிவியாதானைத் தாக்க ஒரு முறை முயன்றால், பின்பு ஒருபோதும் அதனைச் செய்யமாட்டாய்!
எத்தகைய யுத்தம் நடக்கும் என்பதைச் சற்றே யோசித்துப்பார்!
9 நீ லிவியாதானைத் தோற்கடிக்க முடியுமென எண்ணினால் அதை மறந்துவிடு!
எந்த நம்பிக்கையும் இல்லை!
(நம்பிக்கையற்றுப்போவாய்)!
அதைப் பார்த்தாலே பீதி (அச்சம்) விளையும்!
10 அதனை எழுப்பிக் கோபமுறுத்த
எந்த மனிதனுக்கும் தைரியம் (துணிவு) இல்லை.
“ஒருவனும் என்னை எதிர்த்து நிற்கமுடியாது!
11 நான் (தேவன்) ஒருவனுக்கும் கடமைப்பட்டவன் அல்லன்.
பரலோகத்தின் கீழ் உள்ளவை அனைத்தும் எனக்குரியன.
12 “யோபுவே, லிவியாதானின் கால்களைப் பற்றியும் அதன் வலிமை, அழகிய வடிவம் ஆகியற்றைப் பற்றியும்
நான் உனக்குக் கூறுவேன்.
13 ஒருவனும் அதன் தோலைக் குத்திப் பிளக்க முடியாது.
அதன் தோல் ஒரு கேடயத்தைப் போன்றது!
14 லிவியாதானின் தாடையைத் திறக்குமாறு செய்ய ஒருவனும் அதனை வற்புறுத்த முடியாது.
அதன் வாயிலுள்ள பற்கள் ஜனங்களைப் பயமுறுத்தும்.
15 லிவியாதானின் முதுகில் இறுக்கமாக இணைக்கப்பட்டுள்ள
கேடய வரிசைகள் காணப்படும்.
16 அக்கேடயங்கள் காற்றும் நுழைய முடியாதபடி
இறுகிப் பிணைந்திருக்கும்,
17 கேடயங்கள் ஒன்றோடொன்று இணைந்திருக்கும்.
அவை பிரிக்க முடியாதபடி ஒன்றோடொன்று இறுக்கமாக இணைக்கப்பட்டிருக்கும்.
18 லிவியாதான் தும்மும்போது, மின்னல் மின்னுவதைப் போன்றிருக்கும்.
அதன் கண்கள் உதயகால ஒளிபோல் பிரகாசிக்கும்.
19 அதன் வாயிலிருந்து தீப்பந்தங்கள் வெளிவரும்.
நெருப்புப் பொறிகள் வெளிப்படும்.
20 கொதிக்கும் பானையின் அடியில் எரியும் புதரைப்போல்
லிவியாதானின் மூக்கிலிருந்து புகை கிளம்பும்.
21 லிவியாதானின் மூச்சு நிலக்கரியை எரிக்கும்,
அதன் வாயிலிருந்து நெருப்பு எழும்பும்.
22 லிவியாதானின் கழுத்து மிகுந்த வல்லமை கொண்டது.
ஜனங்கள் பயந்து அதனிடமிருந்து ஓடிப்போகிறார்கள்.
23 அதன் தோலில் மிருதுவான பகுதி கிடையாது.
அது இரும்பைப்போல கடினமானது.
24 லிவியாதானின் இருதயம் பாறையைப் போன்றது.
அதற்கு அச்சம் கிடையாது.
(அது அஞ்சுவதில்லை).
அது எந்திரத்தின் அடிக்கல்லைப்போல் கடினமாயிருக்கும்.
25 லிவியாதான் எழுகையில் வலியோர் அஞ்சுவார்.
லிவியாதான் வாலை வீசும்போது அவர்கள் ஓடிவிடுவர்.
26 வாட்கள், ஈட்டிகள், மற்றும் வல்லயம் லிவியாதானைத் தாக்கும்.
ஆனால் அவையே எகிறிவிழும்.
அக்கருவிகள் அதைக் காயப்படுத்துவதேயில்லை!
27 லிவியாதான் இரும்பைப் புல்லைப் போல் உடைக்கும்.
உளுத்துப்போன (அரித்துப்போன) மரத்தைப்போன்று அது வெண்கலத்தை உடைக்கும்.
28 அம்புகள் லிவியாதானை ஓடச்செய்யாது,
உலர்ந்த புல்லாய் பாறைகள் அதனின்று விலகிவீழும்.
29 பெருந்தடிகள் லிவியாதானைத் தாக்கும்போது, அவற்றை அது புல்லாய் உணரும்.
மனிதர் அதன் மீது ஈட்டிகளை எறியும்போது, அது சிரிக்கும்.
30 கடினமாக, கூரிய, உடைந்த, மட்பாண்டத்தின் துண்டுகளைப்போல், லிவியாதானின் உடம்பின் அடியிலுள்ள தோல் இருக்கும்.
தாற்றுக்கோலைப் போன்று அது சேற்றின் மீது அடையாளமிட்டுச் செல்லும்.
31 கொதிக்கும் பானையைப்போன்று லிவியாதான் தண்ணீரைக் கலக்குகிறது.
பானையின் கொதிக்கும் எண்ணெயைப் போன்று அது குமிழிகளை எழுப்பும்.
32 லிவியாதான் நீந்தும்போது, அதன் பின்னே ஒரு பாதையை விட்டுச்செல்லும்.
அது தண்ணீரைக் கலக்கும், அதன் பின்னே வெண்மையான நுரையைத் தள்ளிச் செல்லும்.
33 லிவியாதானைப்போன்று உலகில் வேறெந்த மிருகமும் இல்லை.
அச்சமின்றி படைக்கப்பட்ட மிருகம் அது.
34 கர்வம் மிக்க மிருகங்களையும் லிவியாதான் நகைப்போடு பார்க்கும்.
அது எல்லா காட்டுமிருகங்களுக்கும் அரசன்.
கர்த்தராகிய நான் லிவியாதானைப் படைத்தேன்!” என்றார்.
2008 by World Bible Translation Center