Bible in 90 Days
19 நான் ஜனங்களில் சிலர் மீது அடையாளத்தை இடுவேன். நான் அவர்களைக் காப்பாற்றுவேன். காப்பாற்றப்பட்ட ஜனங்களில் சிலரை நான் தர்ஷீசு, லிபியாலூத் (வில் வீரர்களின் நாடு), தூபால், கிரீஸ் மற்றும் தொலைதூர நாடுகளுக்கும் அனுப்புவேன். அந்த ஜனங்கள் என்றும் எனது போதனைகளைக் கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள். அந்த ஜனங்கள் எனது மகிமையை என்றும் பார்த்திருக்கமாட்டார்கள். எனவே, காப்பாற்றப்பட்ட ஜனங்கள் எனது மகிமையைப்பற்றி அந்நாடுகளில் கூறுவார்கள். 20 அவர்கள் அனைத்து நாடுகளிலும் உள்ள உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அனைவரையும் அழைத்துக்கொண்டு வருவார்கள். உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அனைவரையும் அவர்கள் எனது பரிசுத்தமான மலையான எருசலேமிற்கு அழைத்து வருவார்கள். உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், இரதங்கள் மற்றும் வண்டிகளில் வருவார்கள். உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் ஆகியோர் இஸ்ரவேலர்களால் கர்த்தருடைய ஆலயத்திற்குச் சுத்தமான தட்டில் வைத்து கொண்டுவரப்படும் காணிக்கைகளைப்போன்று இருப்பார்கள். 21 நானும் இந்த ஜனங்களில் சிலரை ஆசாரியர்களாகவும் லேவியர்களாகவும் தேர்ந்தெடுப்பேன்” கர்த்தர்தாமே இவற்றைச் சொன்னார்.
புதிய வானங்களும் புதிய பூமியும்
22 “நான் ஒரு புதிய உலகத்தைப் படைப்பேன். புதிய வானங்களும் புதிய பூமியும் என்றென்றும் நிலைத்து இருக்கும். அவ்வாறே உங்கள் பெயர்களும், உங்கள் பிள்ளைகளும் என்னோடு எப்பொழுதும் இருப்பார்கள். 23 ஒவ்வொரு ஆராதனைக்குரிய நாளிலும் அனைத்து ஜனங்களும் என்னை ஆராதிக்க வருவார்கள். அவர்கள் ஒவ்வொரு ஓய்வு நாளிலும் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் வருவார்கள்.
24 “இந்த ஜனங்கள் எனது பரிசுத்தமான நகரத்தில் இருப்பார்கள். அவர்கள் அந்நகரத்தை விட்டு வெளியே போனால் எனக்கு எதிராகப் பாவம் செய்தவர்களின் மரித்த உடல்களைப் பார்ப்பார்கள். அந்த உடல்களில் புழுக்கள் இருக்கும். அப்புழுக்கள் என்றும் சாகாது. நெருப்பு அந்த உடல்களை எரித்துப்போடும். அந்நெருப்பு அணையாமல் இருக்கும்.”
1 இவை எரேமியாவின் செய்திகள். இல்க்கியா என்ற பெயருள்ள மனிதரின் மகன் எரேமியா. ஆனதோத் என்ற நகரத்தில் வாழ்ந்த ஆசாரியரின் குடும்பத்தைச் சார்ந்தவனாக இருந்தான். அந்நகரமானது பென்யமீனின் கோத்திரத்தினருக்குரிய நாட்டில் இருந்தது. 2 கர்த்தர், யூதா நாட்டின் அரசனாக யோசியா இருந்தபோது அந்நாட்களில் எரேமியாவுடன் பேசத்தொடங்கினார். யோசியா, ஆமோன் என்ற பெயருடைய மனிதரின் மகனாகும். கர்த்தர், யோசியாவின் ஆட்சியில் 13வது ஆண்டில் [a] எரேமியாவுடன் பேச ஆரம்பித்தார். 3 யூதாவின் அரசனாக யோயாக்கீம் இருந்தபோதும் அந்தக் காலத்தில் கர்த்தர் எரேமியாவுடன் தொடர்ந்து பேசினார். யோயாக்கீம் யோசியாவின் மகன், யூதாவின் அரசனாக சிதேக்கியா இருந்த பதினோறு ஆண்டுகளும் ஐந்து மாதங்களும் கர்த்தர் எரேமியாவுடன் தொடர்ந்து பேசினார். சிதேக்கியாவும் யோசியாவின் மகனாக இருந்தான். சிதேக்கியா அரசனாக இருந்த பதினொன்றாவது ஆண்டின் ஐந்தாவது மாதத்தில் எருசலேமில் வாழ்ந்த ஜனங்கள் சிறையெடுக்கப்பட்டனர்.
தேவன் எரேமியாவை அழைக்கிறார்
4 கர்த்தருடைய வார்த்தை எரேமியாவிற்கு உண்டாகி, அவர்,
5 “உனது தாயின் கருவில் நீ உருவாக்கப்படுவதற்கு முன்பே
நான் உன்னை அறிவேன்.
நீ பிறப்பதற்கு முன்பு
உன்னதமான வேலைக்கு உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.
நாடுகளுக்குத் தீர்க்கதரிசியாக நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்” என்றார்.
6 பிறகு எரேமியா, “ஆனால் சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, எப்படிப் பேசுவது என்று எனக்குத் தெரியாது. நான் ஒரு சிறுவன்” என்றான்.
7 ஆனால் கர்த்தர் என்னிடம்,
“‘நீ சிறுவன்’ என்றுச் சொல்லாதே.
நான் அனுப்புகிற எல்லா இடங்களுக்கும் நீ போகவேண்டும், நான் சொல்லுகிறவற்றை எல்லாம் நீ பேசவேண்டும்” என்றார்.
8 “எவருக்கும் பயப்படவேண்டாம், நான் உன்னோடு இருக்கிறேன்.
நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்றார்.
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.
9 பிறகு கர்த்தர் தனது கரத்தை நீட்டி எனது வாயைத் தொட்டார், கர்த்தர் என்னிடம்,
“எரேமியா, நான் எனது வார்த்தைகளை உனது வாய்க்குள் வைக்கிறேன்.
10 இன்று நான் உன்னை நாடுகளுக்கும், அரசுகளுக்கும் பொறுப்பாளியாக நியமித்திருக்கிறேன்.
நீ வேரோடு பிடுங்கவும், இடிக்கவும்,
அழிக்கவும், கவிழ்க்கவும்,
கட்டவும், நாட்டவும் செய்வாய்” என்றார்.
இரண்டு தரிசனங்கள்
11 மறுபடியும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர், “எரேமியா, நீ என்ன பார்க்கிறாய்?” என்றார்.
நான் கர்த்தருக்கு, “நான் வாதுமை மரத்தின் கிளையால் ஆனக் கம்பைப் பார்க்கிறேன்” என்றேன்.
12 கர்த்தர் என்னிடம், “நீ நன்றாகப் பார்த்தாய். நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன். உன்னிடம் வரும் எனது வார்த்தைகளை சீக்கிரமாய் நிறைவேற்றுவேன், என்பதை உறுதி செய்கிறேன்” என்றார்.
13 மீண்டும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர், “எரேமியா, நீ என்ன பார்க்கிறாய்?” என்றார். “நான் ஒரு பானையில் கொதிக்கிற தண்ணீரைப் பார்க்கிறேன், அந்தப் பானையின் வாய் வடக்கேயிருந்து பார்க்கிறது” என்றேன்.
14 கர்த்தர் என்னிடம், “வடக்கிலிருந்து பயங்கரமான ஒன்று வரும்,
இந்த நாட்டில் வாழ்கிற அனைத்து ஜனங்களுக்கும் இது ஏற்படும்.
15 மிகக் குறுகிய காலத்தில் நான், வடநாட்டு அரசுகளில் உள்ள அனைத்து ஜனங்களையும் அழைப்பேன்” என்றார்.
இவற்றையெல்லாம் கர்த்தர் சொன்னார்.
“அந்நாடுகளில் உள்ள அரசர்கள் வந்து எருசலேமின் வாசலருகில்
தங்கள் சிங்காசனங்களை போடுவார்கள்,
அவர்கள் எருசலேமின் நகரச் சுவர்களைத் தாக்குவார்கள்,
மற்றும் அவர்கள் யூதாவிலுள்ள அனைத்து நகரங்களையும் தாக்குவார்கள்.
16 நான் எனது ஜனங்களுக்கு எதிராக என் தீர்ப்பினை அறிவிப்பேன்.
அவர்கள் தீயவர்கள், எனவே நான் இவற்றைச் செய்வேன்.
அவர்கள் எனக்கு எதிராகத் திரும்பியிருந்தார்கள்.
எனது ஜனங்கள் என்னை விட்டு விலகினார்கள்.
அவர்கள் அந்நிய தெய்வங்களுக்கு பலிகளைக் கொடுத்தனர்,
அவர்கள் தமது கைகளால் செய்திருந்த விக்கிரகங்களைத் தொழுதுகொண்டனர்.
17 “ஆகவே எரேமியா, தயாராயிரு,
எழுந்து நில், ஜனங்களோடு பேசு,
நான் உன்னிடம் சொன்னவற்றையெல்லாம் நீ அவர்களுக்குச் சொல்.
ஜனங்களைப் பார்த்து பயப்படாதே,
நீ ஜனங்களுக்குப் பயந்தால்,
பிறகு அவர்களுக்கு நீ பயப்படும்படி நல்ல காரணங்களைத் தருவேன்.
18 என்னைப் பொருத்தவரை, இன்று உன்னை
பாதுகாப்பான நகரத்தைப்போன்று வலிமையானவனாக ஆக்குவேன்,
இரும்புத் தூண் போலவும்,
வெண்கலச்சுவர் போலவும் செய்வேன்.
தேசத்திலுள்ள எல்லாவற்றுக்கும் முன்பும்,
யூதா நாட்டிலுள்ள அரசர்களுக்கு முன்பும்,
யூதாவின் தலைவர்களுக்கு முன்பும்,
யூதாவின் ஆசாரியர்களுக்கு முன்பும்,
யூதாநாட்டின் ஜனங்களுக்கு முன்பும் நிற்க முடிந்த ஒருவனாக ஆவாய்.
19 அந்த ஜனங்கள் அனைவரும் உனக்கு எதிராகப் போரிடுவார்கள்,
ஆனால் அவர்கள் உன்னைத் தோற்கடிக்கமாட்டார்கள்.
ஏனென்றால், நான் உன்னோடு இருக்கிறேன்,
நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்றார்.
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.
யூதா உண்மையாக இல்லை
2 கர்த்தருடைய வார்த்தை எரேமியாவிற்கு உண்டாகி அவர், 2 “எரேமியா, போ. எருசலேம் ஜனங்களிடம் பேசு, அவர்களிடம்,
“நீ இளைய நாடாக இருந்த காலத்தில் எனக்கு உண்மை உள்ளவளாக இருந்தாய்,
இளைய மணமகளைப் போன்று, என்னைப் பின்பற்றினாய்.
வனாந்தரத்தின் வழியாக என்னைப் பின்பற்றினீர்கள்;
விவசாயத்திற்குப் பயன்படுத்தாத நிலத்தின் வழியாக என்னைப் பின்தொடர்ந்தீர்கள்.
3 இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருக்கான பரிசுத்த அன்பளிப்பாக இருந்தனர்.
அவர்கள் கர்த்தரால் சேகரிக்கப்பட்ட முதல்கனியாக இருந்தனர்.
அவர்கள் காயப்படுத்த முயலும் எவரும் குற்றவாளியாகத் தீர்க்கப்படுவார்கள்.
அத்தீயவர்களுக்குக் கெட்டவை ஏற்படும் என்று சொல்” என்றார்.
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.
4 யாக்கோபின் குடும்பமே கர்த்தருடைய வார்த்தையைக் கேள்,
இஸ்ரவேலின் கோத்திரங்களே கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
5 கர்த்தர் சொல்லுகிறது இதுதான்:
“நான், உங்கள் முற்பிதாக்களிடம் நீதியுடன் இல்லை என நினைக்கிறீர்களா?
அதனால்தான் அவர்கள் என்னைவிட்டு விலகிப் போனார்களா?
உங்கள் முற்பிதாக்கள் பயனற்ற விக்கிரகங்களைத் தொழுதுகொண்டனர்.
அவர்கள், தாங்களே உதவாக்கரைகள் ஆனார்கள்.
6 உங்கள் முற்பிதாக்கள், ‘கர்த்தர் எகிப்திலிருந்து எங்களைக் கொண்டுவந்தார்,
கர்த்தர் எங்களை வனாந்திரத்தில் வழிநடத்தினார்.
கர்த்தர் எங்களை வறண்ட பாறை நிலத்தின் வழியாக நடத்தினார்.
கர்த்தர் எங்களை இருண்ட ஆபத்தான நாடுகள் வழியாக நடத்தினார்,
ஜனங்கள் எவரும் அங்கு இதற்குமுன்பு வாழவில்லை.
ஜனங்கள் அவ்வழியாகப் பயணம் செய்ததுமில்லை,
ஆனால் கர்த்தர் எங்களை அந்த தேசத்தின் வழியாக நடத்தி வந்தார்;
எனவே, இப்போது அவர் எங்கே இருக்கிறார்?’” என்று சொல்லவில்லை.
7 கர்த்தர் கூறுகிறார்: “நான் உங்களை நல்ல நாட்டிற்கு கொண்டுவந்தேன்,
பல நன்மைகள் நிறைந்த ஒரு நாட்டிற்கு கொண்டுவந்தேன்.
நான் இதனைச் செய்தேன், எனவே நீ அங்கு வளர்ந்த பழங்கள் மற்றும் அறுவடைகளை உண்ணமுடியும்,
ஆனால் நீங்கள் என் நாட்டை ‘அசுத்தம்’ மட்டுமே செய்தீர்கள்.
நான் அந்த நல்ல நாட்டை உங்களுக்குக் கொடுத்தேன்,
ஆனால் நீங்கள் அதனை தீய இடமாகச் செய்தீர்கள்.
8 “‘கர்த்தர் எங்கே?’
என்று ஆசாரியர்கள் கேட்கவில்லை,
சட்டத்தை அறிந்தவர்கள் என்னை அறிய விரும்பவில்லை,
இஸ்ரவேலின் ஜனங்களின் தலைவர்கள் எனக்கெதிராகத் திரும்பினார்கள்;
தீர்க்கதரிசிகள் பாகால் என்னும் பொய்த் தெய்வம் பெயரால் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
அவர்கள் பயனற்ற விக்கிரகங்களைத் தொழுதுகொண்டார்கள்.”
9 எனவே கர்த்தர் சொல்லுகிறதாவது: “இப்பொழுது நான் மீண்டும் உன்னைக் குற்றம்சாட்டுவேன்,
நான் உனது பேரப் பிள்ளைகளையும் குற்றம்சாட்டுவேன் என்று சொல்லுகிறார்.
10 கடலைக் கடந்து கித்திமின் தீவுகளுக்குப் போ.
கேதாருக்கு யாராவது ஒருவனை அனுப்பு,
மிகக் கவனமாகப் பார்,
எவராவது இதுபோல செய்திருக்கிறார்களா, என்று பார்.
11 எந்த நாட்டவர்களாவது எப்போதாவது புதிய தெய்வங்களை தொழுதுகொள்ள
தங்கள் பழைய தெய்வங்களைத் தொழுதுகொள்வதை நிறுத்தினார்களா?
அவர்களின் தெய்வங்கள், தெய்வங்களே அல்ல!
ஆனால், என் ஜனங்கள், தங்கள் மகிமைமிக்க தேவனை ஆராதிப்பதைவிட்டு,
எதற்கும் பயனற்ற விக்கிரகங்களைத் தொழுதுகொள்ளத் தொடங்கினார்கள்.
12 “வானங்களே, நடந்திருக்கும் இவற்றின் நிமித்தம்
திகைப்பால் வியப்படைந்து பெரும் பயத்தால் நடுங்குங்கள்!”
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.
13 “எனது ஜனங்கள் இரு தீயச்செயல்களைச் செய்திருக்கின்றனர்;
அவர்கள் என்னிடமிருந்து விலகினார்கள்,
(நான் உயிருள்ள தண்ணீரின் ஊற்றாக இருக்கிறேன்).
அவர்கள் தங்களுக்குரிய தண்ணீர்க் குழிகளைத் தோண்டினார்கள்.
(அவர்கள் அந்நிய தெய்வங்களிடம் திரும்பினார்கள்).
ஆனால், அவர்களுடைய தண்ணீர்க்குழிகள் உடைந்தன,
அத்தொட்டிகளில் தண்ணீர் தங்குவதில்லை.
14 “இஸ்ரவேல் ஜனங்கள் அடிமைகளாக மாறினார்களா?
அடிமையாகப் பிறந்த மனிதனைப்போன்று இருந்தார்களா?
இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து செல்வத்தை ஏன் ஜனங்கள் எடுத்துக்கொண்டனர்?
15 இஸ்ரவேலை நோக்கி இளஞ்சிங்கங்கள் (பகைவர்கள்) கெர்ச்சிக்கின்றன,
சிங்கங்கள் முழங்குகின்றன, இஸ்ரவேல் தேசத்தை சிங்கங்கள் அழித்திருக்கின்றன,
இஸ்ரவேல் நகரங்கள் எரிந்திருக்கின்றன,
அவர்களில் எவரும் மீதமில்லை.
16 நோப், தகபானேஸ் எனும் நகரங்களின் ஜனங்கள்
உன் உச்சந்தலையை நொறுக்கினார்கள்.
17 இந்த தொந்தரவு உனது சொந்தக் குற்றம்!
உங்கள் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்வழியில் நடத்தினார்,
ஆனால், அவரிடமிருந்து நீங்கள் விலகினீர்கள்.
18 யூத ஜனங்களே, இதை நினையுங்கள்:
எகிப்துக்குப் போக இது உதவுமா?
நைல் நதியில் தண்ணீர் குடிக்க இது உதவுமா? இல்லை!
அசீரியாவிற்குச் செல்ல இது உதவுமா?
ஐபிராத்து ஆற்று தண்ணீரைக் குடிக்க இது உதவுமா? இல்லை!
19 நீங்கள் தீயவற்றைச் செய்தீர்கள்,
அத்தீயவை உங்களுக்குத் தண்டனையைமட்டும் கொண்டு வரும். துன்பம் உங்களுக்கு வரும்.
அத்துன்பம் உனக்குப் பாடத்தைக் கற்பிக்கும்.
இதைப்பற்றி சிந்தி!
பிறகு உன் தேவனிடமிருந்து விலகுவது எவ்வளவு கெட்டது என்பதை நீ புரிந்துகொள்வாய்;
என்னை மதிக்காததும் எனக்குப் பயப்படாததும் தவறு!”
இச்செய்தி எனது ஆண்டவராகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வந்தது.
20 “யூதாவே, நீண்ட காலத்திற்கு முன்பு உன் நுகத்தை எறிந்தாய்,
நீ கயிறுகளை அறுத்து எறிந்தாய், (அதனை உன்னைக் கட்டுப்படுத்த வைத்திருந்தேன்) ‘நான் உனக்கு சேவை செய்ய மாட்டேன்!’ என்று நீ சொன்னாய்.
நீ வேசியைப்போன்று
மலைகளின் மேலும் ஒவ்வொரு பச்சையான மரங்களின் கீழும் அலைந்தாய்.
21 யூதாவே, நான் உன்னைச் சிறப்பான திராட்சையைப்போன்று நட்டேன்.
நீங்கள் அனைவரும் நல்ல விதைகளைப் போன்றிருந்தீர்கள்,
நீங்கள் தீய பழத்தைக்கொடுக்கும் வேறுபட்ட திராட்சையாக எப்படி மாறினீர்கள்?
22 நீ உன்னை உவர்மண்ணால் கழுவினாலும்,
நீ மிகுதியான சவுக்காரத்தைப் பயன்படுத்தினாலும் நான் உனது குற்றத்தின் கறையைக் காணமுடியும்”
என்று தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
23 “யூதாவே, நீ என்னிடம், ‘நான் தீட்டாகவில்லை,
நான் பாகால் விக்கிரகங்களை தொழுதுகொள்ளவில்லை’ என்று எப்படிக் கூறமுடியும்?
பள்ளத்தாக்குகளில் நீ செய்தவற்றைப்பற்றி எண்ணு,
நீ இடத்திற்கு இடம் வேகமாக ஓடுகிற பெண் ஒட்டகத்தைப் போன்றவள்.
24 நீ வனாந்தரத்திலே வாழ்கிற ஒரு கழுதையைப் போன்றவன்.
அது காமத்தின்போது மோப்பம் பிடிக்கக்கூடியது,
அது ஆசையோடு இருக்கும்போது, அதன் போக்கை மாற்ற யாராலும் திருப்பிக் கொண்டு வரமுடியாது.
காமத்தின்போது ஒவ்வொரு கழுதையும் தான்விரும்பும் பெண் கழுதையை அடையும்,
அதனைக் கண்டுபிடிப்பது எளிது.
25 யூதாவே, விக்கிரகங்களின் பின்னால் ஓடுவதைவிடு!
அந்த தெய்வங்களுக்காகத் தாகமாயிருப்பதை நிறுத்து.
ஆனால் நீ, ‘இதனால் பயனில்லை என்னால் அமைதியாக இருக்கமுடியாது,
அந்த அந்நிய தெய்வங்களை நான் நேசிக்கிறேன்,
அவற்றை நான் தொழுதுகொள்ள விரும்புகிறேன்’ என்கிறாய்.
26 “ஒரு திருடன் பிடிபட்டபோது,
வெட்கப்படுகிறான், அதைப்போன்று, இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் வெட்கப்படுகிறார்கள்.
அரசர்களும் தலைவர்களும் வெட்கப்படுகிறார்கள்.
ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் வெட்கப்படுகிறார்கள்.
27 அந்த ஜனங்கள் மரத்துண்டுகளோடு பேசுகிறார்கள்!
அவர்கள், ‘நீ என் தந்தை’ என்கிறார்கள்.
அந்த ஜனங்கள் பாறையோடு பேசுகிறார்கள்.
அந்த ஜனங்கள், ‘நீ எனக்குப் பிறப்பைக் கொடுத்தாய்’ என்றனர்.
அவர்கள் அனைவரும் வெட்கப்படுவார்கள்.
அந்த ஜனங்கள் என்னைப் பார்க்கமாட்டார்கள்.
அவர்கள் எனக்குத் தம் முதுகைக் காட்டினார்கள்.
ஆனால் யூதாவின் ஜனங்கள் துன்பம் அடையும்போது, அவர்கள் என்னிடம் வந்து,
‘எங்களைக் காப்பாற்றும்!’ என்பார்கள்.
28 அந்த விக்கிரகங்கள் வந்து உன்னைக் காப்பாற்றட்டும்! நீங்களாகச் செய்த அந்த விக்கிரகங்கள் எங்கே?
நீங்கள் துன்பப்படும்போது அந்த விக்கிரகங்கள் வந்து உங்களைக் காப்பாற்றுகிறதா என்று பார்க்கலாம்!
யூதாவே, உனது எண்ணற்ற நகரங்களைப் போன்றே நிறைய விக்கிரகங்களைப் பெற்றுள்ளாய்!
29 “ஏன் என்னோடு நீ வாதாடுகிறாய்?
நீங்கள் அனைவரும் எனக்கு எதிராக உள்ளீர்கள்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
30 “யூதாவின் ஜனங்களே, நான் உங்களைத் தண்டித்தேன்.
ஆனால் அது உதவவில்லை.
நீங்கள் தண்டிக்கப்பட்டபோது
என்னிடம் திரும்பி வரவில்லை.
உங்களிடம் வந்த தீர்க்கதரிசிகளை வாளால் கொன்றீர்கள். நீங்கள் ஆபத்தான சிங்கத்தைப் போன்றவர்கள்.
நீங்கள் தீர்க்கதரிசிகளைக் கொன்றீர்கள்.”
31 இத்தலைமுறையில் உள்ளவர்களே, கர்த்தருடைய செய்தியில் கவனம் செலுத்துங்கள்!
“இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் வனாந்தரத்தைப்போல் இருந்திருக்கிறேனா?
நான் அவர்களுக்கு இருண்டதும் பயங்கரமானதுமான நிலமாக இருந்திருக்கிறேனா?
ஏன் என் ஜனங்கள், ‘நாங்கள் எங்கள் வழியில் போக சுதந்தரம் உள்ளவர்கள்.
கர்த்தாவே, நாங்கள் உம்மிடம் வரமாட்டோம்!’ என்றனர்.
ஏன் அவற்றை அவர்கள் சொன்னார்கள்?
32 ஒரு இளம் பெண்ணால் தன் நகைகளை மறக்க முடியாது.
ஒரு மணமகள் தனது ஆடைகளை மறக்க முடியாது.
ஆனால் என் ஜனங்கள் பலமுறை என்னை மறந்துவிட்டார்கள், அவைகள் எண்ண முடியாதவை.
33 “யூதாவே, உனக்கு நேசர்களை (பொய்த் தெய்வங்கள்) எவ்வாறு விரட்டிப்பிடிப்பது என்று தெரியும்.
நீங்கள் உண்மையில் தீமை செய்யக் கற்றிருக்கிறீர்கள்.
34 உங்கள் கைகளில் இரத்தம் இருக்கிறது!
இது ஏழைகளின் இரத்தம்; அப்பாவிகளின் இரத்தம்.
உங்கள் வீட்டை உடைத்தவர்களை நீ பிடிக்கவில்லை!
எவ்விதக் காரணமும் இல்லாமல் அவர்களைக் கொன்றாய்!
35 ஆனால் இன்றும் நீ, ‘நான் அப்பாவி.
தேவனுக்கு என்மீது கோபமில்லை’ என்று சொல்லுகிறாய்.
எனவே நானும் உன்னைப் ‘பொய்யன்’ எனக் குற்றம்சாட்டுவேன்.
ஏனென்றால் நீ, ‘நான் எவ்விதத் தப்பும் செய்யவில்லை’ என்று சொல்லுகிறாய்.
36 உன் மனதை மாற்றிக்கொள்வது உனக்கு மிக எளிதாகலாம்.
அசீரியா உன்னை அதிருப்திப்படுத்தினான், எனவே அசீரியாவை விட்டு விலகினாய்.
உதவிக்காக எகிப்திடம் போனாய்.
ஆனால் எகிப்தும் உன்னை அதிருப்திப்படுத்தும்.
37 எனவே நீ இறுதியாக எகிப்தையும் விட்டுப் போய்விடுவாய்.
உன் முகத்தை வெட்கத்திற்குள் மறைத்துக்கொள்வாய்.
நீ அந்த நாடுகளை நம்பினாய்,
ஆனால் கர்த்தர் அந்நாடுகளை வெறுத்தார், எனவே அவர்களால் உன் வெற்றிக்கு உதவ முடியாது.
3 “ஒருவன் அவனது மனைவியை விவாகரத்து செய்கிறான்.
அவள் அவனை விட்டு விலகுகிறாள்.
அவள் இன்னொருவனை மணந்துகொள்கிறாள்.
அவனால் அவனது மனைவியிடம் மீண்டும் வர முடியுமா? இல்லை!
அவன் அந்தப் பெண்ணிடம் மீண்டும் போனால் பிறகு அந்நாடு ‘அழுக்காகி’ விடும்.
யூதாவே, பல நேசரோடே (பொய்த் தெய்வங்களோடு) நீ ஒரு வேசியைப்போன்று நடந்தாய்.
இப்போது நீ என்னிடம் திரும்பி வா!”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
2 “யூதாவே, மலை உச்சிமீது கண்களை ஏறெடுத்துப் பார்.
உன் நேசர்களோடு (பொய்த் தெய்வங்கள்) பாலின உறவுகொள்ளாத இடம் ஏதாவது இருக்கிறதா?
ஒரு அரபியன் பாலைவனத்தில் காத்திருப்பதுபோன்று நீ சாலை ஓரத்தில்,
உன் நேசர்களுக்காகக் காத்திருந்தாய்.
நீ இந்த நாட்டை ‘அசுத்தம்’ பண்ணிவிட்டாய்! இது எப்படி?
நீ பல தீயச் செயல்களைச் செய்தாய்.
எனக்கு விசுவாசமற்றவளாக இருந்தாய்.
3 நீ பாவம் செய்தாய்.
எனவே மழை பெய்யவில்லை.
மழைகாலத்திலும் மழை பெய்யவில்லை.
ஆனால் இன்னும் நீ வெட்கப்பட மறுக்கிறாய்.
ஒரு வேசி வெட்கப்பட மறுக்கும்போது அவளின் முகம்போன்று,
உன் முகத்தின் தோற்றம் இருக்கிறது.
நீ செய்தவற்றுக்காக, வெட்கப்பட மறுக்கிறாய்.
4 ஆனால் இப்போது என்னை நீ ‘தந்தையே’ என்றழைக்கிறாய்.
‘நான் சிறுவனாக இருந்த போதிலிருந்தே நீர் எனது நண்பனாக இருந்தீர்’ என்று கூறுகிறாய்.
5 ‘தேவன் எப்பொழுதும் என்மீது கோபங்கொள்வதில்லை.
தேவனுடைய கோபம் எப்பொழுதும் தொடராது’
என்றும் கூறுகிறாய்.
“யூதாவே, நீ அவற்றைக் கூறுகிறாய்.
ஆனால் நீ உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தீமையைச் செய்கிறாய்.”
இரண்டு தீய சகோதரிகள்: இஸ்ரவேல் மற்றும் யூதா
6 யோசியா அரசன் யூதா நாட்டை ஆண்டுக்கொண்டிருந்த காலத்தில், கர்த்தர் என்னோடு பேசினார். அவர், “எரேமியா, இஸ்ரவேல் செய்த தீமைகளை நீ பார்த்தாய். எவ்வாறு அவள் எனக்கு விசுவாசமில்லாமல் நடந்துகொண்டாள், என்பதை நீ அறிவாய். ஒவ்வொரு மலை உச்சியின் மேலும் பச்சை மரங்களின் கீழும், விக்கிரகங்களோடும், சோரம் போய் அவள் பாவம் செய்தாள். 7 நான் எனக்குள்ளே, ‘இஸ்ரவேல் தீயவற்றையெல்லாம் செய்து முடித்த பிறகு, என்னிடம் திரும்பி வருவாள்’ என்றேன், ஆனால் அவள் என்னிடம் திரும்பி வரவில்லை. இஸ்ரவேலின் விசுவாசமில்லாத சகோதரியான யூதா, அவள் என்ன செய்தாள் என்று பார்த்தாள். 8 இஸ்ரவேல் விசுவாசம் இல்லாமல் போனது. நான் ஏன் அவளை அனுப்பினேன், என்று இஸ்ரவேல் அறிந்தது. யூதா சோரமாகிய பாவத்தைச் செய்ததால், நான் அவளை விவாகரத்து செய்துவிட்டேன் என்று இஸ்ரவேல் அறிந்துகொண்டது. ஆனால் அது அவளது விசுவாசமற்ற சகோதரியைப் பயப்படுத்தவில்லை. யூதா பயப்படவில்லை. யூதா வெளியே போய், வேசியைப்போன்று நடித்தாள். 9 யூதா கவலைப்படாமல், அவள் வேசியைப் போன்று நடித்துக்கொண்டிருந்தாள். எனவே அவள் தன் நாட்டை ‘அசுத்தம்’ ஆக்கிவிட்டாள். கல்லாலும் மரத்தாலும் ஆன விக்கிரகங்களைத் தொழுதுகொள்வதின் மூலம் அவள் சோரமாகிய பாவத்தைச் செய்தாள். 10 இஸ்ரவேலின் விசுவாச மற்ற சகோதரி (யூதா) என்னிடம் முழுமனதோடு திரும்பி வரவில்லை. அவள் என்னிடம் திரும்பி வந்ததாக நடித்தாள்” என்று சொல்லுகிறார்.
11 கர்த்தர் என்னிடம் சொன்னதாவது, “இஸ்ரவேல் என்னிடம் விசுவாசமாக இருக்கவில்லை. ஆனால் விசுவாசமற்ற யூதாவைவிட அவளுக்கு சிறந்த காரணங்கள் இருந்தன. 12 எரேமியா, வடக்குத் திசையைப் பார்த்து இச்செய்தியைக் கூறு:
“‘விசுவாசமற்ற இஸ்ரவேல் ஜனங்களே திரும்பி வாருங்கள்’
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
‘நான் உங்கள் மேலுள்ள கோபத்தைக் காட்டுவதில்லை.
நான் இரக்கம் உள்ளவர்’ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
‘நான் என்றென்றும் உங்கள்மேல்
கோபங்கொள்ளமாட்டேன்.
13 ஆனால் நீ இதுவரை செய்த உன் பாவத்தை ஒப்புக்கொள்ளவேண்டும்.
நீ உனது தேவனாகிய கர்த்தருக்கு எதிராகத் திரும்பினாய்,
அதுவே உன் பாவம், மற்ற நாடுகளிலிருந்து வந்த ஜனங்களின் விக்கிரகங்களை நீ தொழுதுகொண்டாய்.
ஒவ்வொரு பச்சையான மரத்தின் அடியிலும் உள்ள விக்கிரகங்களைத் தொழுதுகொண்டாய்.
நீ எனக்கு அடிபணியவில்லை’”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
14 “ஜனங்களாகிய நீங்கள் விசுவாசமற்றவர்கள். ஆனால் என்னிடம் திரும்பி வாருங்கள்!” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
“நான் உனது ஆண்டவர். நான் ஒவ்வொரு நகரத்திலிருந்து ஒருவனையும், ஒவ்வொரு குடும்பத்திலிருந்து இரண்டுபேரையும் எடுத்து சீயோனுக்குக் கொண்டுவருவேன். 15 பிறகு நான் உங்களுக்குப் புதிய அரசர்களைத் தருவேன். அந்த அரசர்கள் எனக்கு விசுவாசமாக இருப்பார்கள். உங்களை அவர்கள் அறிவோடும் கூர்ந்த உணர்வோடும் வழிநடத்திச் செல்வார்கள். 16 அந்த நாட்களில், இந்த நாட்டில் நீங்களே மிகுதியாக இருப்பீர்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அந்த நேரத்தில் ஜனங்கள், “நான் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி எங்களோடு இருந்ததை நினைக்கிறேன், என்று சொல்லமாட்டார்கள். அவர்கள் ஒருபோதும் இன்னொரு முறை பரிசுத்த பெட்டியை நினைவுகூரமாட்டார்கள். அவர்கள் எப்பொழுதும் பரிசுத்த பெட்டியைச் செப்பனிடுவதுமில்லை. 17 அந்நேரத்தில், எருசலேம் நகரம் ‘கர்த்தருடைய சிங்காசனம்’ என்று அழைக்கப்படும். எல்லா நாடுகளும் எருசலேம் நகரத்தில் சேர்ந்து கர்த்தருடைய நாமத்திற்கு மகிமைதரக் கூடுவார்கள். அவர்கள் இனிமேல் தங்களது பொல்லாங்கான கடின இதயம் சொல்வதுபோன்று நடக்கமாட்டார்கள். 18 அந்த நாட்களில், யூதாவின் குடும்பம், இஸ்ரவேல் குடும்பத்தோடு சேரும். அவர்கள் வடக்கு நாட்டிலிருந்து வந்து கூடுவார்கள். நான் அவர்களது முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டிற்கு அவர்கள் வருவார்கள்.
19 “கர்த்தராகிய நான் எனக்குள்ளே கூறினேன்,
“நான் உங்களை எனது சொந்தப் பிள்ளைகளைப் போன்று நடத்த விரும்புகிறேன்.
நான் உங்களுக்கு ஒரு சுதந்தரமான நாட்டைக் கொடுக்க விரும்புகிறேன்.
மற்ற நாடுகளைவிட இனிமையான நாட்டைத் தர விரும்புகிறேன்,
நீ என்னை ‘தந்தையே’ என்று அழைப்பாய் என எண்ணினேன்.
நீ என்னை எப்பொழுதும் பின்பற்றுவாய் என எண்ணினேன்.
20 ஆனால் நீ, தன் கணவனுக்கு, நம்பிக்கையற்ற ஒரு பெண்ணைப்போன்று இருக்கிறாய்.
இஸ்ரவேல் குடும்பமே நீ என்மீது விசுவாசம் இல்லாமல் இருக்கிறாய்!”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
21 நீ மலைகளின் மேல் அழுகையைக் கேட்க முடியும்.
இஸ்ரவேல் ஜனங்கள் இரக்கத்திற்காக அழுதுகொண்டும் ஜெபித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.
அவர்கள் மிகவும் கெட்டவர்களானார்கள்.
அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்தனர்.
22 கர்த்தர் மேலும் இவ்வாறு சொன்னார்:
“இஸ்ரவேல் ஜனங்களே, நீங்கள் என்மீது விசுவாசம் இல்லாமல் உள்ளீர்கள்.
ஆனால், என்னிடம் திரும்பி வாருங்கள்!
என்னிடம் விசுவாசம் இல்லாமல் போனதற்கு
நான் உங்களை மன்னிப்பேன்.
திரும்பி வாருங்கள்.”
அதற்கு ஜனங்கள், “ஆம், நாங்கள் உம்மிடம் வருவோம்.
நீரே எங்களது தேவனாகிய கர்த்தர்.
23 மலையின் மேலுள்ள விக்கிரகங்களைத் தொழுதுகொள்வது, முட்டாள்தனம்.
மலையின் மேல் கேட்கும் விருந்து கேளிக்கைகளின் பேரொலிகள் எல்லாம் தவறானவை.
நிச்சயமாக இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவது
நமது தேவனாகிய கர்த்தரிடமிருந்தே வருகிறது.
24 அந்தப் பயங்கரமான பாகால் என்னும் பொய்த் தெய்வம்,
எங்கள் தந்தைக்கு சொந்தமானவற்றைத் தின்றது.
நாங்கள் சிறுவர்களாக இருந்தது முதல் இது நடக்கிறது.
அந்தப் பயங்கரமான பொய்த் தெய்வங்கள்
எங்கள் தந்தைகளின் ஆடுகளையும் மாடுகளையும்,
அவர்களின் மகன்களையும், மகள்களையும், எடுத்துக்கொண்டது.
25 எங்களது வெட்கத்தில் நாங்கள் படுத்துக்கிடப்போம்,
எங்களது அவமானத்தை ஒரு போர்வையைப்போல் மூடிக்கொள்ள விடுங்கள்.
எங்களது தேவனாகிய கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறோம்.
நாங்களும், எங்கள் தந்தைகளும், பாவம் செய்திருக்கிறோம்.
நாங்கள் சிறுவர்களாக இருந்த நாள் முதலாய்,
எங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை” என்று சொல்ல வேண்டும்.
4 “இஸ்ரவேலே, நீ திரும்பி வர வேண்டுமென்று விரும்பினால் என்னிடம் திரும்பி வா.
உனது விக்கிரகங்களைத் தூர எறி.
என்னை விட்டுத் தூரமாக அலையாதே.
2 நீ அவற்றைச் செய்தால்,
பிறகு நீ எனது நாமத்தைப் பயன்படுத்தி, வாக்குகொடுக்க வல்லமை பெறுவாய்,
‘கர்த்தர் வாழ்கிறதுபோல’
என்று நீ சொல்லும் வல்லமை பெறுவாய்.
அந்த வார்த்தைகளை உண்மையோடும்,
நியாயத்தோடும், நீதியோடும், பயன்படுத்தும் வல்லமைபெறுவாய்:
நீ இவற்றைச் செய்தால்,
பிறகு கர்த்தரால் தேசங்கள் ஆசீர்வதிக்கப்படும்.
அவர்கள் கர்த்தர் செய்திருக்கிறவற்றைப்பற்றி,
மேன்மை பாரட்டுவார்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
3 எருசலேம் மற்றும் யூதாவின் மனிதருக்கு, கர்த்தர் சொல்லுகிறது இதுதான்:
“உங்கள் வயல்கள் உழப்படவில்லை,
அவற்றை உழுங்கள்,
முட்களுக்கு இடையில் விதைகளை தூவாதீர்கள்.
4 கர்த்தருடைய ஜனங்களாயிருங்கள்.
உங்கள் இதயங்களை மாற்றுங்கள்!
யூதா ஜனங்களே, எருசலேம் ஜனங்களே!
நீங்கள் மாற்றாவிட்டால் பிறகு நான் மிகவும் கோபம் அடைவேன்.
எனது கோபம் நெருப்பைப் போன்று வேகமாகப் பரவும்.
எனது கோபம் உங்களை எரித்துப்போடும்.
எவராலும் அந்த நெருப்பை அணைக்கமுடியாது.
இது ஏன் நிகழும் என்றால், நீங்கள் தீங்கான செயல்கள் செய்திருக்கிறீர்கள்.”
வடக்கிலிருந்து வரும் அழிவு
5 “யூதா ஜனங்களுக்கு இந்தச் செய்தியைக் கொடுங்கள்.
எருசலேம் நகரத்திலுள்ள ஒவ்வொருவரிடமும் சொல்,
‘நாடு முழுவதும் எக்காளம் ஊதுங்கள்.’ உரக்கச் சத்தமிட்டு,
‘ஒன்றுசேர்ந்து வாருங்கள்! நாம் அனைவரும் பாதுகாப்புக்காக உறுதியான நகரங்களுக்குத் தப்புவோம்.’ என்று சொல்லுங்கள்.
6 சீயோனை நோக்கி அடையாளக் கொடியை ஏற்றுங்கள்.
உங்கள் வாழ்வுக்காக ஓடுங்கள்! காத்திருக்காதீர்கள்.
இதனைச் செய்யுங்கள்.
ஏனென்றால், நான் வடக்கிலிருந்து பேரழிவைக் கொண்டு வந்துக்கொண்டிருக்கிறேன்.
நான் பயங்கரமான பேரழிவைக் கொண்டுவருகிறேன்.”
7 ஒரு சிங்கம் அதன் குகையை விட்டு வெளியே வந்திருக்கிறது.
தேசங்களை அழிப்பவன் நடைபோடத் தொடங்கியிருக்கிறான்.
அவன் உங்கள் நாட்டை அழிக்க அவனது வீட்டை விட்டு புறப்பட்டிருக்கிறான்.
உங்கள் நகரங்கள் அழிக்கப்படும்,
அவற்றில் ஒருவன் கூட உயிர்வாழும்படி விடப்படமாட்டான்.
8 எனவே, சாக்குத் துணியைக் கட்டிக்கொள்ளுங்கள்.
சத்தமாய் அழுது புலம்புங்கள். ஏனென்றால், கர்த்தர் நம்மிடம் கோபமாக இருக்கிறார்.
9 கர்த்தர் இவ்வாறு சொல்கிறார், “இது நிகழும் காலத்தில் அரசனும், அவனது அதிகாரிகளும், தம் தைரியத்தை இழப்பார்கள்.
ஆசாரியர்கள் அஞ்சுவார்கள், தீர்க்கதரிசிகள் அதிர்ச்சியடைவார்கள்.”
10 பிறகு எரேமியாவாகிய நான், “எனது கர்த்தராகிய ஆண்டவரே! நீர் உண்மையிலேயே எருசலேம் மற்றும் யூதா ஜனங்களிடம் தந்திரம் செய்திருக்கிறீர். நீர் அவர்களிடம், ‘நீங்கள் சமாதானம் பெறுவீர்கள்’ எனச் சொன்னீர், ஆனால் இப்போது அவர்களின் கழுத்துக்கு நேராக வாள் குறிபார்த்துக் கொண்டிருக்கிறது” என்று சொன்னேன்.
11 அந்த நேரத்தில், யூதா மற்றும் எருசலேம் ஜனங்களுக்கு ஒரு செய்தி கொடுக்கப்படும்.
“வறண்ட மலைகளிலிருந்து,
ஒரு சூடான காற்று வீசுகிறது.
இது எனது ஜனங்களிடம் வனாந்தரத்திலிருந்து வருகிறது.
இது, உழவர்கள் தமது தானியங்களைப் பதரிலிருந்து,
பிரித்தெடுக்கப் பயன்படுத்தும் காற்றைப் போன்றில்லை.
12 இது அதனைவிட பலமுடையதாக இருக்கிறது.
இது என்னிடமிருந்து வருகிறது.
இப்பொழுது, யூதாவின் ஜனங்களுக்கு எதிரான எனது தீர்ப்பை நான் அறிவிப்பேன்.”
13 பாருங்கள்! பகைவன் மேகத்தைப்போன்று எழும்பியிருக்கிறான்.
அவனது இரதங்கள் புயல் காற்றைப்போன்று தோன்றுகின்றன.
அவனது குதிரைகள் கழுகுகளைவிட வேகமுடையதாயுள்ளன.
இது நமக்கு மிகவும் கேடாயிருக்கும்.
நாம் அழிக்கப்படுகிறோம்.
14 எருசலேம் ஜனங்களே, உங்கள் இருதயங்களிலிருந்து, தீமையானவற்றைக் கழுவுங்கள்.
உங்கள், இருதயங்களைச் சுத்தப்படுத்துங்கள்.
அதனால் காப்பாற்றப்படுவீர்கள்.
தீய திட்டங்களைத் தீட்டுவதைத் தொடராதீர்கள்.
15 கவனியுங்கள்! தாண் நாட்டிலிருந்து வந்த
தூதுவனின் குரல் பேசிக்கொண்டிருக்கிறது.
எப்பிராயீம், என்ற மலை நாட்டிலிருந்து
ஒருவன் கெட்ட செய்திகளைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறான்.
16 “இந்த நாட்டு ஜனங்களிடம், இதனைச் சொல்லுங்கள்.
எருசலேமிலுள்ள ஜனங்களிடம் இந்தச் செய்தியைப் பரப்புங்கள்.
பகைவர்கள் தூர நாட்டிலிருந்து வந்துகொண்டிருக்கிறார்கள்.
அந்தப் பகைவர்கள், யூதாவின் நகரங்களுக்கு எதிராகப் போர் செய்வதுப்பற்றி
சத்தமிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
17 எருசலேமைச் சுற்றிலும் பகைவர் வயலைக் காவல் செய்யும் மனிதனைப்போன்று,
வளைத்துக்கொண்டனர்.
யூதாவே, நீ எனக்கு எதிராகத் திரும்பிவிட்டாய்!
எனவே, உனக்கு எதிராகப் பகைவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18 “நீங்கள் வாழ்ந்த வழியும் நீங்கள் செய்த செயல்களும்,
உங்களுக்கு இந்தத் தொல்லையைக் கொண்டுவந்துள்ளது,
உங்களது தீமையானது, உங்கள் வாழ்க்கையைக் கடினமாக்கியிருக்கிறது.
உங்கள் தீமை கொடிய ஆபத்தைக் கொண்டுவந்தது.
இது உங்கள் இதயத்தை ஆழமாகக் காயப்படுத்திவிட்டது.”
எரேமியாவின் அழுகை
19 எனது துக்கமும், கவலையும், எனது வயிற்றைத் தாக்கிக்கொண்டிருக்கிறது.
நான் வலியால் வேதனையடைந்துவிட்டேன்.
நான் மிகவும் பயப்படுகிறேன்.
எனது இதயம் எனக்குள் வேதனைப்படுகிறது.
என்னால் சும்மா இருக்கமுடியாது, ஏனென்றால் நான் எக்காள சத்தத்தைக் கேட்டிருக்கிறேன்,
எக்காளமானது போருக்காகப் படையை அழைத்துக்கொண்டிருக்கிறது.
20 அழிவைத் தொடர்ந்து பேரழிவு வருகிறது.
நாடு முழுவதும் அழிக்கப்படுகிறது.
எனது கூடாரங்கள் திடீரென்று அழிக்கப்படுகின்றன.
எனது திரைச் சீலைகள் கிழிக்கப்படுகின்றன.
21 என் கர்த்தாவே எவ்வளவு காலமாக நான் போர்க் கொடிகளைப் பார்க்கவேண்டும்!
எவ்வளவு காலமாக நான், போர் எக்காளத்தைக் கேட்க வேண்டும்?
22 தேவன், “என்னுடைய ஜனங்கள் அறிவுகெட்டவர்கள்.
அவர்கள் என்னை அறிந்துகொள்ளவில்லை.
அவர்கள் அறிவில்லாதப் பிள்ளைகள்.
அவர்கள் புரிந்துகொள்வதில்லை.
அவர்கள் தீமை செய்வதில் வல்லவர்கள்.
ஆனால் அவர்களுக்கு நன்மையை எப்படி செய்யவேண்டும் என்று தெரியாது” என்று சொன்னார்.
அழிவு வந்துகொண்டிருக்கிறது
23 நான் பூமியை நோக்கிப் பார்த்தேன்.
பூமி வெறுமையாய் இருந்தது.
பூமியின்மேல் ஒன்றுமில்லாமலிருந்தது.
நான் வானத்தை நோக்கிப் பார்த்தேன்.
அதன் ஒளி போய்விட்டது.
24 நான் மலைகளைப் பார்த்தேன்,
அவை நடுங்கிக்கொண்டிருந்தன.
மலைகள் எல்லாம் அசைந்தன.
25 நான் பார்க்கும்போது அங்கே ஜனங்கள் இல்லை.
வானத்துப் பறவைகள் எல்லாம் பறந்து போய்விட்டன.
26 நான் பார்க்கும்போது நல்ல நிலம் வனாந்தரமாகிவிட்டிருந்தது.
அந்த நாட்டிலுள்ள நகரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டன.
கர்த்தர் இதனைச் செய்தார்.
கர்த்தரும் அவரது பெருங்கோபமும்தான் இதனைச் செய்தது.
27 “தேசம் முழுவதும் அழிக்கப்படும்
(ஆனால் நான் நாட்டை முழுவதுமாக அழிக்கமாட்டேன்).
28 எனவே, இந்த நாட்டிலுள்ள ஜனங்கள் மரித்துப்போன ஜனங்களுக்காகக் கதறுவார்கள்.
வானம் இருண்டுப்போகும் நான் சொல்லியிருக்கிறேன்.
அதனை மாற்றமாட்டேன்.
நான் ஏற்கனவே முடிவு செய்திருக்கிறேன்.
நான் எனது மனதை மாற்றமாட்டேன்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
29 யூதாவின் ஜனங்கள் குதிரை வீரர்களின் சத்தத்தையும்
வில் வீரர்களின் சத்தத்தையும் கேட்பார்கள்.
ஜனங்கள் ஓடிப்போவார்கள்!
சில ஜனங்கள் குகைகளுக்குள் ஒளிந்துக்கொள்வார்கள்.
சில ஜனங்கள் புதர்களுக்குள் ஒளிந்துக்கொள்வார்கள்.
சில ஜனங்கள் பாறைகளுக்கு மேல் ஏறிக்கொள்வார்கள்.
யூதா நகரங்கள் எல்லாம் காலியாகிப் போகும்.
அவற்றில் எவரும் வாழமாட்டார்கள்.
30 யூதாவே! நீ அழிக்கப்பட்டிருக்கிறாய்.
எனவே, நீ இப்பொழுது என்ன செய்துகொண்டிருக்கிறாய்?
நீ அழகான சிவப்பு ஆடைகளை,
ஏன் அணிந்துக்கொண்டிருக்கிறாய்?
நீ தங்க நகைகளை ஏன் அணிந்துகொண்டிருக்கிறாய்?
நீ கண்ணுக்கு மையிட்டு ஏன் அழகுபடுத்திக்கொண்டிருக்கிறாய்.
நீ உன்னை அழகு செய்கிறாய்.
ஆனால் இது வீணாகும்.
உனது நேசர்கள் உன்னை வெறுக்கின்றனர்.
அவர்கள் உன்னைக் கொலை செய்ய முயல்கின்றனர்.
31 பிரசவ வேதனைப்படும் பெண்ணின் குரலைப் போன்ற கதறலைக் கேட்கிறேன்.
அது முதல் குழந்தையைப் பிரசவிக்கும் பெண்ணின் கதறல் போன்றிருந்தது. சீயோனின் மகளின் கதறலாய் இது இருக்கிறது.
அவள் தனது கைகளை விரித்து,
“ஓ! நான் எதிர்த்து போரிட முடியாமல், மயங்கி விழப்போகிறேன்.
என்னைச் சுற்றிலும் கொலைக்காரர்கள் இருக்கிறார்கள்!” என்று ஜெபிக்கிறாள்.
யூதாவின் ஜனங்களின் தீமை
5 “எருசலேம் தெருக்களில் நடவுங்கள். சுற்றிப் பார்த்து இவற்றைப்பற்றி எண்ணுங்கள். நகரத்தின் பொது சதுக்கங்களைத் தேடுங்கள். உங்களால் ஒரு நல்ல மனிதனைக் கண்டுபிடிக்க முடியுமானால் பாருங்கள். அவன் நேர்மையான காரியங்களைச் செய்கிறவனாகவும் உண்மையைத் தேடுகிறவனாகவும் இருக்கவேண்டும். உங்களால் ஒரு நல்ல மனிதனைக் கண்டுபிடிக்க முடியுமானால் நான் எருசலேமை மன்னிப்பேன்! 2 ஜனங்கள் வாக்குறுதிச் செய்து ‘ஜீவனுள்ள கர்த்தரைக் கொண்டுசொல்லுகிறோம்’ என்கிறார்கள், ஆனால் நடைமுறையில் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றும் எண்ணம் அவர்களிடம் இல்லை” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
3 கர்த்தாவே! உமது ஜனங்கள் உமக்கு உண்மையாக இருக்கவேண்டும்
என்று நீர் விரும்புவதை நான் அறிகிறேன்.
நீர் யூதா ஜனங்களைத் தாக்குகிறீர்.
ஆனால், அவர்கள் எவ்வித வலியையும் உணர்ந்துக்கொள்வதில்லை.
அவர்களை நீர் அழித்தீர்.
ஆனால் அவர்கள் தங்கள் பாடத்தைக் கற்றுக்கொள்ளவில்லை.
அவர்கள் மிகவும் பிடிவாதமாகிவிட்டனர்.
அவர்கள் தாம் செய்த கெட்ட செயல்களுக்கு, வருத்தப்பட மறுத்தனர்.
4 ஆனால் நான் (எரேமியா) எனக்குள் சொன்னேன்.
“ஏழைகள் மட்டுமே முட்டாளாக இருக்க வேண்டும்.
கர்த்தருடைய வழியை ஏழை ஜனங்கள் கற்றுக்கொண்டிருக்கவில்லை.
ஏழை ஜனங்கள் அவர்களது தேவனுடைய போதனைகளை அறியாமல் இருக்கிறார்கள்.
5 ஆகவே நான் யூதாவின் தலைவர்களிடம் போவேன்.
நான் அவர்களோடு பேசுவேன்.
அந்தத் தலைவர்களுக்கு நிச்சயமாக கர்த்தருடைய வழி தெரியும்.
அவர்களுக்கு தமது தேவனுடைய சட்டங்கள் தெரியும், என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.”
ஆனால், அந்தத் தலைவர்கள், அனைவரும் கர்த்தருக்கு
சேவைசெய்வதிலிருந்து விடுபட ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.
6 அவர்கள் தேவனுக்கு எதிராகத் திரும்பினார்கள்.
எனவே காட்டிலிருந்து ஒரு சிங்கம் வந்து அவர்களைத் தாக்கும்.
வனாந்தரத்திலிருந்து ஒரு நரி வந்து அவர்களைக் கொல்லும்.
அவர்களின் நகரங்களுக்கு அருகில், சிறுத்தை ஒளிந்துக்கொண்டிருக்கிறது.
நகரத்திலிருந்து வெளியே வரும் எவரையும்
அந்த சிறுத்தை துண்டுத் துண்டாகக் கிழித்துப்போடும்.
இது நிகழும் ஏனென்றால், யூதா ஜனங்கள் மீண்டும், மீண்டும், பாவம் செய்திருக்கிறார்கள்.
அவர்கள் பலமுறை கர்த்தரிடமிருந்து விலகி, அலைந்திருக்கிறார்கள்.
7 “யூதாவே! உன்னை நான் எதற்காக மன்னிக்க வேண்டும்? என்று ஒரு நல்ல காரணத்தை எனக்குக் கொடு,
உனது பிள்ளைகள் என்னை விட்டுவிட்டார்கள்.
அவர்கள் விக்கிரகங்களுக்கு, வாக்குறுதி செய்தனர்.
அந்த விக்கிரகங்கள் உண்மையில் தெய்வங்கள் அல்ல!
நான் உனது பிள்ளைகளுக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்தேன்.
ஆனால் அவர்கள் இன்னும் எனக்கு உண்மையில்லாதவர்களாக இருக்கிறார்கள்!
அவர்கள் வேசிகளோடு மிகுதியான காலத்தைச் செலவழிக்கிறார்கள்.
8 அவர்கள் குதிரைகளைப்போன்று இருக்கிறார்கள்.
அவர்கள் மிகுதியாக உணவு உண்கின்றனர்.
துணையோடு உறவுகொள்ள தயாராகின்றனர்.
அவர்கள் அயலானின் மனைவியை இச்சையோடு அழைக்கிற குதிரைகளைப்போன்று, இருக்கிறார்கள்.
9 இவற்றைச் செய்வதற்காக யூதா ஜனங்களை நான் தண்டிக்கவேண்டாமா?”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
“ஆம்! இதுபோல வாழ்கிற ஒரு நாட்டை நான் தண்டிக்கவேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நான் அவர்களுக்கு ஏற்ற தண்டனையையே கொடுப்பேன்.
10 “யூதாவின் திராட்சைத் தோட்ட வரிசைகளுக்குச் செல்லுங்கள்,
கொடிகளை வெட்டிப் போடுங்கள், (ஆனால் முழுவதுமாக அவற்றை அழிக்காதீர்கள்)
அவற்றின் கிளைகளையெல்லாம் வெட்டுங்கள்.
ஏனென்றால், இந்தக் கிளைகள் கர்த்தருக்கு உரிமை உடையவை அல்ல.
11 ஒவ்வொரு வழியிலும் இஸ்ரவேல் குடும்பமும் யூதா குடும்பமும்
எனக்கு உண்மையற்றவர்களாக இருந்திருக்கிறார்கள்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
12 “அந்த ஜனங்கள் கர்த்தரைப்பற்றி பொய்யுரைத்திருக்கின்றனர்.
அவர்கள், ‘கர்த்தர் எங்களுக்கு எதுவும் செய்யமாட்டார்.
தீமை எதுவும் நமக்கு ஏற்படாது.
ஒரு படை நம்மைத் தாக்குவதை நாம் எப்பொழுதும் காண்பதில்லை.
நாம் எப்பொழுதும் பட்டினியாக இருப்பதில்லை.’
13 கள்ளத்தீர்க்கதரிசிகள் வெறுமையான காற்றைப் போன்றவர்கள்.
தேவனுடைய வார்த்தை அவர்களில் இல்லை.
அவர்களுக்குத் தீயவை ஏற்படும்.”
14 அந்த ஜனங்கள், “நான் அவர்களைத் தண்டிக்கமாட்டேன் என்று கூறினார்கள்.
ஆகையால் எரேமியாவே, நான் உனக்குக் கொடுத்த வார்த்தைகள் நெருப்பைப் போன்றிருக்கும்.
அந்த ஜனங்கள் மரத்துண்டுகளைப் போன்றிருப்பார்கள்.
அந்த நெருப்பு அவர்களை முழுமையாக எரித்துப் போடும்!”
என்று சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
15 இஸ்ரவேல் குடும்பத்தாரே!
“நான் உங்களைத் தாக்குவதற்காகத், தொலை தூரத்திலிருந்து, விரைவில் ஒரு தேசத்தைக் கொண்டுவருவேன்.
அது ஒரு வல்லமை மிக்க ஜனமாக இருக்கிறது.
இது பழமையான தேசமாக இருக்கிறது.
அந்தத் தேசத்தின் ஜனங்கள் நீங்கள் அறியாத ஒரு மொழியைப் பேசுகிறார்கள்.
அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியாது.
16 அவர்களின் அம்புப் பைகள் திறந்த சவக்குழிகளைப் போன்றிருக்கும்.
அவர்களது ஆண்கள் எல்லாம் வலிமையான வீரர்களாக இருக்கிறார்கள்.
17 நீங்கள் சேகரித்து வைத்த விளைச்சலை எல்லாம் அந்தப் படைவீரர்கள் உண்பார்கள்.
உங்கள் உணவு முழுவதையும் அவர்கள் உண்பார்கள்.
அவர்கள் உங்களது மகன்களையும் மகள்களையும் உண்பார்கள் (அழிப்பார்கள்).
அவர்கள் உங்கள் ஆடுகளையும் உங்கள் மாடுகளையும் உண்பார்கள்.
அவர்கள் உங்கள் திராட்சைப் பழங்களையும், அத்திப் பழங்களையும் உண்பார்கள்.
அவர்கள் தமது வாள்களால் உங்களது பலமான நகரங்களை அழிப்பார்கள்.
நீங்கள் நம்பிக்கை வைத்த உங்களது பலமான நகரங்களை அவர்கள் அழிப்பார்கள்!”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18 “ஆனால் அந்தப் பயங்கரமான நாட்கள் வரும்போது யூதாவே, நான் உன்னை முழுவதுமாக அழிக்கமாட்டேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். 19 “யூதாவிலுள்ள ஜனங்கள் உன்னிடம், ‘நமது தேவனாகிய கர்த்தர் இந்தத் தீயச்செயல்களை நமக்கு ஏன் செய்திருக்கிறார்?’ என்று கேட்டால், நீ அவர்களிடம், ‘யூதாவின் ஜனங்களாகிய நீங்கள் கர்த்தரை விட்டு விலகினீர்கள். உங்கள் சொந்த நாட்டில், அந்நிய நாட்டு விக்கிரகங்களுக்கு சேவை செய்திருக்கிறீர்கள். நீங்கள் அச்செயல்களைச் செய்தபடியால், இப்பொழுதும், உங்களுக்கு சொந்தமில்லாத நாட்டில் அந்நியருக்கு சேவைசெய்வீர்கள்’” என்று சொல்.
20 கர்த்தர் என்னிடம், “யாக்கோபின் குடும்பத்தாரையும்,
யூதா நாட்டினரையும் நோக்கி:
21 நீங்கள் மதிகேடர்கள்,
உங்களுக்குக் கண்கள் இருக்கின்றன,
ஆனால் நீங்கள் பார்க்கிறதில்லை!
உங்களுக்குக் காதுகள் இருக்கின்றன ஆனால் நீங்கள் கேட்கிறதில்லை!
22 நிச்சயமாக நீங்கள் எனக்குப் பயப்படுகிறீர்கள்” என சொல் என்றார்.
“எனக்கு முன்னால் நீங்கள் பயத்தால் நடுங்கவேண்டும்.
கடலுக்குக் கரைகளை எல்லையாக உண்டாக்கியவர் நானே.
இந்த வழியில் என்றென்றைக்கும் தண்ணீரானது அதனுடைய இடத்தில் இருக்குமாறு செய்தேன்.
கரையை அலைகள் தாக்கலாம்.
ஆனால் அவை அதனை அழிக்க முடியாது.
அலைகள் இரைந்துக்கொண்டு வரலாம்.
ஆனால் அது கரையைக் கடந்து போக முடியாது.
23 மறுபடியும் யூதாவின் ஜனங்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள்.
எனக்கு எதிராகத் திரும்ப அவர்கள் எப்பொழுதும் திட்டம் தீட்டுகிறார்கள்.
அவர்கள் என்னிடமிருந்து திரும்பி என்னை விட்டு விலகிவிட்டார்கள்.
24 யூதாவின் ஜனங்கள் தங்களுக்குள் இவ்வாறு சொல்லமாட்டார்கள்.
‘எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு பயப்படுவோம், மரியாதை செய்வோம்.
நமக்கு அவர் சரியான காலங்களில் மழையையும், முன்மாரியையும், பின்மாரியையும் கொடுக்கிறார்.
நாம் சரியான காலத்தில் அறுவடையைப் பெறுவோம்’ என்று அவர் உறுதி செய்கிறார்.
25 யூதாவின் ஜனங்களே! நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள்.
எனவே மழையும் அறுவடையும் வரவில்லை.
கர்த்தரிடமிருந்து வரும் அந்த நன்மையை அனுபவிக்க உங்கள் பாவங்கள் தடுத்துவிட்டன.
26 என்னுடைய ஜனங்களிடையில் கெட்ட மனிதரும் இருக்கின்றனர்.
அந்தக் கெட்ட மனிதர்கள் பறவைகளைப் பிடிக்க வலைகளைச் செய்பவர்களை போன்றவர்கள்.
இந்த மனிதர்கள் தமது கண்ணிகளை வைப்பார்கள்.
ஆனால் அவர்கள் பறவைகளுக்குப் பதிலாக மனிதர்களைப் பிடிப்பார்கள்.
27 கூண்டுக்குள்ளே பறவைகள் இருப்பதுபோன்று,
இத்தீய ஜனங்களின் வீடுகளில் கபடங்கள் நிறைந்திருக்கும்.
அவர்களின் கபடங்கள் அவர்களை செல்வந்தர்களாகவும், வலிமையுள்ளவர்களாகவும் ஆக்கின.
28 அவர்கள் தாம் செய்த தீமைகளால் பெரிதாக வளர்ந்து கொழுத்துப்போயிருக்கிறார்கள்.
அவர்கள் செய்யும் தீமைகளுக்கு முடிவே இல்லை.
பெற்றோர்கள் இல்லாதிருக்கிற பிள்ளைகளின் வழக்கில் பரிந்து பேசுவதில்லை.
அந்த அனாதைகளுக்கு அவர்கள் உதவுவதில்லை.
ஏழை ஜனங்கள் நியாயமான தீர்ப்புப்பெற விடுவதில்லை.
29 இவற்றையெல்லாம் செய்துக்கொண்டிருக்கிற யூதாவின் ஜனங்களை நான் தண்டிக்கவேண்டுமா?”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
“இது போன்ற ஒரு தேசத்தாரை நான் தண்டிக்கவேண்டும், என்று உங்களுக்குத் தெரியும்.
அவர்களுக்குப் பொருத்தமான தண்டனைகளையே நான் தரவேண்டும்.”
30 கர்த்தர், “யூதா நாட்டிலே ஒரு பயங்கரமான
நடுங்கத்தக்க செயல் நடந்திருக்கிறது.
31 தீர்க்கதரிசிகள், பொய்களைக் கூறுகிறார்கள்.
ஆசாரியர்கள் எதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ அச்செயல்களைச் செய்வதில்லை.
என்னுடைய ஜனங்கள் இந்நிலையை விரும்புகிறார்கள்!
ஆனால், உங்கள் தண்டனை வரும்போது
நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று சொல்லுகிறார்.
பகைவர் எருசலேமை சுற்றிவளைத்தனர்
6 பென்யமீன் ஜனங்களே! உங்கள் உயிருக்காக ஓடுங்கள்.
எருசலேம் நகரத்தை விட்டுத் தூர ஓடுங்கள்!
தெக்கோவா நகரில் போர் எக்காளத்தை ஊதுங்கள்!
பெத்கேரேம் நகரில் எச்சரிக்கை கொடியை ஏற்றுங்கள்!
நீங்கள் இவற்றை செய்யுங்கள்.
ஏனென்றால், வடக்கிலிருந்து பேரழிவானது வந்துகொண்டிருக்கிறது.
பயங்கரமான பேரழிவு உங்களுக்கு வந்துகொண்டிருக்கிறது.
2 சீயோனின் மகளே, நீ ஒரு அழகான மென்மையான
பெண் போன்றுள்ளாய்.
3 மேய்ப்பர்கள் எருசலேமிற்கு வருகிறார்கள்,
அவர்கள் தம் ஆட்டு மந்தையைக் கொண்டுவருகிறார்கள்.
எருசலேமைச் சுற்றி தங்கள் கூடாரங்களை அமைத்தனர்.
ஒவ்வொரு மேய்ப்பனும், அவனது சொந்த மந்தையைக் கவனிக்கின்றனர்.
4 “எருசலேமிற்கு எதிராகப் போராடத் தயாராகுங்கள்.
எழுந்திருங்கள்! நாம் மதிய நேரத்தில் நகரத்தைத் தாக்குவோம்;
ஆனால் ஏற்கனவே தாமதமாகிவிட்டது.
மாலை நிழல் நீளமாக வளர்ந்துக்கொண்டிருக்கின்றது.
5 எனவே, புறப்படுங்கள்! இரவில் நகரத்தை நாம் தாக்குவோம்!
எருசலேமைச் சுற்றியிருக்கின்ற உறுதியான சுவர்களை அழிப்போம்.”
6 சர்வ வல்லமையுள்ள கர்த்தர்,
“எருசலேமை சுற்றியுள்ள மரங்களை வெட்டிப்போடுங்கள், அதன் சுவருக்கு எதிராக எடுசுவரை எழுப்புங்கள்.
இந்த நகரம் தண்டிக்கப்படவேண்டும்!
இந்த நகரத்தின் உட்பகுதியில் கொடுமையைத் தவிர வேறு எதுவுமில்லை.
7 ஒரு கிணறு தனது தண்ணீரைப் புதிதாக சுரக்கிறது,
இதுபோலவே எருசலேமும் தனது தீங்கை சுரக்கபண்ணுகிறது,
நகரத்திற்குள் எல்லா நேரத்திலும், கொடுமையும், வன்முறையும் நிகழ்வதை நான் கேள்விப்படுகிறேன்.
எருசலேமிற்குள் எப்பொழுதும் துன்பமும், நோயும் இருப்பதைப் பார்க்கிறேன்.
8 எருசலேமே! இந்த எச்சரிக்கையை கவனி!
நீ கவனிக்காவிட்டால், பிறகு நான் உனக்கு எனது முதுகைத் திருப்புவேன்,
உனது நாட்டை ஒரு வெறும் வனாந்தரமாக நான் செய்வேன்.
அங்கு எவரும் வாழமுடியாமல் போகும்” என்று கூறுகிறார்.
9 சர்வ வல்லமையுள்ள கர்த்தர்,
“தங்கள் தேசத்தில் விடப்பட்டிருந்த இஸ்ரவேல் ஜனங்களை ஒன்று சேருங்கள்,
நீங்கள் திராட்சைத் தோட்டத்தில் இறுதியில்
பழுத்த பழங்களை சேகரிப்பதுபோன்று
அவர்களை ஒன்று சேருங்கள்.
ஒரு வேலைக்காரன் ஒவ்வொரு திராட்சைப் பழத்தையும் பறிக்குமுன்
சோதிப்பதுபோன்று சோதியுங்கள்” என்று கூறுகிறார்.
10 நான் யாரோடு பேசுவேன்?
நான் யாரை எச்சரிக்க முடியும்?
நான் சொல்வதை யார் கேட்பார்கள்?
இஸ்ரவேல் ஜனங்கள் தம் காதுகளை மூடிக்கொண்டார்கள்.
எனவே, எனது எச்சரிக்கைகளை அவர்களால் கேட்கமுடியாது.
ஜனங்கள் கர்த்தருடைய போதனைகளை விரும்புகிறதில்லை,
அவரது செய்தியை அவர்கள் கேட்க விரும்பவில்லை.
11 ஆனால் நான், (எரேமியா) கர்த்தருடைய கோபத்தால் முழுமையாக நிறைந்திருக்கிறேன்!
நான் அதனைத் தாங்குவதில் சோர்ந்துபோனேன்.
“தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் பிள்ளைகள் மீது கர்த்தருடைய கோபத்தை ஊற்றுங்கள்.
கூடுகின்ற இளைஞர் மேல் கர்த்தருடைய கோபத்தை ஊற்றுங்கள்.
ஒரு ஆணும் அவனது மனைவியும் சேர்த்து கைபற்றப்படுவார்கள்.
வயதான ஜனங்கள் அனைவரும் கைபற்றப்படுவார்கள்.
12 அவர்களின் வீடுகள் மற்றவர்களுக்குக் கொடுக்கப்படும்.
அவர்களின் வயல்களும் மனைவிகளும் மற்றவர்களுக்குக் கொடுக்கப்படும்.
நான் என்னுடைய கையை உயர்த்தி யூதாவின் ஜனங்களைத் தண்டிப்பேன்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
13 “இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஜனங்களும் மேலும் மேலும் பணத்தை விரும்புகின்றனர்.
முக்கியத்துவம் குறைந்த ஜனங்களிலிருந்து முக்கியத்துவம் மிகுந்த ஜனங்கள்வரை அனைத்து ஜனங்களும், இதுபோலவே இருக்கின்றனர்.
தீர்க்கதரிசிகளிலிருந்து ஆசாரியர்கள்வரை, அனைத்து ஜனங்களும் பொய்களைக் கூறுகின்றனர்.
14 என்னுடைய ஜனங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும், அந்தக் காயங்களுக்குக் கட்டுப் போடவேண்டும்.
அவர்கள் சிறிய காயங்களுக்கு, சிகிச்சை செய்வதுபோன்று, அவர்கள் புண்களுக்கு சிகிச்சை செய்கின்றனர்.
‘இது சரியாக இருக்கிறது, எல்லாம் சரியாக இருக்கிறது!’
என்று கூறுகிறார்கள்.
ஆனால் அது சரியாக இல்லை!
15 தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும், தாங்கள் செய்கிற தீயச்செயல்களுக்காக வெட்கப்பட வேண்டும்.
ஆனால், அவர்கள் கொஞ்சமும் வெட்கப்படுவதில்லை.
தங்கள் பாவங்களுக்காக வெட்கப்படும் அளவிற்கு அவர்களுக்கு போதிய அறிவில்லை;
எனவே, அவர்கள் ஒவ்வொருவரும் தண்டிக்கப்படுவார்கள்.
நான் ஜனங்களைத் தண்டிக்கும்போது, அவர்கள் தரையில் வீசியெறியப்படுவார்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
16 கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்:
“வழிகளில் நின்று கவனி.
பழையசாலை எங்கே என்று கேள்.
நல்ல சாலை எங்கே என்று கேள்.
அந்தச் சாலையில் நட.
நீ செய்தால், உனக்குள் நீ ஓய்வைக் கண்டுபிடிப்பாய்.
ஆனால் நீங்களோ, ‘நாங்கள் நல்ல சாலைகளில் நடக்கமாட்டோம்!’ என்று கூறினீர்கள்.
17 உங்களை கவனிக்க காவல்காரர்களைத் தேர்ந்தெடுத்தேன்.
நான் அவர்களிடம், ‘போர் எக்காள சத்தத்தை கவனியுங்கள்’ என்று கூறினேன்.
ஆனால் அவர்களோ, ‘நாங்கள் கவனிக்கமாட்டோம்!’ என்று கூறினார்கள்.
18 எனவே, தேசத்திலுள்ளவர்களே!
கேளுங்கள் சபையே,
19 பூமியின் ஜனங்களே,
யூதா ஜனங்களுக்கு நான் பேரழிவைக் கொண்டுவருவேன்.
ஏனென்றால், அவர்கள் எல்லா தீயச்செயல்களுக்கும் திட்டமிடுகிறார்கள்.
அவர்கள் என் வார்த்தையை உதாசினப்படுத்தினார்கள்.
அந்த ஜனங்கள் என் சட்டங்களுக்கு அடிபணிய மறுத்தனர்.”
20 கர்த்தர் அவர்களிடம், “ஏன் நீங்கள் சேபா நாட்டிலுள்ள நறுமணப் பொருட்களையும்,
தொலை நாடுகளிலுள்ள சுகந்தப் பட்டைகளையும் எனக்குக் கொண்டு வருகிறீர்கள்?
உங்களது சர்வாங்கத் தகன பலிகள் எனக்கு மகிழ்ச்சியளிப்பதில்லை,
உங்களது பலிகள் எனக்கு இன்பமாயிராது” என்று கூறினார்.
21 எனவே இதுதான் கர்த்தர் கூறுவது:
“யூதாவிலுள்ள ஜனங்களுக்கு நான் சிக்கல்களை கொண்டு வருவேன்.
அவை ஜனங்களை விழச் செய்யும் கற்களைப்போன்று இருக்கும்.
தந்தைகளும் மகன்களும் ஒருவர் மேல் ஒருவர் இடறி விழுவார்கள்.
நண்பர்களும் அருகில் உள்ளவர்களும் மரித்துப்போவார்கள்.”
22 கர்த்தர் சொல்லுகிறதாவது:
“ஒரு படையானது வடக்கிலிருந்து வந்துகொண்டிருக்கிறது.
பூமியிலுள்ள, தொலைதூர இடங்களிலிருந்து ஒரு பெரிய தேசம் வந்துகொண்டிருக்கிறது.
23 வீரர்கள் வில்லையும் ஈட்டியையும் கொண்டு வருகின்றனர்.
அவர்கள் கொடுமையானவர்கள்.
அவர்களிடம் இரக்கம் இல்லை.
அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள்,
அவர்கள், குதிரைகள் மேல் சவாரி செய்து வரும்போது,
இரைகின்ற கடலைப்போன்று சத்தம் எழுப்புகிறார்கள்.
சண்டை செய்வதற்கு தயாராக அப்படை வந்துக்கொண்டிருக்கிறது.
சீயோனின் குமாரத்தியே! அந்தப் படை உங்களை தாக்கிட வந்துகொண்டிருக்கிறது.”
24 அந்தப் படையைப் பற்றியச் செய்தியைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
எங்களின் துன்ப வலையில் மாட்டிக்கொண்டதாக உணர்கிறோம்.
பயத்தினால் ஒன்றும் செய்ய முடியாதவர்களாக இருக்கிறோம்.
பிரசவிக்கும் பெண்ணைப்போன்று வேதனையில் இருக்கிறோம்.
25 வெளியே வயல்களுக்குப் போகாதீர்கள்.
சாலைகளில் போகாதீர்கள்,
ஏனென்றால் பகைவர்கள் வாள் வைத்திருக்கின்றனர்.
எல்லா இடங்களிலும் ஆபத்து இருக்கிறது.
26 என் சாக்கு ஆடையை அணிந்துக்கொள்ளுங்கள்.
சாம்பலில் புரளுங்கள்.
மரித்த ஜனங்களுக்காக உரக்க அழுங்கள்.
ஒரே மகனை இழந்ததைப்போன்று அழுங்கள்,
இவற்றையெல்லாம் செய்யுங்கள்;
ஏனென்றால், நமக்கு எதிரியான, அழிவுக்காரன் மிகவேகமாக வந்துக்கொண்டிருக்கிறான்.
27 “எரேமியா! நான், (கர்த்தர்) உன்னை உலோகத்தை
சோதித்துப்பார்க்கும் வேலையாளாக வைத்தேன்,
நீ எனது ஜனங்களை சோதிப்பாய்;
அவர்கள் எவ்வாறு வாழ்கின்றார்கள் என்று கவனிப்பாய்.
28 என்னுடைய ஜனங்களே, எனக்கு எதிராக திரும்பியிருக்கின்றனர்,
அவர்கள் மிகவும் கடினமானவர்கள்.
அவர்கள் ஜனங்களைப்பற்றி தவறானவற்றைச் சொல்கிறார்கள், ஜனங்களைப்பற்றி கெட்டவற்றைச் சொல்கிறார்கள்.
துருவும் கறையும் கொண்ட அவர்கள் எல்லோரும் தீயவர்கள்.
அவர்கள் வெண்கலத்தைப்போன்றும் இரும்பைப் போன்றும் இருக்கின்றனர்.
29 அவர்கள் வெள்ளியை சுத்தப்படுத்த முயலும் வேலைக்காரர்களைப் போன்றுள்ளனர்.
துருத்திகள் பலமாக ஊதப்படுகின்றன.
நெருப்பு மேலும் சூடாகின்றது.
ஆனால் நெருப்பிலிருந்து ஈயம்மட்டும் வருகின்றது.
அந்த வெள்ளியை சுத்தப்படுத்துவதில் வேலையாள் தனது காலத்தை வீணாக்கிவிட்டான்.
இதுபோலவே, எனது ஜனங்களிடமிருந்து தீயவை விலக்கப்படவில்லை.
30 என்னுடைய ஜனங்கள் ‘தள்ளுபடியான வெள்ளி’ என்று அழைக்கப்படுவார்கள், அவர்களுக்கு அந்தப் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஏனென்றால், கர்த்தர் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.”
எரேமியாவின் ஆலயத்துப் பிரசங்கம்
7 எரேமியாவிற்கான கர்த்தருடைய செய்தி இது: 2 எரேமியா, தேவனுடைய வீட்டுக் கதவருகில் நில். வாசலில் இந்த செய்தியைப் பிரசங்கம் செய்: “யூதா நாட்டிலுள்ள அனைத்து ஜனங்களே! கர்த்தரிடமிருந்து வந்த செய்தியைக் கேளுங்கள்! இந்த வாசல் வழியாக கர்த்தரை ஆராதிக்க வருகின்ற ஜனங்களே, இந்தச் செய்தியைக் கேளுங்கள். 3 இஸ்ரவேல் ஜனங்களின் தேவனாகிய கர்த்தர் இருக்கிறார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இதைத் தான் சொல்கிறார்: ‘உங்களது வாழ்க்கையை மாற்றுங்கள். நல்லவற்றைச் செய்யுங்கள், இதனை நீங்கள் செய்தால், நான் உங்களை இந்த இடத்தில் வாழவிடுவேன். 4 சில ஜனங்கள் கூறுகிற பொய்களில் நம்பிக்கை வைக்காதீர்கள். இதுதான் கர்த்தருடைய ஆலயம், கர்த்தருடைய ஆலயம், கர்த்தருடைய ஆலயம்’ என்று அவர்கள் கூறுகின்றனர். 5 நீங்கள் உங்களது வாழ்க்கையை மாற்றிக்கொண்டு நற் செயல்களைச் செய்தால், நான் உங்களை இந்த இடத்தில் வாழவிடுவேன். நீங்கள் ஒருவருக்கு ஒருவர் நியாயமாக இருக்கவேண்டும். 6 நீங்கள் அந்நியர்களுக்கும் நியாயமாக இருக்கவேண்டும். நீங்கள் விதவைகளுக்கும் அநாதைகளுக்கும் நல்லவற்றைச் செய்யவேண்டும். ஒன்றுமறியாத ஜனங்களைக் கொல்லவேண்டாம். மற்ற தெய்வங்களைப் பின் பற்றவேண்டாம். ஏனென்றால் அவை உங்கள் வாழ்வை அழித்துவிடும். 7 நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்தால், நான் உங்களை இந்த இடத்தில் வாழவிடுவேன்: நான் உங்களது முற்பிதாக்களுக்கு இந்த நாட்டை என்றென்றைக்கும் வைத்திருக்கும்படி கொடுத்தேன்.
8 “ஆனால் நீங்கள் பொய்களை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். அந்தப் பொய்கள் பயனில்லாதவை. 9 நீங்கள் களவும், கொலையும் செய்வீர்களா? நீங்கள் விபச்சாரம் என்னும் பாவத்தை செய்வீர்களா? நீங்கள் மற்றவர்கள் மேல் பொய்வழக்கு போடுவீர்களா? நீங்கள் பொய்த் தெய்வமான பாகாலைத் தொழுதுகொண்டு, உங்களால் அறியப்படாத அந்நிய தெய்வங்களைப் பின்பற்றுவீர்களா? 10 நீங்கள் அந்தப் பாவங்களைச் செய்தால், எனது நாமத்தால் அழைக்கப்படும். இந்த வீட்டில் எனக்கு முன்னால் நிற்க முடியும் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் இதுபோன்ற கெட்ட செயல்களையெல்லாம் செய்துகொண்டு, எனக்கு முன்னால் நின்று, ‘நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்’ என்று சொல்லிக்கொண்டே தீய செயல்களைத் தொடர்ந்து செய்யலாம் என்று நினைக்கிறீர்களா? 11 இந்த ஆலயம் எனது நாமத்தால் அழைக்கப்படுகின்றது. இந்த ஆலயம் உங்களுக்கு, கள்ளர் பதுங்கும் இடமே ஒழிய, வேறு எதுவுமில்லையா? நான் உங்களை கவனித்துக்கொண்டிருக்கிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
12 “யூதாவின் ஜனங்களே! இப்பொழுது சீலோ என்னும் நகரத்திற்குப் போங்கள். நான் முதலில் எந்த இடத்தில் எனது நாமத்தால் ஒரு வீட்டை அமைத்தேனோ அங்கு போங்கள். இஸ்ரவேல் ஜனங்களும் தீயச்செயல்களைச் செய்தனர். அவர்கள் செய்த தீயச்செயல்களுக்கு நான் அந்த இடத்துக்குச் செய்தவற்றைப் போய் பாருங்கள். 13 யூதா ஜனங்களாகிய நீங்கள், இத்தீயச் செயல்களையெல்லாம் செய்தீர்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் உங்களிடம் மீண்டும் மீண்டும் பேசினேன். ஆனால் நீங்கள் என்னை கவனிக்க மறுத்துவிட்டீர்கள். நான் உங்களை அழைத்தேன். ஆனால் நீங்கள் பதில் சொல்லவில்லை. 14 எனவே, எருசலேமில் எனது நாமத்தால் அழைக்கப்பட்ட வீட்டை அழிப்பேன். நான் சீலோவை அழித்தது போன்று, அந்த ஆலயத்தையும் அழிப்பேன். எனது நாமத்தால் அழைக்கப்படும் எருசலேமில் உள்ள அந்த வீடு, நீங்கள் நம்பிக்கை வைத்த ஆலயம். நான் அந்த இடத்தை உங்களுக்கும் உங்கள் முற்பிதாக்களுக்கும் கொடுத்தேன். 15 எப்பிராயீமிலுள்ள உங்கள் சகோதரர்களை நான் தூர எறிந்ததைப்போன்று, உங்களையும் என்னைவிட்டுத் தூர எறிவேன்.
16 “எரேமியா, யூதாவிலுள்ள இந்த ஜனங்களுக்காக நீ விண்ணப்பம் செய்யவேண்டாம். அவர்களுக்காக நீ ஜெபிக்கவும், கெஞ்சவும் வேண்டாம், அவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று என்னிடம் மன்றாடவேண்டாம். அவர்களுக்கான உனது ஜெபத்தை நான் கேட்கமாட்டேன். 17 யூதாவின் நகரங்களில் அந்த ஜனங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை நீ பார்க்கிறாய் என்பதை நான் அறிவேன். எருசலேம் நகரத்து வீதிகளில் அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை உன்னால் பார்க்க முடியும். 18 யூதாவிலுள்ள ஜனங்கள் செய்துகொண்டிருப்பது இதுதான். பிள்ளைகள் மரக்கட்டைகளைச் சேகரிக்கின்றனர். தந்தைகள் நெருப்புக்காக அந்த மரக்கட்டைகளைப் பயன்படுத்துகின்றனர். பெண்கள், வானராக்கினிக்கும் பலியிட அப்பங்களைச் சுடுகிறார்கள். அந்நிய தெய்வங்களை தொழுவதற்காக யூதா ஜனங்கள் பானங்களின் காணிக்கைகளை ஊற்றுகின்றனர். எனக்குக் கோபம் ஏற்படும்படி அவர்கள் இதனைச் செய்கின்றனர். 19 ஆனால் யூதா ஜனங்கள் உண்மையிலேயே என்னைப் புண்படுத்தவில்லை” என்று கர்த்தர் சொல்லுகிறார். “அவர்கள் தங்களையே புண்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்கே அவமானத்தை வரவழைத்துக்கொள்கிறார்கள்.” 20 எனவே கர்த்தர் அவர்களிடம், “நான் இந்த இடத்துக்கு எதிராக எனது கோபத்தைக் காட்டுவேன். நான் ஜனங்களையும் மிருகங்களையும் தண்டிப்பேன். நான் வெளியிலுள்ள மரங்களையும் தரையிலுள்ள விளைச்சலையும் தண்டிப்பேன். எனது கோபம் சூடான நெருப்பைப் போன்றிருக்கும். எவராலும் அதனைத் தடுக்கமுடியாது” என்று கூறுகிறார்.
கர்த்தர் பலிகளைவிட கீழ்ப்படிதலையே விரும்புகிறார்
21 இஸ்ரவேலின் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “போங்கள், உங்கள் விருப்பப்படி எத்தனை மிகுதியாகத் தகன பலிகளையும், மற்ற பலிகளையும் செலுத்த முடியுமோ செலுத்துங்கள். அப்பலிகளின் இறைச்சியை நீங்களே உண்ணுங்கள். 22 எகிப்துக்கு வெளியே உங்களது முற்பிதாக்களைக் கொண்டுவந்தேன். நான் அவர்களோடு பேசினேன், ஆனால் தகனபலிகள் மற்றும் மற்ற பலிகள் பற்றி எந்தக் கட்டளையையும் இடவில்லை. 23 நான் இந்தக் கட்டளையை மட்டும் கொடுத்தேன். ‘எனக்குக் கீழ்ப்படியுங்கள். அப்பொழுது நான் உங்களது தேவனாக இருப்பேன். நீங்கள் என் ஜனமாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட அனைத்தும் செய்யுங்கள். உங்களுக்கு நன்மைகள் ஏற்படும்.’
24 “ஆனால் உங்களது முற்பிதாக்கள் என்னை கவனிக்கவில்லை. அவர்கள் நான் சொன்னதில் கவனம் வைக்கவில்லை, அவர்கள் முரட்டாட்டமாக இருந்தார்கள். அவர்கள் விரும்பியதையே செய்தார்கள். அவர்கள் நல்லவர்கள் ஆகவில்லை. அவர்கள் மேலும் தீயவர்கள் ஆனார்கள். அவர்கள் முன்னுக்கு வராமல் பின்னுக்குப் போனார்கள். 25 உங்களது முற்பிதாக்கள் எகிப்தை விட்டு விலகிய நாள் முதல், இன்றுவரை நான் உங்களிடம் எனது சேவகர்களை அனுப்பியிருக்கிறேன். தீர்க்கதரிசிகளே எனது சேவகர்கள். நான் அவர்களை மீண்டும், மீண்டும் உங்களிடம் அனுப்பினேன். 26 ஆனால், உங்களது முற்பிதாக்கள் நான் சொன்னதற்கு செவிசாய்க்கவில்லை. அவர்கள் என்மீது கவனம் வைக்கவில்லை. அவர்கள் மிகுந்த பிடிவாதமானவர்களாக இருந்தார்கள். அவர்கள் தம் தந்தையரைவிட மோசமான தீமைகளைச் செய்தனர்.
27 “எரேமியா! நீ யூதா ஜனங்களிடம் இவற்றை எல்லாம் சொல்லுவாய். ஆனால் அவர்கள் நீ சொல்வதை கவனிக்கமாட்டார்கள்! நீ அவர்களை அழைப்பாய். ஆனால் அவர்கள் பதில் சொல்லமாட்டார்கள். 28 எனவே, நீ அவர்களிடம் இவற்றைச் சொல்லவேண்டும். நமது தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படியாத தேசம் இதுதான். தேவனுடைய போதனைகளை அதன் ஜனங்கள் கவனிக்கவில்லை, இந்த ஜனங்கள் உண்மையான போதனைகளை அறியவில்லை.
கொலையின் பள்ளத்தாக்கு
29 “எரேமியா, உனது தலைமுடியை வெட்டி எறிந்துபோடு. பாறையின் உச்சிக்குப் போய் அழு. ஏனென்றால், கர்த்தர் இந்த தலைமுறை ஜனங்களை மறுத்திருக்கிறார். இந்த ஜனங்களுக்கு கர்த்தர் தனது முதுகைத் திருப்பிக்கொண்டார். கோபத்துடன் அவர்களைத் தண்டிப்பார். 30 இவற்றைச் செய். ஏனென்றால், யூதா ஜனங்கள் தீமை செய்வதை நான் பார்த்திருக்கிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “அவர்கள் தம் விக்கிரகங்களை அமைத்திருக்கிறார்கள், அதனை எனது நாமத்தால் அழைக்கப்படுகிற ஆலயத்தில் அவர்கள் அந்த விக்கிரகங்களை வைத்திருக்கிறார்கள். அவற்றை நான் வெறுக்கிறேன். அவர்கள் எனது வீட்டை ‘தீட்டு’ செய்திருக்கிறார்கள்! 31 யூதா ஜனங்கள், இன்னோமின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டியிருக்கிறார்கள். அந்த இடங்களில் அவர்கள் தமது மகன்களையும், மகள்களையும் கொன்று, பலியாக எரித்தார்கள். இவற்றைச் செய்யுமாறு நான் கட்டளையிடவில்லை. இவை போன்றவற்றை நான் மனதிலே நினைத்துப் பார்க்கவுமில்லை. 32 எனவே, நான் உன்னை எச்சரிக்கிறேன். நாட்கள் வந்துகொண்டிருக்கின்றன” என்று கர்த்தர் சொல்லுகிறார். “ஜனங்கள் இந்த இடத்தை தொப்பேத் என்னும் இன்னோமின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்போவதில்லை. அவர்கள் இதனை ‘சங்காரப் பள்ளத்தாக்கு’ என்று அழைப்பார்கள். அவர்கள் இதற்கு இந்தப் பெயரை இடுவார்கள். ஏனென்றால் மரித்தவர்களை அவர்கள் தோப்பேத்தில் இனி புதைக்க இடமில்லை என்று கூறுமளவுக்குப் புதைப்பார்கள். 33 பிறகு, மரித்தவர் களின் உடல்கள் பூமிக்கு மேலே கிடக்கும், வானத்து பறவைகளுக்கு உணவாகும். அந்த ஜனங்களின் உடல்களைக் காட்டு மிருகங்கள் உண்ணும். அந்தப் பறவைகள் அல்லது மிருகங்களைத் துரத்திட அங்கு எவரும் உயிரோடு இருக்கமாட்டார்கள். 34 எருசலேமின் தெருக்களிலும், யூதாவின் நகரங்களிலும் உள்ள, சந்தோஷம் மகிழ்ச்சி ஆகியவற்றின் ஒலிகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவேன். எருசலேம் அல்லது யூதாவில் இனிமேல் மணவாளன் மற்றும் மணவாட்டியின் சத்தமும் இனிமேல் இருக்காது. இந்த நாடு ஒரு பாழடைந்த பாலைவனமாகும்.”
8 கர்த்தர் சொல்லுகிறதாவது: “அந்தக் காலத்தில் மனிதர்கள் யூதாவின் அரசர்கள் மற்றும் முக்கிய ஆள்வோர்களின் எலும்புகளை அவர்களின் கல்லறையிலிருந்து எடுத்துக்கொள்வார்கள். ஆசாரியர்கள், மற்றும் தீர்க்கதரிசிகளின் எலும்புகளையும், அவர்களின் கல்லறையிலிருந்து எடுத்துக்கொள்வார்கள். எருசலேமின் அனைத்து ஜனங்களின் எலும்புகளையும், அவர்களின் கல்லறைகளிலிருந்து அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். 2 அவர்கள் அந்த எலும்புகளை தரையின் மீது சூரியன், சந்திரன், நட்சத்திரங்களுக்கு அடியில் பரப்பி வைப்பார்கள். எருசலேம் ஜனங்கள் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றை நேசித்து, பின்தொடர்ந்து, குறி கேட்டு தொழுதுகொண்டனர். எவரும் அந்த எலும்புகளைச் சேகரித்து மீண்டும் அடக்கம் செய்யமாட்டார்கள். எனவே, அந்த ஜனங்களின் எலும்புகள், பூமியின் மேல் எருவைப் போன்று எறியப்படும்.
3 “யூதாவின் பொல்லாத ஜனங்களை நான் கட்டாயப்படுத்தி அவர்களது வீட்டை விட்டும் நாட்டை விட்டும் போகும்படிச் செய்வேன். ஜனங்கள் அந்நிய நாடுகளுக்குக் கொண்டுசெல்லப்படுவார்கள். போரில் கொல்லப்படாத யூதா ஜனங்களில் சிலர் தாம் கொல்லப்பட விரும்புவார்கள்” இந்தச் செய்தி கர்த்தரிடமிருந்து வருகிறது.
பாவமும் தண்டனையும்
4 “எரேமியா! யூதா ஜனங்களிடம் நீ சொல்ல வேண்டியதாவது: ‘கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்:
“‘ஒரு மனிதன் கீழே விழுந்தால்
மீண்டும் அவன் எழுவான் என்பதை நீ அறிவாய்.
ஒரு மனிதன் தவறான வழியில் போனால்,
அவன் திரும்பி வருவான்.
5 யூதா ஜனங்கள் தவறான வழியில் சென்றனர்.
(வாழ்ந்தனர்) ஆனால் எருசலேமிலுள்ள அந்த ஜனங்கள் ஏன் தவறான வழியில் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கின்றனர்?
அவர்கள் தங்கள் சொந்தப் பொய்யையே நம்புகின்றனர்.
அவர்கள் திரும்பி என்னிடம் வர மறுக்கின்றனர்.
6 நான் அவர்களை மிகக் கவனமாகக் கேட்டிருக்கிறேன்.
ஆனால் எது சரியென்று அவர்கள் சொல்கிறதில்லை.
ஜனங்கள் தம் பாவங்களுக்காக வருத்தப்படுவதில்லை.
அவர்கள் தாங்கள் செய்தது தீயச் செயல்கள் என்று எண்ணுவதில்லை;
ஜனங்கள் எண்ணிப் பார்க்காமலேயே செயல்களைச் செய்கிறார்கள்.
போரில் ஓடும் குதிரைகளைப் போன்று அவர்கள் இருக்கிறார்கள்.
7 வானத்து பறவைகளுக்குக் கூடச் செயல்களைச் செய்வதற்கான
சரியான நேரம் தெரியும்.
நாரைகள், புறாக்கள், தகைவிலான் குருவிகள் ஆகியவற்றுக்கு
புதிய கூட்டிற்குப் பறந்து செல்லவேண்டிய நேரம் தெரியும்.
ஆனால், எனது ஜனங்களுக்குத் தாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார் என்பது தெரியாது.
8 “‘“எங்களிடம் கர்த்தருடைய போதனைகள் இருக்கிறது.
எனவே, நாங்கள் ஞானிகள்” என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால் அது உண்மையன்று, ஏனென்றால், வேதபாரகர்கள் தம் எழுத்தாணிகளால் பொய்யுரைத்தனர்.
9 கர்த்தருடைய போதனைகளை, அந்த “ஞானமுள்ள ஜனங்கள்” கவனிக்க மறுத்துவிட்டனர்.
எனவே உண்மையில் அவர்கள் ஞானம் உடையவர்கள் அல்ல.
அந்த “ஞானமுள்ள ஜனங்கள்” பிடிபட்டுள்ளனர்.
அவர்கள் அதிர்ச்சியும் அவமானமும் அடைந்துள்ளனர்.
10 எனவே, நான் அவர்களது மனைவியரை மற்றவர்களுக்குக் கொடுப்பேன்,
நான் அவர்களது வயல்களைப் புதிய உரிமையாளர்களுக்குக் கொடுப்பேன்.
இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஜனங்களும் மேலும் மேலும் பணத்தை விரும்புகின்றனர்.
முக்கியத்துவம் குறைந்த ஜனங்களிலிருந்து முக்கியத்துவம் மிகுந்த ஜனங்கள் வரை, அவர்கள் அனைவரும் அதனை விரும்புகின்றனர்.
தீர்க்கதரிசிகளிலிருந்து ஆசாரியர்கள் வரை அனைவரும் பொய் சொல்லுகின்றனர்.
11 எனது ஜனங்கள் மிக மோசமாகக் காயப்பட்டிருக்கிறார்கள்.
தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும், அந்தக் காயங்களுக்குக் கட்டுப்போட வேண்டும்.
ஆனால் சிறு காயங்களுக்குச் சிகிச்சை செய்வதுபோன்று அவர்கள் சிகிச்சை செய்கின்றனர்.
“இது சரியாக இருக்கிறது,” என்று கூறுகிறார்கள்.
ஆனால் அது சரியாகவில்லை.
12 அவர்கள் தாம் செய்கிற தீயச் செயல்களுக்காக அவமானப்பட வேண்டும்.
ஆனால் அவர்கள் கொஞ்சமும் வெட்கப்படுவதில்லை.
அவர்கள் தங்களது பாவங்களுக்காக வெட்கங்கொள்ள அறியாதவர்கள்.
எனவே, அவர்கள் ஒவ்வொருவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
நான் ஜனங்களைத் தண்டிக்கும்போது அவர்கள் தரையில் வீசி எறியப்படுவார்கள்’”
கர்த்தர் இவற்றையெல்லாம் சொன்னார்.
13 “‘நான் அவர்களுடைய பழங்களையும் விளைச் சலையும் எடுத்துக்கொள்வேன்.
எனவே, அங்கே அறுவடை இருக்காது என்று கர்த்தர் சொல்லுகிறார்.
திராட்சைத் தோட்டத்தில் பழங்கள் இராது.
அத்திமரத்தில் அத்திப்பழங்கள் இராது.
இலைகள் கூட காய்ந்து உதிர்ந்துவிடும்.
நான் அவர்களுக்குக் கொடுத்தப் பொருட்களையெல்லாம் எடுத்துக்கொள்வேன்.’”
14 “எதற்காக நாம் இங்கே சும்மா உட்கார்ந்து இருக்கிறோம்.
வாருங்கள், பலமான நகரங்களுக்கு ஓடுவோம்.
நமது தேவனாகிய கர்த்தர் நம்மை மரிக்க செய்வாரேயானால், நாம் அங்கேயே மரித்துப்போவோம்.
நாம் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தோம்”
எனவே, தேவனாகிய கர்த்தர் நாம் குடிப்பதற்கு விஷமுள்ள தண்ணீரைக் கொடுத்தார்.
15 நாம் சமாதானம் அடைவோம் என்று நம்பினோம்.
ஆனால் நன்மை எதுவும் வரவில்லை.
அவர் நம்மை மன்னிப்பார் என்று எதிர்பார்த்தோம்.
ஆனால் பேரழிவு மாத்திரமே வந்தது.
16 தாணின் கோத்திரத்தைச் சேர்ந்த நாட்டிலிருந்து
பகைவர்களின் குதிரைகளது மூச்சு சத்தம் கேட்கிறது.
அவர்களது குதிரைகளின் கனைப்பொலியால் பூமி அதிர்கின்றது.
அவர்கள் இந்த நாட்டையும் இதிலுள்ள அனைத்தையும்
அழிக்க வந்துள்ளனர்.
அவர்கள் இந்த நகரத்தையும்
இதில் வாழும் ஜனங்களையும் அழிக்க வந்திருக்கிறார்கள்.
17 “யூதாவின் ஜனங்களே! உங்களைத் தாக்க விஷமுள்ள பாம்புகளை அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.
அந்தப் பாம்புகளைக் கட்டுப்படுத்த முடியாது.
அந்தப் பாம்புகள் உங்களைக் கடிக்கும்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18 “தேவனே, நான் மிகவும் வருத்தத்தோடும், பெருந்துயரத்தோடும் இருக்கிறேன்.
19 எனது ஜனங்கள் சொல்வதை கேளும்”
இந்த நாட்டின் எல்லா இடங்களிலும் ஜனங்கள் உதவிக்காக அழுதுக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள், “சீயோனில் கர்த்தர் இன்னும் இருக்கிறாரா?
சீயோனின் அரசர் இன்னும் இருக்கிறாரா?”
என்று கூறுகிறார்கள்.
ஆனால் தேவன் கூறுகிறார், “யூதாவின் ஜனங்கள் அவர்களது பயனற்ற அந்நிய விக்கிரகங்களைத் தொழுதுகொண்டனர்.
அது என்னைக் கோபங்கொள்ளச் செய்தது!
அவர்கள் எதற்காக செய்தார்கள்?” என்று கேட்டார்.
20 ஜனங்கள் சொல்கிறார்கள்,
“அறுவடை காலம் முடிந்துவிட்டது, கோடைகாலம் போய்விட்டது, நாம் இன்னும் காப்பாற்றப்படவில்லை.”
21 எனது ஜனங்கள் காயப்பட்டிருக்கிறார்கள்.
எனவே நானும் காயப்பட்டிருக்கிறேன்.
நான் பேசுவதற்கு மிகவும் வருந்துகிறேன்.
22 உறுதியாக கீலேயாத்தில் கொஞ்சம் மருந்து உள்ளது.
உறுதியாக கீலேயாத்தில் ஒரு மருத்துவர் இருக்கிறார்.
எனவே, ஏன்? எனது ஜனங்களின் காயங்கள் குணமாகவில்லை?
9 எனது தலை தண்ணீரால் நிறைக்கப்பட்டால்,
எனது கண்கள் கண்ணீரின் ஊற்றாக இருந்தால் நான் இரவும் பகலும்,
அழிந்துப்போன எனது ஜனங்களுக்காக அழ முடியும்!
2 வழிபோக்கர்கள் இரவிலே தங்குவதற்கு,
வனாந்தரத்திலே எனக்கென்றொரு வீடு இருந்திருக்குமானால் நல்லது.
அப்பொழுது நான் எனது ஜனங்களை விட்டுப்போவேன்.
நான் அந்த ஜனங்களிலிருந்து தூரப் போய்விடுவேன்.
ஏனென்றால், அவர்கள் தேவன் மேல் விசுவாசம் இல்லாதவர்கள்.
அவர்கள் அனைவரும் அவருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள்.
3 “அந்த ஜனங்கள் தங்களது நாக்குகளை வில்லைப்போன்று பயன்படுத்துகின்றனர்.
அவர்களது வாய்களிலிருந்து பொய்கள் அம்புகளைப்போன்று பறக்கின்றன.
இந்த நாட்டில் உண்மைகளல்ல பொய்கள் மிகப் பலமாக வளர்ந்திருக்கின்றன.
ஜனங்கள் ஒரு பாவத்திலிருந்து இன்னொரு பாவத்திற்குப் போகிறார்கள்.
அவர்களுக்கு என்னைத் தெரியாது”
கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்.
4 கர்த்தர், “உனது அண்டை வீட்டாரை கவனியுங்கள்!
உனது சொந்தச் சகோதரர்களையும் நம்பாதீர்கள்!
ஏனென்றால், ஒவ்வொரு சகோதரனும் ஏமாற்றுக்காரனாய் இருக்கிறான்.
ஒவ்வொரு அண்டைவீட்டானும், உனது முதுகுக்குப் பின்னால் பேசுகிறான்.
5 ஒவ்வொருவனும் தனது அண்டை வீட்டானுக்கு பொய்யனாக இருக்கிறான்.
எவனும் உண்மையைப் பேசுவதில்லை.
யூதாவின் ஜனங்கள் தம் நாக்குகளுக்கு
பொய்யையே கற்றுக் கொடுத்திருக்கின்றனர்.
சோர்ந்துபோகிற அளவுக்கு
பாவம் செய்தார்கள்.
6 ஒரு கெட்டச் செயலை இன்னொன்று தொடர்கிறது.
பொய்கள், பொய்களைத் தொடர்கின்றன.
ஜனங்கள் என்னை அறிய மறுக்கின்றனர்”
என்று கர்த்தர் கூறினார்.
7 எனவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:
“ஒரு வேலையாள், ஒரு உலோகத்தை அது சுத்தமாயிருக்கிறதா என்று சோதனை செய்வதற்காக நெருப்பிலே சூடுபடுத்துகிறான்.
அதுபோல நான் யூதா ஜனங்களை சோதனைச் செய்கிறேன்.
எனக்கு வேறுவழி தெரிந்திருக்கவில்லை.
எனது ஜனங்கள் பாவம் செய்திருக்கிறார்கள்.
8 யூதா ஜனங்கள் அம்புகளைப் போன்ற கூர்மையான நாக்குகளை வைத்திருக்கிறார்கள்.
அவர்களது வாய்கள் பொய்யைப் பேசுகின்றன.
ஒவ்வொரு நபரும் தனது அயலானிடம் சமாதானமாய் பேசுகிறான்.
ஆனால், அவன் இரகசியமாக தனது அயலானைத் தாக்குவதற்குத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறான்.
9 யூதா ஜனங்களை நான் தண்டிக்க வேண்டும்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
“அந்த வகையான ஜனங்களை நான் தண்டிக்க வேண்டும் என்று நீ அறிவாய்.
அவர்களுக்கு ஏற்ற தண்டனையை நான் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.”
10 நான் (எரேமியா) மலைகளுக்காக உரக்க அழுவேன்.
காலியான வயல்களுக்காக நான் ஒப்பாரிப் பாடலைப் பாடுவேன்.
ஏனென்றால், உயிர் வாழ்வன அனைத்தும் எடுக்கப்பட்டுவிடும்.
இப்பொழுது எவரும் அங்கு பயணம் செய்யமாட்டார்கள்.
ஆடுமாடுகளின் சத்தத்தை அங்கே கேட்கமுடியாது.
பறவைகள் பறந்து போயிருக்கின்றன.
மிருகங்கள் போய்விட்டன.
11 “நான் (கர்த்தர்) எருசலேம் நகரத்தை குப்பை மேடாக்குவேன்.
அது ஓநாய்களின் வீடாகும்.
யூதா நாட்டிலுள்ள நகரங்களை நான் அழிப்பேன்,
அதனால் அங்கே எவரும் வாழமுடியாது.”
12 இவற்றையெல்லாம் அறிந்துக்கொள்ளுகிற அளவிற்கு ஒரு ஞானமுள்ள மனிதன் அங்கே இருக்கிறானா?
கர்த்தரால் கற்பிக்கப்பட்டிருக்கிற சிலர் அங்கே இருக்கிறார்களா?
கர்த்தருடைய செய்தியை எவரொருவராலும் விளக்கமுடியுமா?
அந்தப் பூமி ஏன் வீணாயிற்று?
எந்த மனிதரும் போகமுடியாத அளவிற்கு அது ஏன் வெறுமையான வனாந்தரமாயிற்று?
13 கர்த்தர் இந்த வினாக்களுக்கு விடை சொன்னார்.
அவர் கூறினார்:
“இது ஏனென்றால், யூதாவின் ஜனங்கள் எனது போதனைகளைப் பின்பற்றுவதை விட்டுவிட்டார்கள்.
நான் எனது போதனைகளைக் கொடுத்தேன்.
ஆனால், அவர்கள் நான் சொல்வதைக் கேட்க மறுத்துவிட்டனர்.
14 யூதாவின் ஜனங்கள் தங்கள் சொந்த வழியிலேயே வாழ்ந்தார்கள்.
அவர்கள் பிடிவாதக்காரர்கள்,
அவர்கள் பொய்த் தெய்வமான பாகாலைத் தொழுதுகொள்கிறார்கள்.
அவர்களின் தந்தைகள் அந்தப் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ள சொல்லித் தந்தனர்.”
15 “எனவே, இஸ்ரவேலின் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்:
நான் விரைவில் யூதா ஜனங்களைத் தண்டிப்பேன்.
16 நான் யூதாவின் ஜனங்களை பல நாடுகளிலும் சிதறும்படி செய்வேன்.
அவர்கள் புற ஜாதிகளுக்குள் வாழ்வார்கள்.
அவர்களும் அவர்களது தந்தைகளும் அந்த நாடுகளைப்பற்றி எப்பொழுதும் அறிந்திருக்கமாட்டார்கள்.
நான் பட்டயங்களுடன் ஆட்களை அனுப்புவேன்.
அவர்கள் யூதாவின் ஜனங்களைக் கொல்வார்கள்.
ஜனங்கள் முடிந்து போகுமட்டும் அவர்கள் அவர்களைக் கொல்வார்கள்.”
17 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இதைத்தான் கூறுகிறார்:
“இப்பொழுது, இவற்றைப்பற்றி எண்ணுங்கள்!
நீங்கள், சாவில் கூலிக்காக அழுவதில் திறமைவாய்ந்த பெண்களைக் கூப்பிடுங்கள்.
அந்த வேலையில் கெட்டிக்காரிகளை ஜனங்களுக்காக சொல்லி அனுப்புங்கள்.
18 ஜனங்கள் சொல்கிறார்கள்,
‘அந்தப் பெண்கள் விரைவாக வந்து, நமக்காக அழட்டும், பிறகு நமது கண்கள் கண்ணீரால் நிறையும்.
நமது கண்களிலிருந்து நீரோடை வரும்.’
19 “சீயோனிலிருந்து உரத்த அழுகையின் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
‘நாம் உண்மையிலேயே அழிக்கப்பட்டிருக்கிறோம்.
நாம் உண்மையிலேயே வெட்கப்படுகிறோம்!
நாம் நமது நாட்டைவிட்டு விலக வேண்டும்.
ஏனென்றால், நமது வீடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன.
இப்பொழுது நமது வீடுகள் கற்குவியல்களாக இருக்கின்றன.’”
20 யூதாவின் ஸ்திரீகளே! இப்பொழுது, கர்த்தரிடமிருந்து வரும் செய்தியைக் கேளுங்கள்.
கர்த்தருடைய வாயிலிருந்து வருகிற வார்த்தைகளைக் கேளுங்கள்.
கர்த்தர், “உங்கள் பெண்பிள்ளைகளுக்கு எவ்வாறு உரக்க அழுவது என்று கற்றுக் கொடுங்கள்.
ஒவ்வொரு பெண்ணும் ஒப்பாரிப் பாடலை பாடக் கற்றுக்கொள்ள வேண்டும்.
21 “மரணம் வந்திருக்கிறது.
நமது ஜன்னல்கள் வழியாக மரணம் ஏறியிருக்கிறது.
நமது அரண்மனைகளுக்குள் மரணம் வந்திருக்கிறது.
தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும், நமது பிள்ளைகளிடம் மரணம் வந்திருக்கிறது.
பொது இடங்களில் நாம் சந்திக்கிற இளைஞர்களிடம் மரணம் வந்திருக்கிறது.”
22 “கர்த்தர் எரேமியாவை நோக்கி,
மரித்த உடல்கள் வயல் வெளிகளின்மேல் எருவைப் போன்று கிடக்கும்.
அவர்களின் உடல்கள், விவசாயி அறுத்துப் போட்ட அரியைப்போன்று தரையில் கிடக்கும்.
ஆனால் அவற்றை சேகரிக்க எவரும் இருக்கமாட்டார்கள்” என்று சொல் என்றார்.
23 கர்த்தர், “ஞானம் உள்ளவர்கள்
தமது ஞானத்தைப்பற்றி பெருமை பேசவேண்டாம்.
பலம் உள்ளவர்கள்
தமது பலத்தைப்பற்றி பெருமை பேசவேண்டாம்.
செல்வம் உடையவர்கள்
தமது செல்வத்தைப்பற்றி பெருமை பேசவேண்டாம்.
24 ஆனால் எவராவது பெருமைபேச விரும்பினால், அவன் இதைப்பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளட்டும்.
என்னைப்பற்றி அவன் அறிந்துக்கொண்டதைக் குறித்து பெருமைப்படட்டும்.
நானே கர்த்தர் என்றும்,
நான் தயவும் நியாயமும் கொண்டவர் என்றும்,
நான் பூமியில் நன்மையைச் செய்கிறவர் என்றும்
புரிந்துகொண்டவன் பெருமைப்படட்டும்.
நான் அவற்றை நேசிக்கிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
25 “சரீரத்தில் மட்டும் விருத்தசேதனம் பண்ணிக் கொண்டவர்களை நான் தண்டிக்கப்போகிற காலம் வந்துகொண்டிருக்கிறது. 26 எகிப்து, யூதா, ஏதோம், அம்மோன், மோவாப் மற்றும் வனாந்திரத்தில் வாழ்கிற அனைத்து ஜனங்களையும்பற்றி நான் பேசிக்கொண்டிருக்கிறேன், பாலைவனக் குடிகள் தங்கள் தாடி ஓரங்களை வெட்டினார்கள். இந்த நாடுகளில் உள்ள அனைத்து ஜனங்களும் சரீரத்தில் விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளாதவர்கள். ஆனால், இஸ்ரவேல் குடும்பத்தில் வந்த ஜனங்களோ, தங்கள் இதயத்தில் விருத்தசேதனம் செய்துகொள்ளவில்லை” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தரும், விக்கிரகங்களும்
10 இஸ்ரவேல் குடும்பத்தாரே! உங்களைக் குறித்து கர்த்தர் சொன்னதை கவனித்து கேளுங்கள்!
2 “மற்ற நாடுகளில் உள்ள ஜனங்களைப் போன்று வாழாதீர்கள்!
வானத்தில் தோன்றும் சிறப்பான அடையாளங்களைக் கண்டு பயப்படாதீர்கள்!
அயல் நாடுகளில் உள்ளவர்கள் தாம் வானத்தில் காண்கின்றவற்றைப்பற்றி பயப்படுகிறார்கள்.
ஆனால் அவற்றைப்பற்றி நீங்கள் பயப்பட வேண்டாம்!
3 மற்ற ஜனங்களின் பழக்கவழக்கங்கள் பயனற்றவை.
ஏனெனில், அவர்களது விக்கிரகங்கள் காட்டிலுள்ள மரக்கட்டைகளைத் தவிர, வேறில்லை.
அவர்களின் விக்கிரகங்கள் வேலையாளால் உளியால் செதுக்கப்பட்டவை.
4 அவர்கள் தமது விக்கிரகங்களைப் பொன்னாலும் வெள்ளியாலும் அழகுபடுத்துகின்றனர்.
அவர்கள் ஆணிகளையும், சுத்திகளையும் பயன்படுத்தி, விக்கிரகங்கள் விழாமல் செய்கிறார்கள்.
எனவே, அவை விழுவதில்லை.
5 அயல்நாடுகளில் உள்ள விக்கிரகங்கள் வெள்ளரிக்காய் வயலிலே,
குருவிகளை விரட்டுவதற்காக வைக்கப்பட்ட கொல்லை பொம்மையைப் போன்றுள்ளன.
அவர்களின் விக்கிரகங்களால் பேசமுடியாது.
அவர்களின் விக்கிரகங்களால் நடக்கமுடியாது.
ஜனங்கள் அந்த விக்கிரகங்களைத் தூக்கிச் செல்லவேண்டும்.
அவற்றுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்.
அவைகளால் உங்களைக் காயப்படுத்த முடியாது.
அவை உங்களுக்கு உதவியும் செய்யாது”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
6 கர்த்தாவே, உம்மைப் போன்று எவரும் இல்லை!
நீர் பெரியவர்!
உமது நாமம் மகிமையும் பெருமையும் வல்லமையும் வாய்ந்தது!
7 தேவனே! எல்லோரும் உமக்கு மரியாதைச் செலுத்தவேண்டும்.
அனைத்து தேசத்தாருக்கும் நீரே அரசன்.
அவர்களின் மரியாதைக்கு நீர் பாத்திரர்.
அந்த நாடுகளுக்கிடையில் பல ஞானமுள்ளவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் எவரும் உம்மைப் போன்று ஞானமுள்ளவர்கள் இல்லை.
8 வேறு நாடுகளில் உள்ள, அனைத்து ஜனங்களும், அறியாமையும், மூடத்தனமும் கொண்டவர்கள்.
அவர்களின் போதனைகள் பயனற்றவை.
அவர்களின் தெய்வங்கள் மரச் சிலைகளே.
9 அவர்கள் தர்ஷீசிலிருந்து கொண்டுவந்த வெள்ளியையும்
ஊப்பாசிலிருந்து கொண்டு வந்த பொன்னையும் வைத்து அந்தச் சிலைகளைச் செய்திருக்கின்றனர்.
அந்த விக்கிரகங்கள், தச்சன்களாலும், தட்டான்களாலும் செய்யப்பட்டவை.
அவர்கள் அந்த விக்கிரகங்களுக்கு, இளநீலமும், ஊதா ஆடையும் அணிவிக்கிறார்கள்.
“ஞானமுள்ளவர்கள்” அந்த “தெய்வங்களைச்” செய்கின்றனர்.
10 ஆனால் கர்த்தர்தான் உண்மையான ஒரே தேவன்.
உண்மையில் ஜீவனுள்ள ஒரே தேவன் அவர்தான்!
அவர் என்றென்றும் ஆளுகின்ற அரசன்!
தேவன் கோபங்கொண்டால் பூமி அதிர்கிறது,
தேசங்களிலுள்ள ஜனங்களால் அவரது கோபத்தை தாங்க முடியாது.
11 “அந்த ஜனங்களிடம் இந்தச் செய்தியைக் கூறுங்கள்,
‘அந்தப் பொய்த் தெய்வங்கள் பரலோகத்தையும் பூமியையும் படைக்கவில்லை.
அந்தப் பொய்த் தெய்வங்கள் அழிக்கப்படுவார்கள்.
வானம் மற்றும் பூமியிலிருந்து மறைவார்கள்’” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
12 தேவன் ஒருவரே தமது வல்லமையால் பூமியைச் செய்தார்.
தேவன் தனது ஞானத்தைப் பயன்படுத்தி பூமியை உண்டாக்கினார்.
தேவன் தமது ஞானத்தினால்
பூமியின்மேல் வானத்தை விரியச் செய்தார்.
13 சத்தமான இடிக்கும் தேவனே காரணமாகிறார்.
வானத்திலிருந்து பெருவெள்ளம் பொழியவும் அவரே காரணமாகிறார்.
அவர் பூமியின் அனைத்து இடங்களிலிருந்தும் வானத்திற்கு மேகம் எழும்பும்படி செய்கிறார்.
அவர் மின்னலுடன் மழையை அனுப்புகிறார்.
அவர் தமது பண்டகச் சாலையிலிருந்து காற்றை அனுப்புகிறார்.
2008 by World Bible Translation Center